rudrateswarar

rudrateswarar

Saturday, November 23, 2013

மகாபிரதோஷம் - கார்த்திகை

       
                                            ஓம் நமசிவாய 



மகாபிரதோஷம் - கார்த்திகை 



பிரதோஷ நேரம்  என்பது சிவபெருமான் ஆலம் உண்டு உயிர்களை காத்த நேரம்  சூரிய அஸ்தமனத்திற்குமுன் ஒன்றரை மணி நேரம் அஸ்தமனத்திற்கு பின் ஒன்றரை மணி நேரம் அதாவது மாலை சுமார் 4.30 மணி முதல் 7.30 மணி வரை . இது சிவனை வழிபட ஏற்ற  புண்ணிய காலம் இறைவன் நஞ்சை உண்ட அயர்ச்சி மேலிட இருப்பது போல் இருந்தார். அந்நேரம்  என்ன ஆகுமோ என்று மூவரும்  தேவர்களும் அன்னையும் தவித்தனர்
 
அப்பொழுது ஜீவராசிகள் அனைத்தும் உய்வு  பெறவும் புத்துணர்ச்சி வழங்கும் பொருட்டும்  மகாதேவர்  நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கிடையே எழுந்தருளி திருநடனம் புரிந்தருளினார் . உயிர்களின் இயக்கம் சீராகவும் அவர்கட்கு உற்சாகம் அளிக்கவும் கருணைக்கடல் திருநடனம் புரிந்தார் ஆகவே குறைபாடான அந்த நேரத்தில் நாம் இறைவனை வழிபட நம் குறை களைந்து துயர் துடைப்பான்,அந்த நேரத்தில் சகல தேவர்களும்  மால் அயன் உள்ளிட்ட அனைத்து  ஜீவராசிகளும் சிவனை துதித்து வணங்கிப் பேறு பெறுகின்றன . எனவே அரிய மானுடப் பிறப்பாகிய நாமும்
சிவனையும் நந்தியெம்பெருமானையும்  அபிஷேகித்து, அர்ச்சித்து ,ஆராதித்து  ஐந்தெழுத்து ஜெபித்து தொழுது  வலம் வந்து  நமது ஆன்மா எனும் உயிரை புத்துணர்வு செய்து கொள்ளலாம்

பிரதோஷ காலங்கள் ஐந்து வகை.

1.நித்திய பிரதோஷம்,
2.பஷ பிரதோஷம்,
3.மாத பிரதோஷம்,
4.மகா பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்.

தினமும் மாலை வேளையில் வருவது நித்திய பிரதோஷம் எனவும், வளர்பிறையில் வரும் பிரதோஷம் பஷ பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும்,சனிகிழமைகளில் வருவது மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வருவது  பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்ய வழிபட மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.பெருமான் நஞ்சை உண்டு உலக உயிர்கள் அனைத்திற்கும் ஒருங்கே அருள் பாலித்த நேரம்
 
பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. அதாவது பகல் முடிந்து இரவு துவங்கும் அந்த சந்தியாகாலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் தத்தம்  கூட்டில் ஒடுங்குகின்றன பின் உறங்குகின்றன அதாவது அங்கு மறைத்தல் தொழிலை இறைவன் நிகழ்த்துகிறார் அதன் பொருள் உயிர்கள் தமது சக்தியை  இழக்கின்றன ஏன் ? சூரியன் என்ற திருவருள் வெளிச்சம் முடிந்து இருள் எனும் மாயை உயிர்களை பற்றுகிறது அவ்வேளையில் நாம் இறைவனை வணங்கி வழிபட்டு இழந்த வற்றை மீட்டுக்கொள்ள உகந்த வேளை பிரதோசவேளை எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.பிரதோஷ நேரத்தில் சிவபெருமான்  எல்லாவற்றையும் தன்னுள்ளே  அடக்கிக் கொள்கிறார்
 
பிரதோஷ நேரத்தில் சிவனின் ஆனந்த நடனத்தை மால்அயன்இந்திராதிதேவர்களும் முனிவர்களும் கண்டுகளிக்கிறார்கள்
 

சிவபெருமான் விஷம் உண்ட நிகழ்ச்சி நடந்தது ஒரு திரயோதசி திதி சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது அன்று நாம் வழிபடுவது ஐந்து ஆண்டு சிவாலய தரிசனம் செய்ததற்கு சமமானது
 

பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.பிரதோஷ நேரத்தில் சிவாலயம் செல்ல  இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.
 
இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதி தேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவி சாயா தேவி எனும் பிரத்யுஷாதேவி அவள் பெயரால் அந்த நேரம் சாயங்காலம் அல்லது பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டு  நாளடைவில் பிரதோஷ காலம் ஆகிவிட்டது.
 
பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் நற்பலன்கள் கிட்டும்
ஒரு சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வர, ஈசுவரனிடம் நாம்  வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.
பிரதோஷ நாட்களில் தவறாது விரதமிருந்து வழிபட கடன், வறுமை, நோய், பயம், மரண பயம் கோள்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.கல்விச்செல்வம் பொருட்செல்வம் மக்கட்செல்வம் தொழில்வளம் நோயற்ற வாழ்வு நிம்மதி எல்லாம் கிடைக்கும் 

பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.


ஆண்டுக்கு 25 தடவை பிரதோஷம் வருகிறது. ஒவ்வொரு பிரதோஷத்திலும் வில்வ இலை கொண்டு பூஜித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் 

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது என்ன ? செய்யக்கூடாதது என்ன ? 


செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கலாம் ஆனால் செய்யக்கூடாததை செய்யாமல் இருக்க வேண்டும் அல்லவா?


செய்யத்தகாதவை 
 
1.உணவு அருந்தக்கூடாது முடிந்தால் நீர் பருகுவதை கூட தவிர்க்கலாம். கோவில் பிரசாதம் கூட பிரதோஷ காலம் முடிந்த பின் எடுத்துக்கொள்ளலாம்.திருவிளையாடல் புராணத்தில் இறைவன் மேல் விழுந்த அடி அனைத்து உயிர்களின் மேல் விழுந்தது எனவே இறைவன் நஞ்சு உண்ட காலத்தில் நாம் அருந்தும் உணவு விஷத்திற்கு சமம் .
 
2.உறக்கம் தவிர்க்க வேண்டும்          (மற்ற நாட்களிலும் 4.30 to 7.30மணி வரை )
 
3. அதிகமாக அலங்கரித்துக் கொள்ளக்கூடாது  
4.ஆலயம் சென்றால் அரட்டை அடித்தல் கூடாது அரன் நாமம் அன்றி வேறு பேசக் கூடாது    
 
5.மலஜலம் கழிப்பதை முன் கூட்டியே முடித்துக் கொள்ளவேண்டும்
  
6.ஒன்றுக்கொன்று முண்டியடித்து தகராறு செய்வது அடியோடு கூடாது பொறுமையுடன் அமைதி காக்க வேண்டும்
  
7.பக்தி பாடல் என்ற பெயரில் சினிமா பாடல்  பாட கூடாது 
 
8.கண்ட இடங்களில் விழுந்து வணங்க கூடாது கொடிமரத்தின் அருகில் மட்டுமே விழுந்து வணங்கவேண்டும் 
 
9.சண்டிகேசுவரர் சந்நிதியில்நூல்போடுவதும்  சத்தமாக கை தட்டுவதும் கூடாது.
எந்நேரமும் சிவநிஷ்டையில் இருக்கும் அவரை தொந்தரவு செய்வது சிவாபராதமாகும்
 
10.அன்று நாள் முழுதும் இரவு வரை விரதம் இருக்காமல் இருந்தாலும் பரவாயில்லை தவறியும் அசைவம் கூடாது   
 
11.தீட்சை பெற்றவர்கள் தங்களது நித்ய கடமையான அனுஷ்டானம்சந்தியாவந்தனம் பூஜை போன்ற கிரியைகளை அந்த நேரத்தில் செய்யகூடாது        

செய்யத்தகுந்தவை  
 
1.பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகிய திருநீறு உருத்திராட்சம் அணிந்து உள்ள சுத்தியோடு ஆலயம் செல்ல வேண்டும்.
 
2.வெறுங்கையோடு எப்பொழுதும் ஆலயம் செல்லாமல் பூ வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் வில்வம் என நம்மால் முடிந்த ஒன்றை கொண்டு செல்லவேண்டும்.
 
3.அபிசேகப்பொருட்கள்,திரவியங்கள் பால் பன்னீர் ,மஞ்சள் ,திருமஞ்சனம்,சந்தனம், தேன் இளநீர்  கொடுக்கலாம் 
 
4.ஆலயத்தை தூய்மை செய்து கொடுக்கலாம்
 
5.சிவபுராணம் ,லிங்காஷ்டகம் ,திருமுறை பதிகங்களை பண் தெரியாவிட்டாலும் நமக்கு தெரிந்தவகையில் பாடலாம் 
 
6.மேற்சொன்ன பாடல்கள் தெரியாது என்றால் வருத்தம் தேவையில்லை மிக எளிய ஏழை பங்காளனின் மூல மந்திரம்  
ஓம் நமசிவாய  சொல்லுங்கள், அதைவிட  உலகில் உயர்ந்த மந்திரம் ஒன்றுமில்லை
 
7.கிழக்கு மேற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் வடக்கு பார்த்தும் வடக்கு தெற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் கிழக்கு பார்த்தும் தலைவைத்து கொடிமரம் பலி பீடத்திற்கு அருகில் மட்டுமே  வணங்க வேண்டும்
 
8.சண்டிகேஸ்வரரை வணங்கி சிவதரிசன பலன்களை தந்தருளுங்கள் என்று வேண்டிக் கொள்ளவேண்டும் 
 
9.ஓம் நமசிவாய சொல்வதற்கு ஜப மாலை இல்லை எப்படி 108 முறை கணிப்பது என்று குழப்பம் தேவையில்லை மனமொன்றி சிவனை மனத்தில் நினைத்து  108 முறை நோட்டில் எழுதுங்கள் ,அது போதும்  
 
10. ஆலயம் வலம் வரும் போது கைகளை இடுப்புக்கு கீழே தொங்க விடாமலும் வீசி நடக்காமலும் பார்த்துக் கொள்ளவேண்டும்  
 
11.பெரிய புராணம் எனும் நாயன்மார்கள் வரலாற்றை படித்தும் கேட்டும் இன்புறலாம்        

இந்த கார்த்திகை மாதம் உலக உயிர்கள் மீது சிவபெருமான் கொண்ட கருணையின் காரணமாக இரண்டு சனி பிரதோஷங்கள் வருகின்றன .(30-11-2013 , 14-12-2013)அதை நாம் சரியாக பயன் படுத்தி நமது தீ வினைகளால் படும் அல்லல் தீர்ப்போம் சனிப்பிரதோஷ புண்ணிய வேளையில் சிவபெருமானையும் நந்தி தேவரையும் வணங்கி வழிபட்டு பெரும் பேறு பெறுவோமாக

                           
 
                      போற்றி ஓம் நமசிவாய 


                                                    
                          திருச்சிற்றம்பலம்

Tuesday, November 19, 2013

சைவ காலண்டர் - கார்த்திகை

                                                 ஓம் நமசிவாய 


சைவ காலண்டர் - கார்த்திகை


17 -11-2013  லிருந்து  15-12-2013 வரை

கார்த்திகை  மாதம் 

01ஆம் நாள் 17-11-13-ஞாயிறு  - மகாதீபம் ,கிருத்திகை ,பௌர்ணமி

02ஆம் நாள் 18-11-13-திங்கள்  - முதல் சோமவாரம் 

05ஆம் நாள் 21-11-13-வியாழன் - சதுர்த்தி 

07ஆம் நாள் 23-11-13- சனி -சஷ்டி 

09ஆம் நாள் 25-11-13-திங்கள் -இரண்டாம் சோமவாரம் , பைரவாஷ்டமி

11ஆம் நாள் 27-11-13- புதன் -மெய்ப்பொருள் நாயனார் குருபூசை 

12ஆம் நாள் 28-11-13-வியாழன் -ஆனாய நாயனார் குருபூசை 

14ஆம் நாள் 30-11-13- சனி -மகாபிரதோசம் 

15ஆம் நாள் 01-12-13- ஞாயிறு -சிவராத்திரி

16ஆம் நாள் 02-12-13- திங்கள் -மூன்றாம் சோமவாரம் ,அமாவாசை 

18ஆம் நாள் 04-12-13- புதன் -மூர்க்க நாயனார் குருபூசை 

19ஆம் நாள் 05-12-13- வியாழன் -சிறப்புலி நாயனார் குருபூசை 

20ஆம் நாள் 06-12-13- வெள்ளி -சதுர்த்தி 

22ஆம் நாள் 08-12-13- ஞாயிறு -சஷ்டி 

23ஆம் நாள் 09-12-13- திங்கள் -நான்காம் சோமவாரம்

28ஆம் நாள் 14-12-13- சனி -மகாபிரதோஷம் 

29ஆம் நாள் 15-12-13- ஞாயிறு - கணம்புல்லர் நாயனார் குருபூசை ,கிருத்திகை 




                       போற்றி ஓம் நமசிவாய 



                           திருச்சிற்றம்பலம்     

Monday, November 4, 2013

பூசலார் நாயனார் புராணம்

    
                                                      ஓம் நமசிவாய

பூசலார் நாயனார் புராணம்


"மன்னிய சீர் மறைநாவல்  நின்றவூர்ப் பூசலார்க்கும் அடியேன்"

அவதார தலம் - திருநின்றவூர்
முக்திதலம்      - திருநின்றவூர்
குருபூசை திருநட்சத்திரம் - ஐப்பசி , அனுஷம்
05-11-13 செவ்வாய்க்கிழமை  


ஒழுக்கத்தால் எக்காலமும் ஓங்கி உயர்ந்த தொண்டை மண்டலத்திலே திருநின்றவூர் எனும் திருத்தலத்தில் வேதியர்கள் மரபிலே தோன்றியவர் பூசலார் நாயனார். இவரது உள்ள உணர்வெல்லாம் கங்கையணிந்த சங்கரனின் சேவடியிலும் அடியார் சேவையிலும் மட்டுமே பதித்திருந்தது. ஆகம வேத, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார் நாயனார். 


பிறை அணிந்த பெருமானுக்குத் தமது ஊரில் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். ஆலயம் அமைப்பதற்கான செல்வத்தை அவரால் திரட்ட முடியவில்லை. பூசலார் மனம் புண்பட்டு நைந்தார். செய்வதறியாது சித்தம் கலங்கி ஏங்கினார் நாயனார். புறத்தே தான் புற்றிடங்கொண்ட பெருமானுக்குக் கோயில் எழுப்ப இயலவில்லை, அகத்திலேயாவது  அண்ணலாருக்கு, என் மனதிற்கு ஏற்ப பெரிய கோயில் வேண்டுமானாலும் கட்டலாம் அல்லவா ? என்று தமக்குள் தீர்மானித்தார். அதற்குத் தேவையான நிதி, கருங்கல், மரம், சுண்ணாம்பு முதலிய கருவி, கரணங்களை எல்லாம் மனதிலே சேர்த்துக் கொண்டார். ஒரு நல்ல நாள் பார்த்து, தனி இடத்தில் அமர்ந்து ஐம்புலங்களையும் அடக்கி ஆகம முறைப்படி மனத்திலே கோயில் கட்டத் தொடங்கினார். இரவு பகலாக கோயில் அமைப்பதையே சிந்தையாகக் கொண்டு இறைவன் கோயிலை அகத்தே இருத்தி கர்ப்பகிருகம், தூபி, அர்த்த மண்டபம் , மகா மண்டபம் , யாக மண்டபம் , அலங்கார மண்டபம், திருமதில்கள், திருக்குளம், திருக்கிணறு, ராஜ கோபுரம் முதலிய அனைத்தும் பொலிவோடு உருவாக்கினார்.


அடிமுதல் உபான மாதி யாகிய படைக ளெல்லாம்
வடிவுறுந் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரந் தானும் முன்னிய முழத்திற் கொண்டு
நெடிதுநாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார். 



நாயனாருக்குப் புறத்தே கோயில் எழுப்ப எத்தனை நாளாகுமோ, அத்தனை நாளானது அகத்தே கோயில் எழுப்ப . எல்லாம் முடிந்த பின் கும்பாபிஷேக நாளை நிச்சயித்தார் . கும்பாபிஷேகத்திற்கு வேண்டிய தர்ப்பை , சமித்து , நெய் ,சிருக்கு ,சிரவம் முதலிய அனைத்தும் ஆயத்தம் செய்தார் 

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காடவர்கோன் என்ற பல்லவ மன்னன் ஈசனுக்கு கற்கோயில் ஒன்று கட்டினான் . நாயனார் மானசீகமாகக் கும்பாபிஷேகம் நடத்த இருந்த அதே நன்னாளில் காஞ்சியில்  கும்பாபிஷேகத்துக்குரிய நாள் குறித்து அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தான் மன்னன். 

கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் இரவு எம்பெருமான் மன்னனின் கனவிலே எழுந்தருளி அன்பா ! திருநின்றவூரில் குடியிருக்கும் நம்முடைய அன்பனாகிய பூசலார் தமது உள்ளக் கோயிலில் கட்டி முடித்துள்ள கோயிலுக்கு நாளை கும்பாபிஷேகம். அந்த ஆலயத்துள் நாளை நாம் எழுந்தருள சித்தம் கொண்டுள்ளோம். ஆதலால் நீ வேறு ஒரு நாளில் கும்பாபிஷேகத்தை வைத்துக்கொள்வாயாக என்று மொழிந்து மறைந்தருளினார். பூசலாரின் அன்பை இவ்வாறு அரசனுக்கு இறைவர் அறிவித்தார் .


நின்றவூர்ப் பூசல் அன்பன்
          நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து நாளை 

           நாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை
           ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
           கோயில் கொண்டருளப் போந்தார்.
 


பல்லவர் கோமான் கண் விழித்தெழுந்து  கனவை நினைத்து வியந்தான். திருநின்றவூர் சென்று அச்சிவனடியாரைச் சந்தித்து அவரது திருக்கோயிலையும் தரிசித்து வர ஆவல் கொண்டான் மன்னன் . திருநின்றவூரை அடைந்த அரசன், பூசலார் அமைத்துள்ள திருக்கோயில் எங்குள்ளது? என்று பலரைக் கேட்டான். ஊர் முழுதும் தேடியும் எவருக்கும் தெரியவில்லை. இறுதியில் மன்னன் அவ்வூர் அந்தணர்களை வரவழைத்துப் பூசலாரைப் பற்றி வினவ, அவர்கள் மூலம் பூசலார் இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டான் மன்னன்.பூசலார் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்ட மன்னன். பூசலாரைக் கண்டு  அவரது அடிகளைத் தொழுது எழுந்தான். அண்ணலே! எம்பெருமான் என் கனவிலே தோன்றி நீங்கள், அவருக்காக எட்டு திக்கும் வாழ்த்த, திருக்கோயில்  அமைத்துள்ளதாக வும் , இன்று நீங்கள், அத்திருக்கோயிலில் ஐயனை எழுந்தருள்விக்க நன்னாள் கொண்டுள்ளதாகவும், அதனால் நான் காஞ்சியில் கட்டி முடித்த திருக்கோயில் கும்பாபிஷேகத்தை வேறு நாள் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டு அருளினார். அடியேன், தேவரீர் கட்டி முடித்துள்ள திருக்கோயிலைத் தரிசித்து வழிபட பெருமகிழ்ச்சி கொண்டு வந்துள்ளேன் , அத்திருக்கோயில் எங்குளது? என்று பணிவோடு வணங்கினான் மன்னன். 


மன்னன் மொழிந்ததைக் கேட்டு பூசலார் பெரும் வியப்பில் மூழ்கினார். அவர் உள்ளம் மருண்டார் . மன்னனிடம் காடவர் கோமானே அடியேனையும், ஒரு பொருளாகக் கொண்டு இறைவன் இங்ஙனம் திருவாய் மலர்ந்து அருளினாரோ ? இவ்வூரில் அரனார்க்கு ஆலயம் அமைக்க அரும்பாடு பட்டேன்.  பொருள் இல்லா நான், புறத்தே தான் ஆண்டவனுக்குக் கோயில் கட்ட முடிய வில்லை , அகத்திலாவது  கட்டுவோம் என்ற எண்ணத்தில், வேறு வழியின்றி எனது உள்ளத்திலே கோயில் கட்டி , இன்று அவரை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டையும் செய்து கும்பாபிஷேகம் புரிகிறேன் என்றார். 


மன்னவன் உரைப்பக் கேட்ட
         அன்பர்தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே
          எம்பிரான் அருள்செய் தாரேல்
முன்வரு நிதியி லாமை
           மனத்தினால் முயன்று கோயில்
இன்னதாம் என்று சிந்தித்து 
           எடுத்தவா றெடுத்துச் சொன்னார்



அடியார் மொழிந்தது கேட்ட மன்னன் மருண்டான். உள்ளக் கோயிலின் பெருமையையும் அதில் குடியேறப் போகும் இறைவனின் அருள் நிலையையும் எண்ணிப் பார்த்தான். சங்கரனைச் சிந்தையில் இருத்தி, அன்பினால் எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக பொன்னும், பொருளும் கொண்டு கட்டிய கோயில்  இணையாகாது என்பதை உணர்ந்தான். மன்னன் நினைவில் பலவாறு எண்ணி நைந்தான். திருமுடிபட பூசலார் நாயனார் திருவடிகளில் வீழ்ந்து அவரைப் போற்றிப் புகழ்ந்தான். பின் மன்னன் தன் பரிவாரங்களுடன் காஞ்சிக்குத் திரும்பினான் 

பிறையணிந்த பெருமானார் பூசலார் எண்ணியபடியே குறித்த காலத்தில் அவரது உள்ளக் கோயிலில் எழுந்தருளினார். பூசலார் நாயனாரும் சிவபெருமானை உள்ளத்திலே நிறுவிப் பூசனை புரியத் தொடங்கினார். அன்று முதல் தினந்தோறும் ஆறு காலமும் ஆகமநெறி வழுவாமல் உள்ளக் கோயில் முக்கண் பெருமானை வழிபட்டு வந்த நாயனார் முடிவில் அம்பலவாணருடைய அடிமலர் சார்ந்து ஆராவமுத இன்பம் எய்தினார் 




                           போற்றி ஓம் நமசிவாய 




                             திருச்சிற்றம்பலம் 

Sunday, November 3, 2013

மெய்கண்டதேவர் குருபூசை

                                          
                            ஓம் நமசிவாய


மெய்கண்டதேவர் குருபூசை

" ஈராண்டில் சிவஞானம் பெற்றுயர்ந்த 
  மெய்கண்டார் இணைத்தாள் போற்றி "

அவதார தலம் - பெண்ணாடம் 
முக்தி தலம்     - திருவெண்ணெய் நல்லூர்
குருபூசை திருநட்சத்திரம் - ஐப்பசி ,சுவாதி 
03-11-2013 ,ஞாயிற்றுகிழமை  

  
சைவசமயத்தில் சமயக் குரவர்கள் நான்கு பேர் . அது போல சந்தான குரவர்கள் நான்கு பேர் . 

சமயக்குரவர்கள் நால்வரும் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமற்றவர்கள். ஆனால் சந்தான குரவர்களோ ஒருவருக்கொருவர் சீடர்கள். அதனால் இது சந்தான பரம்பரை என்று 
கூறப் பட்டது . சந்தானகுரவர்களால் சைவ சித்தாந்த சாத்திரங்கள் சொல்லப்பட்டன . அத்தகைய சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர் மெய்கண்டார், அவரின் சீடர் அருள் நந்தி சிவம், அவரின் சீடர் மறைஞான சம்பந்தர், அவரின் சீடர் உமாபதி சிவம்.
 

மெய்கண்டார் சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர். சைவ சித்தாந்த சாத்திர மரபும், சைவ சமயத்துக்கான குரு மரபும் தோற்று வித்தவர் மெய்கண்டாரே ஆகும். இவர் பிறந்தது நடுநாட்டின் (கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அருகே) பெண்ணாடம் என்னும் ஊராகும். 13ஆம் நூற்றாண்டில் அச்சுதக்களப்பாளர் என்னும் சைவ வேளாளப் பெருநிலக்கிழார் வசித்து வந்தார். அவருக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. தம் குலகுருவான சகலாகம பண்டிதரிடம் சென்று தம் குறையைச் சொல்லி பரிகாரம் தேடினார். சகலாகம பண்டிதரும் மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்த்தார். கயிறு சார்த்திய இடத்தில் திருஞான சம்பந்தரின் திருவெண்காட்டு தேவாரப் பதிகம் பாடல் கிடைத்தது.

 

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு 
ஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே


என்ற பாடல் வந்ததைக் கண்டு சகலாகம பண்டிதர், “பிள்ளையினோடுள்ள நினைவா யினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்” என்ற இந்த வரிகளை சுட்டிக்காட்டி  பிள்ளைப்பேறு உறுதி என்று ஆறுதல் கூறி திருவெண்காடு சென்று அங்குள்ள மூன்று குளங்களிலும் நீராடி வழிபட்டால் கட்டாயம் பிள்ளை பிறக்கும் கவலை வேண்டாம்.” என்று கூறி அனுப்பி வைத்தார். உடனே அச்சுதக்களப்பாளர் தம் மனைவியோடு திருவெண்காடு சென்று  சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சந்திர தீர்த்தம் ஆகிய மூன்றிலும்  நீராடி திருவெண்காட்டு ஈசனை வழிபட்டார் . ஒரு நாள் அவர் கனவில் ஈசன் தோன்றி, “அச்சுதக்களப்பாளா! இப்பிறவியில் உனக்குப் பிள்ளை வரம் இல்லை; ஆனால் நீ எம் சீர்காழிப் பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து இங்கு வந்து வழிபட்டு விரதம் இருந்ததால் ஞானசம்பந்தனைப் போன்றதொரு மகன் பிறப்பான்.” என்று அருளினார்.


அவ்வாறேஅச்சுதகளப்பாளருக்கு  ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு திருவெண் காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமாள் என்று திருநாமம் சூட்டி வளர்த்தனர் . குழந்தை பிறந்ததிலிருந்தே சிவபக்தி மிகக்கொண்டு விளங்கிற்று. குழந்தைக்கு இரண்டு வயதில்  ஒரு அதிசயம் நடந்தது.

திருக்கயிலையில் நந்தி தேவரிடம் உபதேசம் பெற்ற எட்டுபேருள் சனற்குமாரரும் ஒருவர் அவருடைய ஞானப்புதல்வர் சத்திய ஞான தரிசினி இவரிடம் ஞான உபதேசம் பெற்றவர் பரஞ்சோதி முனிவர் .அவர் கயிலையில் இருந்து அகத்தியரை சந்திக்க ஒளியையே விமானமாக்கி பொதிகைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவெண்ணெய் நல்லூரில் மாமன் வீட்டில் இருந்த குழந்தை சுவேதவனப் பெருமாள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார். பரஞ்சோதி முனிவரின் ஒளி விமானம் வானவீதியில் செல்கையில் திருவெண்ணெய் நல்லூரை அடைந்ததும் மேலே செல்ல முடியாமல் நின்று விட்டது  அங்கு சுவேதவனப் பெருமாளைக் கண்டார் ஜோதிமயமான தேஜஸுடன் கூடிய அந்த குழந்தை பெரிய மகானாக வரப் போவதும், இந்த குழந்தை உபதேசம் பெறக்கூடிய பக்குவத்தோடு இருப்பதையும் உணர்ந்து  விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கிய அவர் குழந்தையைத் தம் கைகளால் எடுத்து ஸ்பரிச, நயன தீட்சை அளித்து சிவஞான உபதேசமும் செய்வித்தார். 


பரஞ்சோதி முனிவர் தன் குருவின் பெயரான  சத்தியஞான தரிசினி என்ற பெயரையே தமிழாக்கம் செய்து மெய்கண்டார் என தீட்சா நாமமாக அருளிச் செய்தார். அன்று முதல் சுவேதவனப்பெருமாள் மெய்கண்டார் என்ற திருநாமத்துடன் விளங்கினார். சமயகுரவர் களில் முதல்வரான திருஞானசம்பந்தர் தம் மூன்று வயதில் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டு அன்னையின் ஞானப்பாலுண்டு எப்படி ஞானம் பெற்றாரோ அப்படியே சந்தான குரவரில் முதல்வரான மெய்கண்டாரும் தம் இரண்டாம் வயதிலேயே குருவால் சிவஞான உபதேசம் பெற்றார். மெய்கண்டாரால் சிவஞானம் எங்கும் பரவ வேண்டும் என்பதற்காக தமிழில் சிவஞானபோதம் செய்தருளினார்

மெய்கண்டார் தன்னிடம் உபதேசம் பெற வருபவர்களுக்கு சைவ சித்தாந்தத்தை உபதேசித்துவந்தார். சகலாகம பண்டிதருக்கு இந்தச் செய்தி எட்ட அவர் தாம் சொல்லிப் பிறந்த குழந்தை இவ்வளவு புகழோடு பிஞ்சுப்  பருவத்திலேயே சீடர்கள் பலரோடும் திகழ்வது கண்டு ஆணவத்துடன் அவரைக் காணச் சென்றார். அப்போது மெய்கண்டார் ஆணவமலம் குறித்து சீடர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். சகலாகம பண்டிதர் மெய்கண்டாரை ஒரே கேள்வியில் வீழ்த்திட நினைத்து “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” எனக்கேட்க, மெய்கண்டார் தம் சுட்டு விரலை நீட்டி அவரையே காட்டினார். தம்மையே ஆணவமலத்தின் சொரூபமாகக் குழந்தை குரு காட்டியதும் சகலாகம பண்டிதர் தன் ஆணவம் அடங்கி மெய் கண்டாரின் பார்வையால் நயன தீட்சை பெற்று பக்குவம் வந்தது. வயதையும் பொருட்படுத்தாமல் மெய்கண்டாரின் கால்களில் வீழ்ந்து தம்மையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்ட அவ்வாறே மெய்கண்டாரும் அவரைத் தம் சீடனாக ஏற்றுக்கொண்டு ஞான உபதேசம் வழங்கி அருள் நந்தி சிவம் என்ற தீட்சாநாமமும் அளித்தார். ஏற்கெனவே மெய்கண்டாருக்கு 48 மாணவர்களோடு அருள் நந்தி 49-ஆம் மாணவரனார் .சாத்திர நூல்கள் பதினான்கினுள் உண்மை விளக்கம் அருளிய மனவாசகம் கடந்தார் என்பவரும் மெய்கண்டாரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற 49 பேருள் அவரும் ஒருவர் .அடுத்த  சிலநாட்களில் மெய்கண்டாரை அடுத்து இரண்டாம் சந்தான குரவராக ஆனார். மெய்கண்டார் எவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் திருவெண்ணெய் நல்லூரிலேயே முக்தி அடைந்ததாய் தெரிகிறது. அவரது சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. திருவாவடுதுறை ஆதீனம் அவர் பிறந்த இடமான பெண்ணாகடத்தில் களப்பாளர்மேடு என்னும் பெயரில் வழங்கிய இடத்தைக் கண்டறிந்து அங்கே மெய்கண்டாருக்கு  நினைவாலயம் கட்டி மெய்கண்டாரின் திருஉருவச்சிலை நிறுவப் பெற்றுள்ளது  


மேலும் திருவாவடுதுறை ஆதீன மாத இதழ் 
மெய்கண்டார் என்ற பெயருடன் இப்பொழுது வெளிவந்து கொண்டுள்ளது 



                       போற்றி ஓம் நமசிவாய 



                           திருச்சிற்றம்பலம்  

Sunday, October 20, 2013

இடங்கழி நாயனார் புராணம்


                                                           ஓம் நமசிவாய

இடங்கழி நாயனார் புராணம் 


               "மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் அடியேன் " 

அவதார தலம் - கொடும்பாளூர்

முக்தி தலம்     - கொடும்பாளூர்

குருபூசை திருநட்சத்திரம்- ஐப்பசி,கார்த்திகை 
21-10-2013 ,திங்கள்கிழமை



இயற்கை வளமும்,  தெய்வ வளமும் மிகுந்த கோனாட்டின் தலைநகரம் கொடும்பாளூர்.  கனகசபையின் திருச்சடை மகுடத்தை பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்த சோழர் குடியிலே அவதரித்தவர் இடங்கழி நாயனார். இக் குறுநில மன்னன் விரிசடை அண்ணலின் திருத்தாளினைப் போற்றி வணங்கி வந்ததோடு, அவர் எழுந்தருளியிருக்கும் கோயில்களில் நடக்கும் சிவ வழிபாட்டிற்குத் தேவையான நெல்லையும், பொன்னையும் வாரி வாரி வழங்கினார். ஆகமத்திலுள்ள சைவ நெறியையும் வேதத்திலுள்ள தர்ம நெறியையும் பாதுகாத்து வந்த இவர் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. 


இடங்கழியார் எனவுலகில்
            ஏறுபெரு நாமத்தார்
அடங்கலர்முப் புரமெரித்தார்
           அடித்தொண்டின் நெறியன்றி
முடங்குநெறி கனவினிலும்
           உன்னாதார் எந்நாளும்
தொடர்ந்தபெருங் காதலினால்
           தொண்டர்வேண் டியசெய்வார்



சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் புரியும் தொண்டர்களுக்குப் பல வழிகளில் கணக்கற்ற உதவிகளைச் செய்து கொண்டாடினார் நாயனார். இடங்கழி நாயனாரின் வெண்கொற்றக் குடை நிழலில் எண்ணற்ற சிவனடியார்கள் சிவத்தொண்டு புரிந்து வந்தனர். சைவம் வளர்த்த அடியார்கள் பலருள் இவரும் சிவனடியார்களுக்கு திருவமுது செய்து மகிழும் அருந்தவப் பணியை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். அப்படி இருந்த ஒரு சிவனடியார் புரியும் திருப்பணிக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. அடியார்களுக்கு அமுது அளிப்பதற்குப் போதிய நெல் கிட்டாமல் அவதிப்பட்டார். நெல் தட்டுப் பாட்டால் அவரது விருந்தோம்பல் அறத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட சிவத்தொண்டர் செய்வதறியாது சித்தம் கலங்கினார். மனம் தளர்ந்தார். முடிவில் அவர் அரண்மனைக் களஞ்சியத்தில் நெல்லைச் சேமித்து வைத்திருப்பதை உணர்ந்தார். நள்ளிரவு வேளையில் நாயனார் அரண்மனைக்குள் நுழைந்து நெல் கட்டு நிறைகளுள்ளிருந்து நெல்லை கவர்ந்து எடுத்தார். திருட்டு தொழிலில் அனுபவம் இல்லாததால் இவ்வடியார் அரண்மனைக் காவலர்களிடம் சுலபமாக மாட்டிக் கொண்டார். அடியாரைக் கைது செய்து, இடங்கழியார் முன் நிறுத்தினார்கள். காவலர் வாயிலாக விவரத்தைக் கேள்வியுற்ற அரசர் அடியாரின் சிவப்பொலிவைக் கண்டு திகைத்தார். ஐயனே  சிவக்கோலம் தாங்கியுள்ள தேவரீர் இத்தகைய இழிவான தொழிலைச் செய்யக் காரணம் யாது? என்று கேட்டார் வேந்தர் . சோழப் பெருந்தகையே! அடியேன் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்து ஒழுகும் திருப்பணியைத் தவறாமல் நடத்தி வந்தேன். எமது சிறந்த சிவப்பணிக்கு இடர் ஏற்பட்டது. அதனால் அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள நெல்லைக் கவர்ந்து செல்வது என்ற முடிவிற்கு வந்தேன். சிவனடியார் செப்பியது கேட்டு சிந்தை நெகிழ்ந்த சோழர் பெருமான் அடியவரைக் காவலினின்று விடுவித்து பணிந்து தொழுதார்.  அடியேனுக்கு இவ்வடியார் அல்லவா களஞ்சியம் போன்றவர் என்று பெருமிதத்தோடு கூறினான் வேந்தன். அவ்வடியார்க்குத் தேவையான பொன் , பொருளையும் கொடுத்தனுப்பினார். அத்தோடு அரசர் மன நிறைவு பெறவில்லை. களஞ்சியத்திலுள்ள நெற்குவியல்களையும், பொன் மணிகளையும் தமது நாட்டிலுள்ள சிவனடியார்கள், அவரவர்களுக்குத் தேவையான அளவிற்கு  எடுத்துச் செல்லட்டும். எவ்வித தடையும் கிடையாது என்று நகரமெங்கும் பறைசாற்றுங்கள் என்று மன்னன் கட்டளை இட்டான். இவ்வாறு இடங்கழி நாயனார் சிவனடியார்களுக்குப் பொன்னும், பொருளும் எடுத்துச் செல்ல, உள்ள உவகையோடு உத்தரவிட்டு சிவனடியார்களை மேன்மேலும் கவுரவப்படுத்தினான். திருவெண்ணீற்றின் பெருமைக்குத் தலைவணங்கிய குறுநிலக் கொன்றவன் கொன்றை மலர் அணிந்த சங்கரனின் சேவடிகளைப்பற்றி நீடிய இன்பம் பெற்றார்.


எண்ணில்பெரும் பண்டாரம்
            ஈசனடி யார்கொள்ள
உண்ணிறைந்த அன்பினால்
            உறுகொள்ளை மிகவூட்டித்
தண்ணளியால் நெடுங்காலந்
            திருநீற்றின் நெறிதழைப்ப
மண்ணில்அருள் புரிந்திறைவர்
            மலரடியின் நிழல்சேர்ந்தார்




                       போற்றி ஓம் நமசிவாய



                          திருச்சிற்றம்பலம்  

சிவலோக பதவி வருந்தத்தக்கதா ?

                                                       ஓம் நமசிவாய


சிவலோக பதவி வருந்தத்தக்கதா ?



நாளிதழ்களில்  இறந்தவர்களுக்கு துக்க மரண அறிவிப்புகள் வெளியிடுகிறார்கள் அது போல சுவரொட்டிகளும் ஒட்டப்படுகின்றன அதில்  இன்னார் இறந்து விட்டார்கள் என அறிவிப்பது வருந்தத்தக்க விசயந்தான் ஆனால் அதில் அவர்கள் வெளியிடும் செய்தி நகைப்புக்குரியது மட்டுமல்ல வேதனை யானதும் கூட .  

ஏனெனில் இன்னார் சிவலோக பதவி அடைந்து விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறோம் என்று வெளியிடு கிறார்கள் . சிவலோக பதவி என்பது எளிதில் கிடைக்குமா ? அப்படி கிடைத்தாலும் அது மிகப்பெரிய பாக்கியம் அல்லவா ? அது கிடைக்காமல் ஏங்குவோர் எவ்வளவு பேர் ? சிவலோக பதவி என்பது இனி பிறவி இல்லை என்னும் முக்தி வீடுபேறல்லவா ? அது மனித பிறப்பில் நாம் அடையும் கண நேரம் தோன்றி மறையும் அற்ப இன்பமா ?  எல்லையில்லா பேரின்பமல்லவா ? .

ஒருவேளை இறந்தவருக்கு சிவலோக பதவி கிடைத்துவிட்டதே என்று பொறாமையினால் அப்படி போஸ்டர் ஓட்டுகிறார்களோ என்னவோ ? 

சிவலோக பதவி எப்படி வருந்தத்தக்க விசயமாகும் என்பதை இனியாவது சிந்தித்து உணர்வார்களா ? மரண அறிவிப்புகள் இது போல நகைப்புக்குரிய விசயமாக இல்லாமல் இருந்தாலே அது துக்கம் அனுஷ்டித்ததாக இருக்கும் .



                    போற்றி ஓம் நமசிவாய 



                            திருச்சிற்றம்பலம்  

தீக்ஷை முறைகள்

                                                      ஓம் நமசிவாய


தீக்ஷை முறைகள் 

தீக்ஷை எனப்படுவது உயிரைப் பற்றியுள்ள அறியாமை எனும் மலங்களை நீக்கி ஞானத்தை உண்டாக்குவது .தீ என்றால் கெடுத்தல் எதை ? மலத்தை க்ஷை என்றால் கொடுத்தல் எதை ? ஞானத்தை 

இந்த தீக்ஷை தக்க உபதேச பாரம்பரியம் உள்ள குரு மூலம் மட்டுமே நாம் பெற முடியும் . எந்த உயிருக்கு இந்த ஞானத்தை பெற பக்குவம் உள்ளதோ அந்த உயிருக்கு தீக்ஷை வழங்க சிவபெருமானே குரு உருவில் வருவார் . முற்பிறவிகளில் உயிர்கள் தாம் செய்த தவத்தால் மட்டுமே இந்த வாய்ப்பு அருளப்படும் . அதாவது சரியை கிரியை யோக மார்க்கத்தில் செய்த தவத்தின் பலன் ஞான வழியை காட்டுமே தவிர முக்தி எனும் வீடுபேற்றை வழங்காது . ஞானம் பெரும் வழியை உணர்த்தும். அந்த ஞானம் குரு மூலம் தீக்ஷையால் வழங்கப்படும் . அவர் உயிர்களின் மலங்களை நீக்கி ஞானத்தை வழங்குவார் 

இதன் மூலம் உயிர்களின் சஞ்சிதம் அழியும் . குரு உபதேசித்த ஞானநெறி மூலம் இப்பிறவியில் ஆகாமியம் என்னும் வினைகள் ஏறாது .அந்த ஞான நெறி நன்கு கைகூடும் போது முக்தி வாய்க்கும் .

தீக்ஷை என்பது வெறும் மந்திர உபதேசம் மட்டுமல்ல . குரு உயிரின் மாசுக்களை அதாவது சஞ்சித வினைகளை நீக்கி புனிதமாக்குவார் .சிவஞானத்தை வழங்குவார் . தீக்ஷை வழங்கும் முறைகள் ஆறு வகைப்படும் 

1.நயனதீக்ஷை  

நயனம் என்பது கண் பார்வையால் வழங்குவது , மீன் தனது முட்டையை தன் கண்பார்வையினாலே குஞ்சு பொரித்தலைப்போல ஞானகுரு தன் கண்களை சிவனது கண்ணாக பாவித்து நோக்க சீடன் சிவானந்தம் பெறுவான்

2.பரிச தீக்ஷை

 பரிசம் என்பது தீண்டுவது தொடுவது ,கோழி முதலிய பறவைகள் தனது முட்டையின்மேல் பொருந்தி குஞ்சு பொரிக்கும் அதுபோல ஞானகுரு தம்மை சிவமாக பாவித்து சீடன் தலையைத் தொடுவதால் சீடன் சிவானந்தம் பெறுவான் 
 

3.வாசக தீக்ஷை

வாசகம் என்பது சொல் உரை ,ஞானகுரு சித்தாந்த வாக்கியங்களையும் சிவமூல மந்திரத்தையும் சீடனுக்கு பொருளுடன் உபதேசிப்பது வாசக தீக்ஷை


4.மானச தீக்ஷை

ஞான குரு தன் உடம்பிலிருந்து யோக முறையில் சீடனின் இருதயத்தில் புகுந்து அவனது ஆன்மாவை தூய்மை செய்து அதை சிவ ஒளியுடன் கலக்கச்செய்து அந்த ஆன்மாவை சிவமாக பாவித்து மீண்டும் அந்த சக்தியை சீடனது இருதயத்தில் யோக முறையில் சேர்ப்பித்தல் மானச தீக்ஷை எனப்படும்

5.சாத்திர தீக்ஷை

ஞான சாத்திரங்களை கற்பித்தலும் சிந்தித்தலுமே சாத்திர தீக்ஷை ஆகும் 


6. யோக தீக்ஷை 

ஆதார யோகம் ,நிராதார யோகம் என்பவற்றை  பயில்வித்தல் யோக தீக்ஷை ஆகும்




                          போற்றி ஓம் நமசிவாய




                                திருச்சிற்றம்பலம்

Sunday, October 13, 2013

பற்றுக பற்று அற்றவன் திருவடியை

                             
                                                            ஓம் நமசிவாய


பற்றுக பற்று அற்றவன் திருவடியை


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்

 ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை


திருகுறளில்  துறவு என்னும் அதிகாரத்தில் முதல் பாடலாக இந்த பாடல் உள்ளது இப்பாடலை துறவு என்னும் அதிகாரத்தில் முதல் பாடலாக எழுதுகிறோம் எனவே பற்று என்ற ஒட்டுதல் அறவே கூடாது என்று திருவள்ளுவர் ஒவ்வொரு வார்த்தையும் உதடுகள் ஒட்டாமல் எழுதியுள்ளார்


பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு


பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்   

துறவு அதிகாரத்தில் பத்தாவது பாடலாக இந்த பாடல் உள்ளது இதை திருவள்ளுவர் எழுதும்போது பற்று வேண்டும் என்கிறார் எதன் மீது ? பற்றற்ற இறைவன் திருவடியை பற்ற வேண்டும் என்று அருள்கிறார் . அதற்காக அனைத்து வார்த்தைகளும் அழுத்தமாக உதடுகள் ஓட்டும் வண்ணம் எழுதியுள்ளார் .

இதிலிருந்தே எதைப் பற்றவேண்டும் என்று தெளிவாக தெரிகிறது . பற்றற்றவன் தாளை தவிர மற்ற பற்றுகள் துன்பம் விளைவிக்கும். எனவே அளவில்லா வற்றாத இன்பம் கிடைக்கும் வண்ணம் உலகப்பற்றுக்களை நீக்கி பற்றற்ற இறைவன் திருவடியினை பற்றுவோம், பிறவிப்பிணி நீங்கி ஆனந்தம் பெறுவோம் 



                         போற்றி ஓம் நமசிவாய 



                              திருச்சிற்றம்பலம் 

சைவ காலண்டர் - ஐப்பசி

                                                 ஓம் நமசிவாய 


சைவ காலண்டர் - ஐப்பசி


18 -10-2013  லிருந்து  16-11-2013 வரை


ஐப்பசி மாதம் 

01ஆம் நாள் 18-10-13-வெள்ளி - மகா அன்னாபிசேகம் ,பௌர்ணமி

03ஆம் நாள் 20-10-13-ஞாயிறு -நின்றசீர் நெடுமாறன் நாயனார் குருபூசை

04ஆம் நாள் 21-10-13-திங்கள்  - இடங்கழி நாயனார் குருபூசை , கிருத்திகை

05ஆம் நாள் 22-10-13-செவ்வாய்  -சங்கடஹர சதுர்த்தி

07ஆம் நாள் 24-10-13-வியாழன்  -சஷ்டி 

10ஆம் நாள் 27-10-13-ஞாயிறு  -சக்தி நாயனார் குருபூசை, தேய்பிறை அஷ்டமி

15ஆம் நாள் 01-11-13-வெள்ளி - பிரதோஷம் ,சிவராத்திரி

16ஆம் நாள் 02-11-13-சனி - தீபாவளி

17ஆம் நாள் 03-11-13-ஞாயிறு -மெய்கண்ட தேவர் குருபூசை ,கேதார கௌரி விரதம் ,அமாவாசை ,கந்தசஷ்டி ஆரம்பம் 

19ஆம் நாள் 05-11-13-செவ்வாய்  - பூசலார் நாயனார் குருபூசை

20ஆம் நாள் 06-11-13-புதன் -சதுர்த்தி

21ஆம் நாள் 07-11-13-வியாழன் - சதுர்த்தி ,ஐயடிகள் காடவர்கோன் நாயனார் குருபூசை

22ஆம் நாள் 08-11-13-வெள்ளி - ஸ்கந்த சஷ்டி 

29ஆம் நாள் 15-11-13-வெள்ளி - திருமூலர் நாயனார் குருபூசை,பிரதோஷம் 

30ஆம் நாள் 16-11-13-சனி -ஐப்பசி கடைமுழுக்கு மயிலாடுதுறை ,பரணி தீபம் 





                      போற்றி ஓம் நமசிவாய



                             திருச்சிற்றம்பலம்    

நீ நாளும் நன்னெஞ்சே நினை

    
                              ஓம் நமசிவாய


 நீ நாளும் நன்னெஞ்சே நினை


இறைவனை நாம் எல்லா நாளும் எல்லா நேரமும் நினைக்க வேண்டும். எந்த நேரம் நினைத்தால் என்ன சொல்லி வாழ்த்தி நினைக்கலாம் என்று சில திருவாசக போற்றி திருஅகவல்களை தொகுத்துள்ளோம் . நம் ஒவ்வொரு செயல் செய்யும் போதும் அந்த செயல் திருவருள் துணையுடன் சிறப்பாக முடிய சிவசிவ என்று நம் நா உச்சரிக்க வேண்டும் .சம்பந்தர் மூர்த்தி சுவாமிகள் திருச்சாய்க்காடு தேவாரத்தில் நீ நாளும் நன்னெஞ்சே என்று அருளியுள்ளார்


காலையில் உறங்கி  எழும்போது

அண்ணாமலை எம் அண்ணா போற்றி 
கண்ணார் அமுதக் கடலே போற்றி


ஆலய கோபுரம் மற்றும் இறை தரிசனம் காணும்போது


தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


உணவு உண்ணும்போது


தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி 
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி 


மன அச்சம் நீங்க 


அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி 

புத்துணர்ச்சி பெற 


ஏகம்பத்துறை எந்தாய் போற்றி 
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி 

உறங்க செல்லும் போது 

ஆடக மதுரை அரசே போற்றி 
கூடல் இலங்கு குருமணி போற்றி




                             திருச்சிற்றம்பலம் 



                        போற்றி ஓம் நமசிவாய

நட்சத்திரத் திருமுறைப் பாடல்கள் - 4


                                 ஓம் நமசிவாய


நட்சத்திரத்திருமுறைப் பாடல்கள் -3


22.திருவோணம் 

வேதமோதி வெண்ணூல்பூண்டு 
            வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் 

           புலியி னுரிதோலார்
நாதாவெனவு நக்காவெனவு 

           நம்பா வெனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் 

           பழன நகராரே.    1-67-1

23.அவிட்டம்  

எண்ணு மெழுத்துங் குறியும் 
            அறிபவர் தாமொழியப்
பண்ணி னிசைமொழி பாடிய 

            வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் 

            பிரான் திருவேதிகுடி
நண்ண அரிய வமுதினை 

            நாமடைந் தாடுதுமே.  4-90-6 


24.சதயம்

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
           கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
          அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
           வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
           பாசுப தாபரஞ் சுடரே    7-69-2







25.பூரட்டாதி

முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்     
             நோக்கும் முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்த 

             வெண்ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித் 

             தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக் 

             கூத்தன் குரைகழலே 4-81-7


26.உத்திரட்டாதி 

 நாளாய போகாமே நஞ்சணியும்    
             கண்டனுக்கே
ஆளாய வன்புசெய்வோம்  மடநெஞ்சே     

             அரன் நாமம்
கேளாய்நங் கிளை கிளைக்கும்  

             கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி

             எம் பெருமானே   1-62-1 


27.ரேவதி 

நாயினுங் கடைப்பட் டேனை 
         நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே 

           அமுத மொத்து
நீயுமென் நெஞ்சி னுள்ளே 

            நிலாவினாய்  நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில்  

           நோக்கி நீ அருள்செய்வாயே  4-76-6


                           திருச்சிற்றம்பலம் 


                       போற்றி ஓம் நமசிவாய     

நட்சத்திரத் திருமுறைப் பாடல்கள் -3


                                 ஓம் நமசிவாய 

நட்சத்திரத்திருமுறைப் பாடல்கள் -3

15.சுவாதி 

காவினை யிட்டுங் குளம்பல 
           தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித்தீர் 

           என்றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி 

           போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றா

           திரு நீலகண்டம்.   1-116-2

 16.விசாகம் 

விண்ணவர் தொழுதேத்த நின் றானை
           வேதந்தான் விரித்தோத வல்லானை
நண்ணினார்க் கென்றும் நல்லவன்றன்னை
            நாளும் நாம் உகக்கின்ற பி ரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
           என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக்கம்பன் எம்மானைக்
           காணக் கண்அடியேன்பெற்றவாறே    7-61-7


17.அனுஷம் 

மயிலார் சாயன் மாதோர் பாகமா
எயிலார் சாய வெரித்த வெந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே. 1-23-5



18.கேட்டை

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை யம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லையேற்றினர் கோடிகாவாஎன்றங்கு  ஒல்லையேத்துவார்க்கு ஊனமொன்றி
ல்லையே    5-78-3


19.மூலம் 


கீளார் கோவணமுந் திருநீறு 

         மெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவா    

          எனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடி     

          உள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனி
          யாரை நினைக்கேனே       7-24-2



 20.பூராடம் 

நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
        நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னனாய் மன்னவர்க்கோர்  அமுதமானாய்
        மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
         பூமிமேல் புகழ்தக்க பொருளேஉன்னை
என்னானாய் என்னானாய் என்னில் அல்லால்
        ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே 6-95-7



21.உத்திராடம் 



குறைவிலா நிறைவே குணக்குன்றே
         கூத்தனே குழைக்காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்
         ஒருபிழைபொறுத்தால் இழிவுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ் திருவாரூர்ச்
         செம்பொனே திரு வாவடுதுறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
         ஆர்எ னக்குஉறவு அமரர்கள் ஏறே 7-70-6






                              திருச்சிற்றம்பலம் 



                        போற்றி ஓம் நமசிவாய

 



நட்சத்திரத் திருமுறைப் பாடல்கள் -2

                                                        ஓம் நமசிவாய


நட்சத்திரத்திருமுறைப்  பாடல்கள் -2


8.பூசம்

பொருவிடை யொன்றுடைப் 
             புண்ணியமூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கை 

              மணாளனுலகுக்கெல்லாம்
திருவுடை யந்தணர் வாழ்கின்ற 

              தில்லைச்சிற் றம்பலவன்
திருவடி யைக்கண்ட கண்கொண்டு 

              மற்றினிக் காண்பதென்னே.  4-80-2


9.ஆயில்யம் 

கருநட்ட கண்டனை யண்டத் 
              தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்ய

             வல்லானைச் செந்தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக்கு
             இறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர் 

             கோனென்று வாழ்த்துவனே. 4-81-1


10.மகம்  

 பொடியார் மேனியனே புரி
          நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள
          ரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கட
          வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்
          கார்துணை நீயலதே.     7-28-1



11.பூரம் 

நூலடைந்த கொள்கையாலே 
           நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க 

           நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழன்மேவி ய

          அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் 

         சேய்ஞலூர் மேயவனே       1-48-1 


12.உத்திரம் 


போழும் மதியும் புனக்கொன்றை
             புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ
             உன்னைத் தொழுவார் துயர்போக
வாழும் அவர்கள் அங்கங்கே
             வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத்
             ஐயா றுடைய அடிகேளோ    7-77-8



13.அஸ்தம்


வேதியா வேத கீதா விண்ணவர்  
          அண்ணா வென்றென்
ஓதியே மலர்கள் தூவி யொருங்கி

          நின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் 

          படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே யால வாயில் அப்பனே 

          அருள்செ யாயே.     4-62-1


14.சித்திரை 


நின்னடியே வழிபடுவான் நிமலா
           நினைக் கருத
என்னடியானுயிரைவவ்வேலென்று                    

            அடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு

          நீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் 

          நெடுங்களமே யவனே    1-52-3



                           திருச்சிற்றம்பலம்



                      போற்றி ஓம் நமசிவாய  

Saturday, October 12, 2013

தேவாரத் தலங்கள் - தற்போதைய பெயர்கள்

                                                       ஓம் நமசிவாய


தேவாரத்தலங்கள் - தற்போதைய பெயர்கள்

காவிரி வடகரை தலங்கள்

1. கோயில் - சிதம்பரம்

2. திருவேட்களம்

3. திருநெல்வாயில் - சிவபுரி 

4. திருக்கழிப்பாலை -
திருக்கழப்பாலை  

5. திருநல்லூர்ப்பெருமணம் - ஆச்சாள்புரம்

6. திருமயேந்திரப்பள்ளி - மகேந்திரப்பள்ளி 

7. தென்திருமுல்லைவாயில் - திருமுல்லை வாசல்

8. திருக்கலிக்காமூர் - அன்னப்பன்பேட்டை

9. திருச்சாய்க்காடு  - சாயாவனம்

10. திருப்பல்லவனீசுரம் - பூம்புகார்

11. திருவெண்காடு

12. கீழைத்திருக்காட்டுப்பள்ளி

13. திருக்குருகாவூர் - திருக்கடாவூர் 

14. சீர்காழி

15. திருக்கோலக்கா

16. திருப்புள்ளிருக்குவேளூர் -  வைத்தீச்சுரன்கோவில்

17. திருக்கண்ணார்கோவில் - குறுமாணக்குடி

18. திருக்கடைமுடி - கீழையூர் ,கீழூர்

19. திருநின்றியூர்

  
20. திருப்புன்கூர்

21. திருநீடூர்  - நீடூர்

22. அன்னியூர்  - பொன்னூர்

23. திருவேள்விக்குடி

24. எதிர்கொள்பாடி - மேலைத்திருமணஞ்சேரி

25. திருமணஞ்சேரி - கீழை
த்திருமணஞ்சேரி 

26. திருக்குறுக்கை - கொருக்கை

27. கருப்பறியலூர் - தலைஞாயிறு

28. திருகுரக்குக்கா - திருக்குரக்காவல்

29. திருவாழ்கொளிப்புத்தூர் - திருவாளப்புத்தூர் 

30. பழமண்ணிப்படிக்கரை - இலுப்பைப்பட்டு

31. ஓமாம்புலியூர்

32. கானாட்டுமுள்ளூர் - கானாட்டம்புலியூர்

33. திருநாரையூர்

34. திருக்கடம்பூர் - மேலக்கடம்பூர்

35. பந்தணைநல்லூர் - பந்தநல்லூர்

36. கஞ்சனூர்

37. திருக்கோடிக்கா - திருக்கோடிக்காவல்

38. திருமங்கலக்குடி

39. திருப்பனந்தாள்

40. திருஆப்பாடி - திருவாய்ப்பாடி

41. திருச்சேய்ஞலூர் - சேங்கனூர்

42. திருந்துதேவன்குடி - திருத்தேவன்குடி

43. திருவியலூர் - திருவிசலூர்

44. கொட்டையூர்

45. இன்னம்பர் - இன்னம்பூர்

46. திருப்புறம்பயம் - திருப்புறம்பியம்

47. திருவிசயமங்கை - திருவிஜயமங்கை

48. திருவைகாவூர்

49. வடகுரங்காடுதுறை - ஆடுதுறை பெருமாள் கோயில்
 

50. திருப்பழனம்

51. திருவையாறு

52. திருநெய்த்தானம் - தில்லைஸ்தானம்

53. பெரும்புலியூர்

54. திருமழபாடி 

55. திருப்பழுவூர்
- கீழப்பழுவூர்
 

56. திருக்கானூர்

57. அன்பில்ஆலந்துறை - அன்பில்

58. திருமாந்துறை - மாந்துறை

59. திருப்பாற்றுறை - திருப்பாலத்துறை

60. திருவானைக்கா

61. திருப்பைஞ்ஞீலி

62. திருப்பாச்சிலாச்சிராமம் - திருவாசி

63.திருஈங்கோய்மலை - திருவிங்கிநாதமலை 

காவிரித் தென்கரைத் தலங்கள்
 

64. திருவாட்போக்கி - ரத்னகிரி அய்யர் மலை
 

65. கடம்பந்துறை - குளித்தலை

66. திருப்பராய்துறை

67. கற்குடி - உய்யக்கொண்டான்மலை

68. மூக்கீச்சுரம் - உறையூர் - திருச்சி

69. சிராப்பள்ளி - திருச்சி மலைகோட்டை 

70. எறும்பியூர் - திருவெறும்பூர்

71. திருநெடுங்களம்

72. மேலை.திருக்காட்டுப்பள்ளி
 

73. திருஆலம்பொழில்

74. திருப்பூந்துருத்தி

75. கண்டியூர்

76. திருச்சோற்றுத்துறை

77. திருவேதிகுடி

78. தென்குடித்திட்டை -திட்டை

79. திருப்புள்ளமங்கை - பசுபதி கோயில்

80. சக்கரப்பள்ளி - ஐயம்பேட்டை
 

81. திருக்கருகாவூர்

82. திருப்பாலைத்துறை

83. திருநல்லூர்

84. ஆவூர்ப்பசுபதீச்சுரம் - ஆவூர்

85. திருச்சத்திமுத்தம்

86. பட்டீச்சுரம்

87. பழையாறை வடதளி

88. திருவலஞ்சுழி

89. குடமூக்கு - கும்பகோணம்

90. குடந்தை கீழ்க்கோட்டம் - நாகேச்சுரசுவாமிக் கோவில்

91. குடந்தைக்காரோணம் - விஸ்வநாதர் கோவில்

92. திருநாகேச்சுரம்

93. திருவிடைமருதூர்

94. தென்குரங்காடுதுறை - ஆடுதுறை

95. திருநீலக்குடி

96. வைகல்மாடக்கோவில்

97. திருநல்லம் - கோனேரி ராஜபுரம்

98. கோழம்பம் - திருக்கொழம்பியம்

99. திருவாவடுதுறை

100. திருத்துருத்தி - குத்தாலம்

101. திருவழுந்தூர் - தேரழுந்தூர்

102. திருமயிலாடுதுறை

103. திருவிளநகர்

104. திருப்பறியலூர் - பரசலூர்

105. திருச்செம்பொன்பள்ளி - செம்பனார் கோவில்

106. திருநனிபள்ளி - புஞ்சை

107. திருவலம்புரம் - மேலப்பெரும்பள்ளம்

108. தலைச்சங்காடு

109. ஆக்கூர் - தான் தோன்றி மடம்

110. திருக்கடவூர் வீரட்டம் - திருக்கடையூர்

111. திருக்கடவூர் மயானம் - திரு மயானம்

112. திருவேட்டக்குடி

113. திருத்தெளிச்சேரி - கோயில் பத்து

114. தருமபுரம்

115. திருநள்ளாறு

116. கோட்டாறு - திருக்கொட்டாரம்

117. அம்பர்பெருங்கோயில் - அம்பர் ,அம்பல்
 

118. அம்பர் மாகாளம் - கோயில் மாகாளம்

119. திருமீயச்சூர்

120. திருமீயச்சூர் இளங்கோயில்

121. திலதைப்பதி - திலதர்ப்பணபுரி

122. திருப்பாம்புரம்

123. சிறுகுடி
 

124. திருவீழிமிழலை

125. திருவன்னியூர் - அன்னியூர்

126. கருவிலி - கருவிலிக்கொட்டிட்டை

127. பேணுபெருந்துறை - திருப்பந்துறை

128. நறையூர்ச்சித்தீச்சுரம் - திருநறையூர்

129. அரிசிற்கரைப்புத்தூர் - அளகாபுத்தூர்

130. சிவபுரம்

131. கலயநல்லூர் - சாக்கோட்டை

132. கருக்குடி - மருதாந்தநல்லூர்

133. திருவாஞ்சியம்

134. நன்னிலம்

135. திருக்கொண்டீச்சரம் - திருக்கண்டீஸ்வரம்

136. திருப்பனையூர் - பனையூர்

137. திருவிற்குடி வீரட்டம்

138. திருப்புகலூர்

139. திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

140. இராமனதீச்சுரம் - திருக்கண்ணபுரம்

141. திருப்பயற்றூர்

142. திருச்செங்காட்டங்குடி

143. திருமருகல்

144. திருச்சாத்தமங்கை - சீயாத்தமங்கை

145. நாகைக்காரோணம் - நாகப்பட்டினம்

146. சிக்கல்
 

147. கீழ்வேளூர் - கீவளூர்

148. தேவூர்

149. பள்ளியின்முக்கூடல் - அரியான்பள்ளி

150. திருவாரூர்

151. திருவாரூர்அரநெறி

152. திருவாரூர் பரவையுன்மண்டலி

153. திருவிளமர் - விளமல்
 

154. கரவீரம் - கரையபுரம்

155. பெருவேளூர் -மணக்கால் ஐயம்பேட்டை

156. தலையாலங்காடு

157. குடவாயில் - குடவாசல்

158. திருச்சேறை

159. நாலூர்மயானம்

160. கடுவாய்க்கரைப்புத்தூர் - ஆண்டான்கோவில்

161. இரும்பூளை - ஆலங்குடி

162. அரதைப்பெரும்பாழி - அரித்துவாரமங்கலம்

163. அவளிவணல்லூர்

164. பரிதிநியமம் - பருதியப்பர்கோவில்

165. வெண்ணி - கோயில் வெண்ணி

166. பூவனூர்

167. பாதாளீச்சுரம் - பாமணி

168. திருக்களர்

169. சிற்றேமம் - சிற்றய்மூர்

170. திருஉசாத்தானம் - கோயிலூர்

171. இடும்பாவனம்

172. கடிக்குளம் - கற்பகநாதர் குளம்

173. தண்டலைநீள்நெறி - தண்டலைசேரி 

174. கோட்டூர்

175. திருவெண்துறை - வண்டுதறை 


176. கொள்ளம்புதூர் -திருக்களம்பூர்

177. பேரெயில் - ஓகைப்பேரையூர்

178. திருக்கொள்ளிக்காடு - கள்ளிக்காடு

179. திருத்தெங்கூர்

180. திருநெல்லிக்கா

181. திருநாட்டியத்தான்குடி

182. திருக்காறாயில் - திருக்காறைவாசல்

183. கன்றாப்பூர் - கண்ணாப்பூர்

184. வலிவலம்

185. கைச்சின்னம் - கச்சனம்

186. திருக்கோளிலி - திருக்குவளை

187. திருவாய்மூர்

188. திருமறைக்காடு -  வேதாரண்யம்

189. அகத்தியான்பள்ளி

190. திருக்கோடி - கோடியக்கரை

191. திருவிடைவாய்


ஈழநாடு

192. திருக்கோணமலை

193. திருக்கேதீச்சுரம் - இலங்கை மாந்தை


பாண்டியநாடு

194. திருஆலவாய் - மதுரை

195. திருஆப்பனூர் - ஆப்புடையார் கோயில்

196. திருப்பரங்குன்றம்

197. திருவேடகம்

198. திருக்கொடுங்குன்றம் - பிரான்மலை

199. திருப்புத்தூர்

200. திருப்புனவாயில் - திருப்புனவாசல் 

201. திருஇராமேச்சுரம்

202. திருவாடானை

203. திருக்கானப்பேர் - காளையார்கோவில்

204. திருப்பூவணம்

205. திருச்சுழியல் - திருச்சுழி

206. திருக்குற்றாலம் 

207. திருநெல்வேலி


கொங்குநாடு

208. திருப்புக்கொளியூர் - அவிநாசி

209. திருமுருகன்பூண்டி

210. திருநணா - பவானி

211. திருக்கொடிமாடச்செங்குன்றூர் - திருச்செங்கோடு

212. திருவெஞ்சமாக்கூடல் - வெஞ்சமாங்கூடலூர்

213. திருப்பாண்டிக்கொடுமுடி - கொடுமுடி

214. திருக்கருவூர்  - கரூர்


நடுநாடு

215. திருநெல்வாயில்அரத்துறை - திருவட்டுறை
 

216. திருத்தூங்கானைமாடம் - பெண்ணாடம்

217. திருக்கூடலையாற்றூர்

218. திருஎருக்கத்தம்புலியூர் - இராசேந்திரப்பட்டிணம்

219. திருத்தினைநகர் - தீர்த்தனகிரி

220. திருச்சோபுரம் - தியாகவல்லி

221. திருவதிகை

222. திருநாவலூர் - திருநாமநல்லூர்

223. திருமுதுகுன்றம் - விருத்தாசலம்

224. திருநெல்வெண்ணெய் - நெய்வெணை 

225. திருக்கோவலூர் - திருக்கோயிலூர்
 

226. திருஅறையணிநல்லூர் - அரகண்டநல்லூர்

227. திருஇடையாறு - டி .எடையார்

228. திருவெண்ணெய்நல்லூர்

229. திருத்துறையூர் - திருத்தளூர்

230. திருவடுகூர் - ஆண்டார்கோவில்

231. திருமாணிக்குழி

232. திருப்பாதிரிப்புலியூர் - கடலூர்

233. திருமுண்டீச்சுரம்

234. திருபுறவார்பனங்காட்டூர் - பனையபுரம்

235. திருஆமாத்தூர் - திருவாமாத்தூர்

236. திருவண்ணாமலை


தொண்டைநாடு 

237. திருக்கச்சிஏகம்பம் - காஞ்சிபுரம்

238. திருக்கச்சிமேற்றளி - பிள்ளையார் பாளையம்

239. ஓணகாந்தன்தளி

240. கச்சிஅனேகதங்காவதம்

241. கச்சிநெறிக்காரைக்காடு - திருக்காலிமேடு

242. குரங்கணில்முட்டம்

243. மாகறல்

244. திருவோத்தூர் - திருவத்தூர்

245. வன்பார்த்தான்பனங்காட்டூர் - திருப்பனங்காட்டூர்

246. திருவல்லம் - திருவலம்

247. திருமாற்பேறு - திருமால்பூர்

248. திருஊறல் - தக்கோலம்

249. இலம்பையங்கோட்டூர் 

250. திருவிற்கோலம் - கூவம்

251. திருவாலங்காடு 

252. திருப்பாசூர் - திருப்பாச்சூர்

253. திருவெண்பாக்கம் - பூண்டி

254. திருக்கள்ளில் - திருக்கண்டலம்

255. திருக்காளத்தி - காளஹஸ்தி

256. திருவொற்றியூர்

257. திருவலிதாயம் - பாடி

258. வடதிருமுல்லைவாயில்

259. திருவேற்காடு

260. திருமயிலை - மயிலாப்பூர்

261. திருவான்மியூர்

262. திருக்கச்சூர் - ஆலக்கோவில்

263. திருஇடைச்சுரம் - திருவடிசூலம்

264. திருக்கழுக்குன்றம்

265. அச்சிறுப்பாக்கம் - அச்சரப்பாக்கம்

266. திருவக்கரை

267. திருஅரசிலி - ஒழுந்தியாப்பட்டு

268. திருஇரும்பைமாகாளம் - இரும்பை


துளுவ நாடு

269. திருகோகர்ணம் (கோகர்ணா)

மலைநாடு

270. திருவஞ்சைக்களம் - கொடுங்களூர்

வடநாடு

271. திருப்பருப்பதம் - ஸ்ரீசைலம்

272. இந்திரநீலப்பருப்பதம் - நீலகண்டசிகரம் பத்ரிநாத் அடிவாரம் 

273. அனேகதங்காவதம் - கௌரிகுண்டம்

274. திருக்கேதாரம் - கேதார்நாத்

275. நொடித்தான்மலை - கயிலாயம்




                          போற்றி ஓம் நமசிவாய 



                             திருச்சிற்றம்பலம்