rudrateswarar

rudrateswarar

Tuesday, December 5, 2017

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 12

                                                            ஓம்நமசிவாய


தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 12
             

                           திருச்சிற்றம்பலம்


சென்ற பதிவுகளில் தமிழ்வேள்வி வழிபாட்டின் தீட்சா அனுஷ்டான அபத்தக் கிரியைகளும் திருமுறைவழியில் சிவபூசை என்ற பாவனை மந்திரம் இல்லா பூசையினால் ஒரு பலனும் இல்லை என்று நிறுவினோம். இப்பதிவில் முறையான தீட்சை என்னகொடுக்கும் என்று பார்ப்போம்
 

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே - திருமந்திரம்



அஞ்ஞானம்( குருடு ) நீக்கி ஞானத்தை நல்கும் குருவினைக் கொள்ளாதவர்
தன்னுடைய அஞ்ஞானத்தை ( குருடு ) நீக்கிக் கொள்ளாத குருவை அடைவர் . இந்த குருடும் (குரு) குருட்டைப்போக்கிக் கொள்ள வந்த( சீடன் ) குருடும் ஆக இரண்டு குருடுகளும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடி இரண்டு குருடுகளுமே (குரு + சீடன் ) குழியில் வீழ்வர் .வழிகாட்டுகிறேன் என்று வந்தவரும் குருடு ஆதலால் இருவருமே அஞ்ஞானக் குழியில் (பிறவி ) மூழ்கி கரை காணாமல் இருப்பர்


குருவானவர் சிவஞானத்தை நல்குபவராக இருக்கவேண்டும் .அதற்கு அவர் நல்ல உபதேச குருபாரம்பரியத்தில் வந்தவராய் இருந்தால் கண்டிப்பாக நல்குவார். அவரே சிவஞான போதம் எட்டாம் சூத்திரப் பொருளில் வரும் குரு. பொருள் பற்றியும் தீட்சையின் தாற்பரியம் என்ன என்பதை அறியாமலும் போலிச்சாமியார்களைப் போல் ஆன்மாக்களை ஏமாற்றி உலா வருகின்றனர். உலகியல் ஆரம்பக்கல்விக்கே டெட் என்ற தேர்வில் தேறவேண்டும் எனில் பிறவாமையைத் தரும் இந்த தீட்சாகுரு வானவர் எவ்வளவு உயர்ந்தவராக இருக்க வேண்டும்
 

தீட்சை என்றால் என்ன ?






தீட்சை என்றால் உயிரைப்பற்றிய ஆணவ மலத்தைக் கெடுத்து சிவஞானத்தை கொடுப்பது . உடலுக்கு பலசடங்குகள் செய்யப் படுகின்றன அது போல உயிராகிய ஆன்மாவிற்கு செய்யக்கூடிய சடங்கே தீட்சை. எப்படி வாகனம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையோ நிலம் வாங்க பத்திரப் பதிவு அவசியமோ தொழில் துவங்க தொழில் உரிமம் தேவையோ அது போல சிவசம்பந்தம் எனும் ஆரம்பப்படி நிலையை உறுதிபடுத்திக்கொள்ளவும் இம்மை மறுமை நலன்கள் பெறவும் சிவபெருமான் திருவருள் பெறவும் உரிமம் எனும் (தீட்சை) தேவை . பச்சை நெல் முளைக்கும் .வறுபட்ட நெல் முளைக்காது . அது போல குருநாதர் சிவபெருமானின் பிரதிநிதியாக இருந்து உயிர்களின் மலத்தை பாவனா கிரியைகளின் மூலம் நீக்குவார் . நம் மலம் கெட நம்முள் இருக்கும் சிவம் மேலெழும் .அதன் மூலம் சிவசம்பந்தம் ஏற்பட்டதனால் சிவமே எல்லாம் என் உணர்வோம் .பொருள் பற்று ஒழியும் . முதல்வன் அருளிய வேதாகமங்களில் தெளிவோம் .சிவாலயத்தைப்பேணுவோம் . சிவனடியார்களைப் பேணுவோம். சிவத்துக்கு அணுக்கமாய்ச் சிவாலயத்தில் முப்போதும் திருமேனி தீண்டும் சிவாச்சார்யப் பெருமக்களைப் பேணுவோம் .சிவம் நம் சிந்தையில் வந்தபின் எல்லா சிவகைங்கர்யங்களும் செய்ய முற்படுவோம் .அதுவே நமக்கு முத்தி எனும் வீடுபேற்றை நல்கும்.






எந்த வயதினரும் (7வயது முதல் ) எந்த வயதிலும் ஆண் பெண் இருபாலரும் தீட்சை பெறலாம். தீட்சை பெறாதவர்கள் திருநீற்றை நீரில் குழைத்து முப்பரிமாணமாக (திரிபுண்டரமாக) பூச முடியாது. உயர்ந்த மந்திரமான ஐந்தெழுத்தை உச்சரிக்க முடியாது. மாதா பிதா குரு தெய்வம் என்பது தான் சைவம் காட்டும் நன்னெறியாகும் .எனவே தகுந்த குரு மூலம் தீட்சை பெற்று ஐந்தெழுத்து ஓதும் அதிகாரம் பெற வேண்டும் நமது சமயக்குரவர்களும் சந்தானக் குரவர்களும் நமக்கு அருளியது அதுவே . அவர்கள் அருளியதே நமக்கு பிரமாணம் . ஸ்ரீ இராமனுக்கு அகத்தியரும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு உபமன்யு முனிவரும் சிவ தீட்சை செய்து வைத்துள்ளார்கள்


ஏன் தீட்சை பெற வேண்டும் ?


1. சிவபெருமானை ஆகமங்களில் விதித்தபடி வழிபாடு செய்வதற்குரிய அதிகாரம் பெற்று ஐந்தெழுத்து ஓதி முப்புரிமாணமாக திருநீறு அணிந்து பூசை செய்யலாம் .


2. தீட்சை பெற்றால் ஞானம் பெறலாம் ஞானத்தின் வாயிலாக வீடுபேறு எனும் முக்தி பெறலாம்.


3.சமய தீட்சை பெற்றாலே அவர்களை எமன் அணுக மாட்டான். அதனால் நரகம் இல்லை . அந்த உயிரை வாங்க ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் தான் அதிகாரம் பெற்றவர் .


4.விசேட தீட்சை பெற்றால் அவ்வுயிரை அனந்த தேவர் வாங்குவார்


5.நிர்வாண தீட்சை பெற்றால் சதாசிவ மூர்த்தி வாங்குவார் .


6.உயிரை எமன் வாங்காததால் நரகதுன்பம் ஆவியுலக துன்பங்கள் நம்மை அணுகா .


7.நமது வாரிசுகள் நமக்கு பிதுர் கடன் ஆற்றா விட்டாலும் கூட ஆவியுலக இன்னல் இல்லை


8.இறைவன் தீட்சா கிரியையின் மூலம் மட்டுமே பாவமன்னிப்பு அருளுகிறார்


9.பில்லி சூன்யம் ஏவல் கண்திருஷ்டி இவை நெருங்காது


10.பிராணயாமம் செய்யும் போது இருதய நோய் வராது . மாரடைப்பு நெருங்காது .


11.சிவோகம்பாவனைகள் மூலம் மனம் அடங்கும் நிம்மதி கிட்டும் ஐம்பொறி களும் நமக்கு குற்றேவல் புரியும் .அப்பர் பெருமான் அதை பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி என்றதன் மூலம் அறியலாம். பாவனையானது உயிரைத் தூய்மைப் படுத்தும்


12.நியாசம் எனும் அங்கசுத்தி செய்வதன் மூலம் வியாதி நீங்கும் அது தான் இன்றைய ரெய்கி


13. முத்திரைகள் பிடிப்பதால் பிசியோதெரபி செய்யும் பலன் கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான வியாதிகள் நெருங்காது .


14. தீட்சை பெற்று ஆன்மார்த்தபூசை செய்வதன் மூலம் நமது வினைகள் குறையும் (முற்பிறவி பாவங்கள் சஞ்சிதம் ). ஆகாமியம் ஏறாது .


15.தீட்சை பெறாதவர்கள் செய்யும் பூஜாபுஷ்பங்கள் நிர்மால்யம் ஆகாது.


ஆன்மாவுக்கு இவ்வளவு நன்மைகள் அருளும் இந்த தீட்சையைக் கொச்சைப் படுத்தும் விதமாக தமிழ்வழி தீட்சை என்றும் திருமுறைவழி சிவபூசை என்றும் முறையாக ஆச்சார்ய அபிஷேகம் பெறாதவர்கள் கூறிக்கொண்டு மக்களை நற்கதிக்கு செல்லவிடாமல் ஏமாற்றிக்கொண்டுள்ளது மாபெரும் சிவாபராதம்.
அந்த சிவதுரோகிகளிடம் தீட்சை என்ற போலியான செயலுக்கு சென்று உங்கள் வாழ்நாளை வீணாக்காதீர்கள் . சிவாபராதத்திற்கு துணையாகாதீர்கள் .
 

தகுந்த குருவுவிடம் ஆகமத்தில் சொல்லப்பட்ட படி தான் தீட்சைபெற வேண்டும். தீட்சாகிரியை பற்றி ஆகமத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ளது . வேறெங்கும் சொல்லப்படவில்லை.அந்த பரம்பொருளை அடைய அவர் கொடுத்த ஆகமமே சரியான மார்க்கமாகும் . மொழிபற்றி அறியாமையில் பிதற்றுவோர் நிலைமை பதிவின் முதல் பாடலுக்கு ஒப்பாவார் .


                              திருச்சிற்றம்பலம்