rudrateswarar

rudrateswarar

Saturday, April 12, 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்


                                ஓம் நமசிவாய

புத்தாண்டு வாழ்த்துக்கள்


தமிழ் கூறும் நல்ல உள்ளங்களுக்கு சிவனை சிந்தையில் வைத்து நாளும் அவன் தாள் வணங்கும் அடியார் பெருமக்களுக்கும் சிவநேய செல்வங்களுக்கும் இந்த சிறியேன் சிவனடிமையின் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்



                             திருச்சிற்றம்பலம்


வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் 
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக 
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே 
சூழ்க வையகமும் துயர் தீர்கவே .
 
 
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் 
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட 
மன்றுளார் அடியார் அவர் வான்புகழ் 
நின்றது எங்கும் நிலவி உலகெலாம் 
 
 
வையம் நீடுக மாமழை மன்னுக 
மெய் விரும்பிய அன்பர் விளங்குக 
சைவ நன்னெறி தான் தழைத்தோங்குக
தெய்வ வெண் திருநீறு  சிறக்கவே


வான்முகில் வழாது பெய்க
            மலிவளம் சுரக்க மன்னன் 
கோன்முறை அரசு செய்க
           குறைவிலாது உயிர்கள் வாழ்க 
நான்மறை அறங்கள் ஓங்க
           நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி
           விளங்குக உலகமெல்லாம் 



எல்லாம் வல்ல சிவபரம்பொருளின் பேரருள் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும் 


அடியேன் 
சிவனடிமை வேலுசாமி


                        போற்றி ஓம் நமசிவாய 


                             திருச்சிற்றம்பலம்  

தொகையடியார்கள் குருபூசை


                                  ஓம் நமசிவாய

தொகையடியார்கள்  குருபூசை



பங்குனித் திங்கள் இறுதி நாளில் எட்டுத்  தொகையடியார்கள் குருபூசை  நடைபெறும் 


1.பொய்யடிமை இல்லாத புலவர் 

2.பத்தராய்  பணிவார்

3.பரமனையே பாடுவார் 

4.சித்தத்தை சிவன்பாலே வைத்தார் 

5.திருவாரூர்ப் பிறந்தார் 

6.முப்போதும் திருமேனி தீண்டுவார் 

7.முழு நீறு பூசிய முனிவர் 

8.அப்பாலும் அடிசார்ந்தார்


மற்ற எந்த நாளில் எந்த குருபூசைக்கும் சென்று கலந்து கொள்ளாதவர்கள் கூட இந்த நாளில் சென்று வணங்க அனைத்து அடியார்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கப்பெறும் .இந்த தொகையடியாரில் அடங்காத சிவனடியார்கள் இருக்க முடியாது. எனவே மாகேச்வர பூசை எனும் அடியாரை வணங்கும் குரு பூசை பங்குனி இறுதி நாளான 13-04-2014 ஞாயிறு அன்று வருகிறது .


அது போலவே முதல் தொகையடியாரான தில்லைவாழ் அந்தணர் குருபூசை  சித்திரை முதல் நாள் நடைபெறும் அன்று சித்ரா பௌர்ணமி நாளும் கூட .இறைவனே அடியெடுத்துக் கொடுத்த இறைவனே அடியாருள் ஒருவனாகியும் இருந்த தில்லைவாழ் அந்தணர் குருபூசையிலும் கலந்து கொள்வோமாக
  

அடியாரை வணங்குவோம் 
அரனடி சேர்வோம்



                        போற்றி ஓம் நமசிவாய 



                            திருச்சிற்றம்பலம்

பிரதோஷத் திருமுறை பாடல்கள்


                                 ஓம் நமசிவாய


பிரதோஷத் திருமுறை பாடல்கள்

திருமுறை -1

ஆலக் கோலத்தின்  நஞ்சுண்டு அமுதத்தைச்
சாலத் தேவர்க்கு ஈந்தளித்தான் தன்மையால்

பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால்

காலல் காய்ந்தானூர் காழிந் நகர்தானே


திருமுறை-2

உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா  என்றுள்கித்
தொண்டாய்த் திரியும்  அடியார் தங்கள் துயரங்கள்
அண்டாவண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும்
வெண்டாமரை மேல் கருவண்டு யாழ்செய் வெண்காடே 


திருமுறை -3    


ஆலநீழலுகந்த திருக்கையே ஆன
          பாடலுகந்த திருக்கையே
பாலின் நேர்மொழியாள் ஒரு பங்கனே 

          பாத மோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு பூதனே கோதிலார் 

          மன மேவிய பூதனே
ஆலநஞ்சுஅமுதுண்டகளத்தனே 

         ஆலவாயுறை அண்டர்கள் அத்தனே

திருமுறை -4

ஆலலால் இருக்கையில்லை அருந்தவ முனிவர்க்கு அன்று
நூலலால் நொடிவதில்லை நுண்பொருள்  ஆய்ந்து கொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலரடி வணங்க வேலை
ஆலலால் அமுதமில்லை ஐயன் ஐயாற னார்க்கே 


திருமுறை -5

ஆலமுண்டடு அழகாயதொர் ஆனையார்
நீலமேனி நெடும் பளிங்கு ஆனையார்
கோலமாய கொழுஞ் சுடர் ஆனையார்
காலவானை கண் டீர் கடவூரரே 


திருமுறை -6

ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை
ஆலதன்கீழ்அறம்நால்வர்க்கருள்செய்தானைப்
பாலாகித் தேனாகிப் பழமுமாகிப்

பைங்கரும்பாய்அங்கருந்தும் சுவையானானை
மேலாய வேதியர்க்கு வேள்வியாகி
வேள்வியினின் பயனாய விமலன் தன்னை
நாலாய மறைக்கு இறைவன் ஆயினானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே



திருமுறை -7

ஆலந்தான் உகந்தமுது செய்தானை
        ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடை யானைச்
         சிந்திப்பார்  அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
         என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
         காணக் கண் அடியேன் பெற்றவாறே 


திருமுறை -8

கோலாலமாகிக் குரைகடல்வாய்   அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான்  என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன் மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ 


திருமுறை -9 (திருவிசைப்பா)

கோலமே மேலை வானவர் கோவே
           குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
           காலகாலா காமநாசா
ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொற்
           கோயில் கொண்டாட வல்லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
           தொண்டனேன் நணுகுமா நணுகே. 


திருமுறை -9 (திருப்பல்லாண்டு )

சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
           தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண்டில் சிதையும் சில தேவர்
           சிறுநெறி சேராமே
வில்லாண்ட கனகத்திரள் மேரு
           விடங்கன் விடைப்பாகன்
பல்லாண்டென்னும் பதம் கடந்தானுக்கே
            பல்லாண்டு கூறுதுமே 


திருமுறை -10 

அண்டமொடு எண்திசை தாங்கும் அதோமுகம்
கண்டம் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே


திருமுறை -11

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு 


திருமுறை -12

விண்ணாள்வார் அமுது உண்ண
            மிக்கபெரு விடம் உண்ட
கண்ணாளா கச்சி ஏகம்பனே  

           கடையானேன்
எண்ணாத பிழை பொறுத்திங்கு
           யான்காண எழில் பவள
வண்ணா கண்ணளித்து அருளாய்
           என வீழ்ந்து வணங்கினார் 




                      போற்றி ஓம் நமசிவாய 


                            திருச்சிற்றம்பலம்  

Friday, April 11, 2014

மகாபிரதோஷம் 26-04-2014

      
                                            ஓம் நமசிவாய 



மகாபிரதோஷம் 26-04-2014




பிரதோஷ நேரம்  என்பது சிவபெருமான் ஆலம் உண்டு உயிர்களை காத்த நேரம்  சூரிய அஸ்தமனத்திற்குமுன் ஒன்றரை மணி நேரம் அஸ்தமனத்திற்கு பின் ஒன்றரை மணி நேரம் அதாவது மாலை சுமார் 4.30 மணி முதல் 7.30 மணி வரை . இது சிவனை வழிபட ஏற்ற  புண்ணிய காலம் இறைவன் நஞ்சை உண்ட அயர்ச்சி மேலிட இருப்பது போல் இருந்தார். அந்நேரம்  என்ன ஆகுமோ என்று மூவரும்  தேவர்களும் அன்னையும் தவித்தனர்
 
அப்பொழுது ஜீவராசிகள் அனைத்தும் உய்வு  பெறவும் புத்துணர்ச்சி வழங்கும் பொருட்டும்  மகாதேவர்  நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கிடையே எழுந்தருளி திருநடனம் புரிந்தருளினார் . உயிர்களின் இயக்கம் சீராகவும் அவர்கட்கு உற்சாகம் அளிக்கவும் கருணைக்கடல் திருநடனம் புரிந்தார் ஆகவே குறைபாடான அந்த நேரத்தில் நாம் இறைவனை வழிபட நம் குறை களைந்து துயர் துடைப்பான்,அந்த நேரத்தில் சகல தேவர்களும்  மால் அயன் உள்ளிட்ட அனைத்து  ஜீவராசிகளும் சிவனை துதித்து வணங்கிப் பேறு பெறுகின்றன . எனவே அரிய மானுடப் பிறப்பாகிய நாமும் சிவனையும் நந்தியெம்பெருமானையும்  அபிஷேகித்து, அர்ச்சித்து ,ஆராதித்து  ஐந்தெழுத்து ஜெபித்து தொழுது  வலம் வந்து  நமது ஆன்மா எனும் உயிரை புத்துணர்வு செய்து கொள்ளலாம்

பிரதோஷ காலங்கள் ஐந்து வகை.

1.நித்திய பிரதோஷம்,
2.பஷ பிரதோஷம்,
3.மாத பிரதோஷம்,
4.மகா பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்.

தினமும் மாலை வேளையில் வருவது நித்ய பிரதோஷம் எனவும், வளர்பிறையில் வரும் பிரதோஷம் பட்ச பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும்,சனிக்கிழமைகளில் வருவது மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வருவது  பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்ய வழிபட மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.பெருமான் நஞ்சை உண்டு உலக உயிர்கள் அனைத்திற்கும் ஒருங்கே அருள் பாலித்த நேரம்

பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. அதாவது பகல் முடிந்து இரவு துவங்கும் அந்த சந்தியாகாலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் தத்தம்  கூட்டில் ஒடுங்குகின்றன பின் உறங்குகின்றன அதாவது அங்கு மறைத்தல் தொழிலை இறைவன் நிகழ்த்துகிறார் அதன் பொருள் உயிர்கள் தமது சக்தியை  இழக்கின்றன ஏன் ? சூரியன் என்ற திருவருள் வெளிச்சம் முடிந்து இருள் எனும் மாயை உயிர்களை பற்றுகிறது அவ்வேளையில் நாம் இறைவனை வணங்கி வழிபட்டு இழந்த வற்றை மீட்டுக்கொள்ள உகந்த வேளை பிரதோசவேளை எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.பிரதோஷ நேரத்தில் சிவபெருமான்  எல்லாவற்றையும் தன்னுள்ளே  அடக்கிக் கொள்கிறார்

பிரதோஷ நேரத்தில் சிவனின் ஆனந்த நடனத்தை மால்அயன்இந்திராதிதேவர்களும் முனிவர்களும் கண்டுகளிக்கிறார்கள்
 

சிவபெருமான் விஷம் உண்ட நிகழ்ச்சி நடந்தது ஒரு திரயோதசி திதி சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது அன்று நாம் வழிபடுவது ஐந்து ஆண்டு சிவாலய தரிசனம் செய்ததற்கு சமமானது
 

பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.பிரதோஷ நேரத்தில் சிவாலயம் செல்ல  இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.

இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதி தேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவி சாயா தேவி எனும் பிரத்யுஷாதேவி அவள் பெயரால் அந்த நேரம் சாயங்காலம் அல்லது பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டு  நாளடைவில் பிரதோஷ காலம் ஆகிவிட்டது.

பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் நற்பலன்கள் கிட்டும்
ஒரு சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வர, ஈசுவரனிடம் நாம்  வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.
பிரதோஷ நாட்களில் தவறாது விரதமிருந்து வழிபட கடன், வறுமை, நோய், பயம், மரண பயம் கோள்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.கல்விச்செல்வம் பொருட்செல்வம் மக்கட்செல்வம் தொழில்வளம் நோயற்ற வாழ்வு நிம்மதி எல்லாம் கிடைக்கும் 

பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.


ஆண்டுக்கு 25 தடவை பிரதோஷம் வருகிறது. ஒவ்வொரு பிரதோஷத்திலும் வில்வ இலை கொண்டு பூஜித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது என்ன ? செய்யக்கூடாதது என்ன ?

செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கலாம் ஆனால் செய்யக்கூடாததை செய்யாமல் இருக்க வேண்டும் அல்லவா?


செய்யத்தகாதவை 


 

1.உணவு அருந்தக்கூடாது முடிந்தால் நீர் பருகுவதை கூட தவிர்க்கலாம். கோவில் பிரசாதம் கூட பிரதோஷ காலம் முடிந்த பின் எடுத்துக்கொள்ளலாம்.திருவிளையாடல் புராணத்தில் இறைவன் மேல் விழுந்த அடி அனைத்து உயிர்களின் மேல் விழுந்தது எனவே இறைவன் நஞ்சு உண்ட காலத்தில் நாம் அருந்தும் உணவு விஷத்திற்கு சமம் .

 

2.உறக்கம் தவிர்க்க வேண்டும்          (மற்ற நாட்களிலும் 4.30 to 7.30மணி வரை )

 

3. அதிகமாக அலங்கரித்துக் கொள்ளக்கூடாது  

4.ஆலயம் சென்றால் அரட்டை அடித்தல் கூடாது அரன் நாமம் அன்றி வேறு பேசக் கூடாது    

 

5.மலஜலம் கழிப்பதை முன் கூட்டியே முடித்துக் கொள்ளவேண்டும்

  

6.ஒன்றுக்கொன்று முண்டியடித்து தகராறு செய்வது அடியோடு கூடாது பொறுமையுடன் அமைதி காக்க வேண்டும்

  

7.பக்தி பாடல் என்ற பெயரில் சினிமா பாடல்  பாட கூடாது 

 

8.கண்ட இடங்களில் விழுந்து வணங்க கூடாது கொடிமரத்தின் அருகில் மட்டுமே விழுந்து வணங்கவேண்டும் 

 

9.சண்டிகேசுவரர் சந்நிதியில்நூல்போடுவதும்  சத்தமாக கை தட்டுவதும் கூடாது.

எந்நேரமும் சிவநிஷ்டையில் இருக்கும் அவரை தொந்தரவு செய்வது சிவாபராதமாகும்

 

10.அன்று நாள் முழுதும் இரவு வரை விரதம் இருக்காமல் இருந்தாலும் பரவாயில்லை தவறியும் அசைவம் கூடாது   

 

11.தீட்சை பெற்றவர்கள் தங்களது நித்ய கடமையான அனுஷ்டானம்சந்தியாவந்தனம் பூஜை போன்ற கிரியைகளை அந்த நேரத்தில் செய்யகூடாது
12.ஆலயங்களில் உள்ள மூர்த்தங்களைத்  தொட்டு வணங்க கூடாது .குறிப்பாக நந்தியின் காதுகளில் சொல்வதை தவிர்க்க வேண்டும் .ஆணவமலமுள்ள அசுத்த மாயா காரியமான நம் பூத உடம்பின் எச்சில் வாயால் ஞானவடிவான நந்தியின் காதில்  வேண்டாதவற்றை கோரிக்கை என்ற பெயரில் சொல்வது கொடிய பாவசெயல் எனவே இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்று .        



செய்யத்தகுந்தவை  

 

1.பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகிய திருநீறு உருத்திராட்சம் அணிந்து உள்ள சுத்தியோடு ஆலயம் செல்ல வேண்டும்.

 

2.வெறுங்கையோடு எப்பொழுதும் ஆலயம் செல்லாமல் பூ வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் வில்வம் என நம்மால் முடிந்த ஒன்றை கொண்டு செல்லவேண்டும்.

 

3.அபிசேகப்பொருட்கள்,திரவியங்கள் பால் பன்னீர் ,மஞ்சள் ,திருமஞ்சனம்,சந்தனம், தேன் இளநீர்  கொடுக்கலாம் 

 

4.ஆலயத்தை தூய்மை செய்து கொடுக்கலாம்

 

5.சிவபுராணம் ,லிங்காஷ்டகம் ,திருமுறை பதிகங்களை பண் தெரியாவிட்டாலும் நமக்கு தெரிந்தவகையில் பாடலாம் 

 

6.மேற்சொன்ன பாடல்கள் தெரியாது என்றால் வருத்தம் தேவையில்லை மிக எளிய பரம கருணா மூர்த்தியின் மூல மந்திரம்  
ஓம் நமசிவாய   சொல்லுங்கள், அதைவிட  உலகில் உயர்ந்த மந்திரம் ஒன்றுமில்லை
 

7.கிழக்கு மேற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் வடக்கு பார்த்தும் வடக்கு தெற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் கிழக்கு பார்த்தும் தலைவைத்து கொடிமரம் பலி பீடத்திற்கு அருகில் மட்டுமே  வணங்க வேண்டும்

 

8.சண்டிகேஸ்வரரை வணங்கி சிவதரிசன பலன்களை தந்தருளுங்கள் என்று வேண்டிக் கொள்ளவேண்டும் 

 

9.ஓம் நமசிவாய சொல்வதற்கு ஜப மாலை இல்லை எப்படி 108 முறை கணிப்பது என்று குழப்பம் தேவையில்லை மனமொன்றி சிவனை மனத்தில் நினைத்து  108 முறை நோட்டில் எழுதுங்கள் ,அது போதும்  

 

10. ஆலயம் வலம் வரும் போது கைகளை இடுப்புக்கு கீழே தொங்க விடாமலும் வீசி நடக்காமலும் பார்த்துக் கொள்ளவேண்டும்  

 

11.பெரிய புராணம் எனும் நாயன்மார்கள் வரலாற்றை படித்தும் கேட்டும் இன்புறலாம்        


இந்த பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில்  உலக உயிர்கள் மீது சிவபெருமான் கொண்ட கருணையின் காரணமாக இரண்டு சனி பிரதோஷங்கள் தொடர்ச்சியாக வருகின்றன . (12-04-2014 , 26-04-2014) அதை நாம் சரியாக பயன்படுத்தி நமது தீ வினைகளால் படும் அல்லல் தீர்ப்போம் சனிப்பிரதோஷ புண்ணிய வேளையில் சிவபெருமானையும் நந்தி தேவரையும் வணங்கி வழிபட்டு பெரும் பேறு பெறுவோமாக
                           

 

                      போற்றி ஓம் நமசிவாய 



                                                    

                          திருச்சிற்றம்பலம்

Saturday, April 5, 2014

சிவசிவ

                                                       ஓம் நமசிவாய

சிவசிவ 


திருமுறை பாராயணமோ அல்லது ஐந்தெழுத்து மந்திர ஜெபமோ நித்தமும் செய்ய இயலாதவர்கள் தினமும் கீழ்கண்ட பத்தாம் திருமுறை பாடலை 12 முறை ஓத வேண்டும். ஓதினால் என்ன கிடைக்கும் என்பது அப்பாடலிலேயே கருத்து வெளிப்படை  


சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.



இப்பாடலில் எண்ண சிவ எனும் மந்திரசொல் 9 முறை வருகிறது , 12 முறை சொல்ல 
9 X 12=108 வரும் .இதை நாள்தோறும் மிக எளிமையாக சொல்ல பாடலில் கூறியவாறு கிட்டும் என்பது திண்ணம் என்று திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் அவர்களின் அருள்வாக்கு. கிடைத்தற்கரிய இம்மானுடப்பிறவியை கடைத்தேற்றவும் 
இனி வரும் பிறவிக்கும் வருங்கால வைப்பு நிதியாகவும் இருக்கும் என்பது திண்ணம் .


                      போற்றி ஓம் நமசிவாய 


                          திருச்சிற்றம்பலம் 

திருமுறை பாராயணம்

                                                             ஓம் நமசிவாய


திருமுறை பாராயணம்


திருமுறை பாராயணம் செய்யும் அன்பர்களுக்கு ஒரு நடைமுறை உள்ளது அதன்படி பாராயணம் செய்தால் ஓராண்டுக்குள் பன்னிரு திருமுறைகளையும் ஓதி பாராயணம் செய்யமுடியும் .

வரும் புத்தாண்டில் சித்திரை முதல் தேதியில்  பாராயணம் தொடங்கி பிறப்பிலியாகிய எம்பெருமானை சேர்ந்து நாமும் அப்பேறு பெறுவோம்


1 ஆம் திருமுறை -சித்திரை முதல் தேதி 

2ஆம் திருமுறை -வைகாசி முதல் தேதி 

3ஆம் திருமுறை -ஆனி முதல் தேதி 

4ஆம் திருமுறை -ஆடி முதல் தேதி 

5ஆம் திருமுறை -ஆவணி முதல் தேதி 

6ஆம் திருமுறை -ஆவணி  20ஆம்  தேதி 

7ஆம் திருமுறை -புரட்டாசி 20ஆம் தேதி 

8ஆம் திருமுறை திருவாசகம் -ஐப்பசி 5ஆம் தேதி 

8ஆம் திருமுறை திருக்கோவையார் -ஐப்பசி 15 ஆம் தேதி 

9ஆம் திருமுறை திருவிசைப்பா - ஐப்பசி 25 ஆம் தேதி 

10ஆம் திருமுறை திருமந்திரம் -கார்த்திகை 5 ஆம் தேதி 

11ஆம் திருமுறை -மார்கழி முதல் தேதி 

12ஆம் திருமுறை - தை முதல் தேதி


குறித்த தேதி முதல் அடுத்த திருமுறைக் கான துவக்க தேதி வரை ஒரு திருமுறை ஓதும் காலமாகும் தினமும் சராசரியாக 5 பதிகங்கள் ஓத வேண்டும் . தொடங்கும் தினம் அனுசரித்து மொத்த பதிகங்களை கருத்தில் கொண்டு பிரித்து ஓதலாம் 

திருமந்திரமும் பெரியபுராணமும் தினம் சராசரியாக 100 பாடல்களுக்கு குறையாமல் ஓதினால் ஓராண்டில் பன்னிரு திருமுறை களையும் பாராயணம் செய்துவிடலாம் . கற்றதினால் ஆய பயன் பெறலாம் .



                        போற்றி ஓம் நமசிவாய 


                             திருச்சிற்றம்பலம்