rudrateswarar

rudrateswarar

Thursday, January 7, 2016

மங்கையர்க்கரசியார் பிறந்த மண்ணில்

                                               ஓம் நமசிவாய


மங்கையர்க்கரசியார் பிறந்த மண்ணில்


பழையாறை  இது மானி என்ற இயற்பெயர்   கொண்ட  திருஞானசம்பந்தர் பெருமானால் மங்கையர்க்கரசி என்று புகழப்பெற்ற சோழ இளவரசியும் பின் பாண்டிமாதேவி யுமான மங்கையர்க்கரசி நாயனார் அவதரித்த புண்ணிய பூமி   இவர் தந்தை  மணிமுடி சோழர். சோழ மன்னர் களின் தலைநகர்களில் ஒன்றாக இருந்த தலம். பட்டீச்சரத்திலிருந்து 3 கிலோமீட்டரில் உள்ளது  

தான் பிறந்த சோழ வம்சத்திற்கும் புகுந்த
வீடான பாண்டியர் குலத்திற்கும் பெருமை சேர்த்து உலக மங்கையர் அனைவருக்கும் அரசி ஆனவர் .

இவர் பிறந்து சிறந்த சிவபக்தையாக சிவநெறி நின்று தான் புகுந்த பாண்டியநாட்டை சமண இருள் நீக்கி சைவ ஒளியேற்றிய மாதரசி ஆவார்

இந்த மாதரசி சிறு பிராயத்தில் வழிபட்ட பிறந்த மண்ணில் பழையாறையில் உள்ள சிவாலயம் மாடக்கோயில் ஒருகால பூசை
கூட  சரிவர நடக்காமல் பிரதான கோபுரம் சிதிலமடைந்து சுற்றுசுவர் இடிந்து பார்ப்போர் கண்ணிலிருந்து உதிரம் சிந்தும் அளவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட பெருமைக்குரியது  இராசேந்திர சோழனை குந்தவைப பிராட்டியார் இவ்வூரில் தான் வளர்த்துள்ளார் சோழர்கள் வாழ்ந்த ஊர் சோழன் மாளிகை எனப்படுகிறது இராசராச சோழன் இறுதிக்காலத்தை பழையாறையில் கழித்தபோது மரணமடைந்து  உடையாளூரில்  சமாதி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.நமது நாயன்மார்களில் ஒருவரான   அமர்நீதி நாயனாரின் அவதார தலமும் இதுவே 
இதற்கு அருகில் திருநாவுக்கரசு சுவாமிகள் உண்ணாநோன்பிருந்து சமணர் மறைத்த இறைவரை வெளிக்கொணர்ந்த வடதளி பாடல் பெற்ற தலமும் அமைந்துள்ளது  
http://palayaarai.blogspot.in/ மேலும் படங்கள் இந்த வலைப்பூவில் காணலாம்  

இறைவர் -சோமேசர் சோமநாத சுவாமி 
இறைவி  -சோமகலாம்பிகை 
தீர்த்தம்    - சோம தீர்த்தம் 

  பாண்டிய சாம்ராஜ்ஜியத்தையே சைவ விளக்கேற்றி வாழ வைத்த அந்த மாதரசி பிறந்த மண்ணில் ஆலயம் சிதிலமடைந்துள்ளது உண்மையான வருத்தமான விஷயம். அடியேன் கடந்த வாரம் அங்கு சென்று உள்ளூர் அன்பர்களிடம் விசாரித்த போது எங்களால் திருப்பணி செய்ய பொருளாதாரம் இல்லை, யாராவது முன்னின்று செய்தால் முழுமையான  ஒத்துழைப்புடன் இனி நல்ல நிலையில் பார்த்துகொள்வோம்  என்று கூறினார்கள்

அடியேனுடைய தாழ்மையான வேண்டுகோள் இவ்வளவு சிறப்பு பெற்ற ஆலயம் இம்மண்ணுலகம் உள்ள மட்டும் மங்கையர்க்கரசியார் பெயர் சொல்ல வேண்டும். சைநெறி கலங்கரை விளக்காக வழிகாட்ட வேண்டும் . அதற்கு சிவநேயச் செல்வர்கள் யாராவது முன்னெடுத்து புனரமைப்பு செய்தால் அவர்கள் பாதம் கழுவி பாத பூசை செய்ய தயாராக உள்ளேன். அந்த புண்ணியவான் மிக விரைவில் கிட்ட மங்கையர்க்கரசியார் குருபூசை கொண்டாடும் வேளையில் இறைவனிடம் பிரார்த்திப்போம் 

மேலும் இவ்வாலயம் ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமி மலை சுவாமிநாதர்  ஆலய நிர்வாகத்திற்கு உட்பட்டது இந்து அறநிலைய துறை மனது வைத்தாலும் இந்த கோயில் புனரமைப்பு செய்யலாம்   
கோயிலைப்  பற்றி வேண்டுகோளுடன் ஒரு ப்ளெக்ஸ் போர்ட் (FLEX  BOARD) வைத்தாலே அதைக் கண்ணுறும் மெய்யன்பர்கள் யாராவது திருப்பணி செய்ய அமைவார்கள் திருப்பணிக்கென ஒரு குழு அமைத்து பிள்ளையார் சுழி போட்டாலே எல்லாம் அவனருளால் முடியும் ஊர் கூடினால் தேர் தானாக வரும். செய்வோமா? சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு .கே அன்பழகன் அவர்களும் தன்னால் இயன்ற உதவிகளை நல்குமாறு கேட்டுக்கொள்வோம் .



                          போற்றி ஓம் நமசிவாய 


                                திருச்சிற்றம்பலம் 

2013 ஆம் ஆண்டு மே திங்கள் 6 ஆம் நாள் அடியேன் இந்த 
ஆலயம் பற்றி மேலே உள்ளதை வெளியிட்டு இருந்தேன் 

எம்பெருமானின் பெருங்கருணையினால் சிவபாதசேகரன்  திருப்பணிசெம்மல் எங்கள் கோவை பெற்ற புண்ணிய மைந்தர் சிவத்திரு இரா .வசந்தகுமார் அய்யா அவர்களின் அளப்பரிய பெரும்பங்களிப்பால் 
எதிர்வரும்  தை திங்கள் 15 ஆம் நாளில் (29-01-2016) குடமுழுக்கு நடைபெறுகிறது என்பதை மிகுந்த உவகையோடு கூறிகொள்கிறேன்

காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின்கருதரிய
ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர்நண்ணரிய
ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன்அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்துமுந்துமினே


மெய்யடியார்களும் பக்தகோடிகளும் வந்து எம்பெருமானின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் 


                                   போற்றி ஓம் நமசிவாய 

                                         திருசிற்றம்பலம்