rudrateswarar

rudrateswarar

Thursday, January 23, 2014

திருநீலகண்ட நாயனார் புராணம்


                                                    ஓம் நமசிவாய 

 திருநீலகண்ட நாயனார் புராணம்

                            
                      "திருநீலகண்டத்துக்குயவனார்க்கும் அடியேன்"


அவதார தலம் - தில்லை
முக்திதலம்      - தில்லைப்புலீச்சரம்
குருபூசை திருநட்சத்திரம் - தை , விசாகம்   

25-01-14 -சனிக்கிழமை 


இறைவன் திருநடனம் புரியும், தில்லையிலே குயவர் குடியிலே பிறந்தவர் திருநீலகண்டர் இவர் பொன்னம்பலத்து ஆடுகின்ற அம்பலக் கூத்தரின் திருவடிகளிலே மிகுந்த பக்தி கொண்டவர். அதுபோல அடியார்களிடத்து  எல்லையில்லா அன்பும், பக்தியும் உடையவர். பொய் வாழ்க்கையை ஒழித்து, மெய் வாழ்க்கை வாழ்பவர்.எம்பெருமானை திருநீலகண்டம் என்று எந்நேரமும்  நெஞ்சம் உருகப் போற்றி வந்த காரணத்தால் இவரை திருநீலகண்டர் என்ற காரணப் பெயரிட்டு யாவரும் அழைத்து வரலாயினர். 

இவ்வடியார் , தம் மரபின் ஒழுக்கப்படி ஓடுகளைச் செய்து அடியார்க்கு வழங்கும் சிறந்த தொண்டினை மேற்கொண்டிருந்தார். திருநீலகண்டரின் மனைவியும் கணவனுக்கு ஏற்ற கற்புடைச் செல்வியாய் வாழ்ந்து வந்தாள். இவ்வாறு அவர்கள் வாழ்ந்துவரும் நாளில், ஊழ்வினைப் பயனால், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. அவரது பக்தி உள்ளம் ஒரே ஒருமுறை தவறான பாதைக்குச் சென்றது. பொன்னம்பலவாணரின் பக்தனாக இருந்த நீலகண்டர் சிற்றின்பத்தில் மிகவும் விருப்பம் கொண்டவரானார். பரத்தையின் பால் பற்று கொள்ளவும் தவறினாரில்லை. இதை அறிந்த அவரது மனைவி மனம் வருந்தி கணவரிடம் கோபம் கொண்டாள். நீலகண்டர் ஏதும் புரியாது திகைத்தார். கூடல் இன்பம் பெருகவே ஊடல் கொள்கிறாள் மனைவி என்றெண்ணினார் நீலகண்டர். ஒருநாள் இரவு நீலகண்டர், மனைவியின் ஊடலை நீக்கி கூடச் சென்றார். மனைவி பொறுமை இழுந்தாள்.ஐயனே! இனி எம்மை தீண்டுவீராயின் திருநீலகண்டம் என்று கூறித் திருநீலகண்டத்தின் மீதே ஆணையிட்டு, தம்மை தீண்டக் கூடாது என்று கூறி விட்டாள் .

நீலகண்டத்தையே உயிராகவும், உணர்வாக வும் கொண்டிருந்த அடியார்  மனைவி, இவ்வாறு ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டு உளம் பதறி, நிலை தடுமாறித் திடுக்கிட்டுப் போனார். தலைவியின் சொல்லிலுள்ள பொருளைச் சற்றே எண்ணிப் பார்க்கலானர். எம்மை என்றதனால் மற்ற மாதரையும் என்றன் மனதிலும் தீண்டேன் என்று சிவனார் மீது ஆணையிட்டார் நீலகண்டர். அன்று முதல் தீருநீலகண்டர் தனது மனைவியைப் பிற மகளிரைப் பார்ப்பது போலவே பார்க்கலானர். முற்றும் துறந்த முனிவரைப் போல ஐம்புலனையும் அடக்கி வாழலானார். நீலகண்டர் வாழ்ந்து வந்த வீடு மிகச் சிறிய வீடுதான். அந்த வீட்டிற்குள் இருவரும் கட்டுப்பாடோடு வாழ்ந்து வந்தனர். இப்படியாக ஆண்டுகள் பல உருண்டன. நீலகண்டரும், அவரது மனைவியாரும் முதுமைப் பருவத்தை எய்தினர். 


சிவபெருமான், நீலகண்டரின் பெருமையை உலகிற்கு உணர்த்தத் திருவுளங்கொண்டார் . அதற்காக தமது கோலத்தை மாற்றிக் கொண்டு பக்தனிடம் திருவிளையாடலைத் தொடங்கினார்.ஓர் சாது போல் வேடமணிந்தார்.அயன், திருமால், இந்திரன் முதலிய தேவாதி தேவர்கள், தனக்குக் குற்றே வல் புரியும் அடிமைகளாகக் கொண்ட சிவபெருமான், திருவோடு தாங்கி  தெருவோடு நடந்து வந்து நீலகண்டரின் வீட்டை வந்து அடைந்தார்.

நீலகண்டரும் அவரது மனைவியும் பெருமானை வரவேற்று உபசரித்து முறைப்படி வழிபட்டனர். நீலகண்டர் பெருமானிடம், சுவாமி இவ்வடியேன் யாது பணி செய்தல் வேண்டும் ? என பயபக்தியுடன் வினவினார். எம்பெருமான் தன்னிடமிருந்த  திருவோட்டைக் காண்பித்து  நீலகண்டா ! இத் திருஓட்டின் மதிப்பை சொல்ல முடியாதது. விலை மதிப்பிட முடியாதது. கற்பகத் தரு போன்றது, பொன்னும், மணியும், தங்கமும், வைரமும் கூட இதற்கு ஈடாகாது. இத்தகைய திருவோடடை உன்னிடம் ஒப்படைக்கிறேன். திரும்பி வந்து கேட்கும்போது தருவாயாக என்று கூறி திருவோட்டினை நீலகண்டரிடம் கொடுத்தார். நீலகண்டர் பணிவோடு அதனை பெற்று சுவாமி  உங்கள் சித்தம் என் பாக்கியம் என்று கூறினார். திருஓட்டை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தார். 


சிவயோகியரும் தில்லை அடைந்து சில காலம் தங்கி பின் ஒரு  நாள் நாயனாரைக் காண முன்போல் வந்தார். திருநீலகண்டர் அடியாரை வரவேற்று, பாத கமலங்களைக்  கழுவி, ஆசனத்தில் அமரச் செய்தார். சிவனடியார் நீலகண்டரிடம் திருவோட்டைத் தருமாறு கேட்டார். திருநீலகண்டர் விரைந்து சென்று திருவோட்டைப் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் போய் பார்க்க அங்கு அதனைக் காணாது கலக்கமுற்று  மனைவி யிடம் ஓட்டைச் காணவில்லையே என்றார். ஓட்டை அந்த இடத்தில் பாதுகாப்பாக வைத்தது இருவருக்குமே நல்ல ஞாபகத்தில் இருந்தது. அப்படி இருக்க எப்படி காணாமல்  போகும் என்று இருவரும் நிலை தடுமாறினர்.

கவலை தோய்ந்த முகத்துடன் சிவனடியார் பக்கம் வந்து ஐயனே என்று அழைத்து தயங்கி நின்றார் நீலகண்டர். நாயனாரின் தயக்கத் தையும், பயத்தையும் முக மாற்றத்தையும் கண்ட சிவனடியார் சற்று கடுமையாகவே நீலகண்டரிடம், ஏனப்பா ! இத்தனை தாமதம் ? கொடுத்ததைக் கேட்டால் கொடுக்க மனமின்றி ஒளித்து வைத்துக் கொண்டாயா? நான் அவசரமாகப் போகவேண்டும் , காலம் தாழ்த்தாமல் கொண்டு வந்து கொடுத்து விடு என் திருவோட்டை என்றார். அம்மொழி கேட்டுத் திடுக்கிட்ட நாயனார், உண்மையிலே யே அத்திருவோடு காணாமல் போய் விட்டது பெரியீர் என்று பணிவோடு பகர்ந்தார். திருவோடு எப்படி அங்கு இருக்கும் ? திருவோட்டைக் கொடுத்த திருச்சடையானே அதை மறைத்த உண்மையை நீலகண்டர் எப்படி அறிய முடியும்  திருச்சடையையும், நீலகண்டத்தையும், முக்கண்களையும் மறைத்த மறையவர் திருவோட்டையும் மறைத்து விட்டார். நீலகண்டர் உள்ளம் பதறினார். அவருக்கும் அவர் மனைவிக்கும் உலகமே இருண்டது போலக் காட்சியளித்தது அவரது மனைவியோ கண்களில் நீர் மல்க நின்றாள். அடியாரோ பரமசிவனை மனதில் தியானித்தார். பக்தனைச் சோதிக்க வந்த பரமசிவன் நெற்றி கண்ணைத் திறக்காதது தான் குறை! அந்த அளவிற்கு முகத்தில் கோபம் தாண்டவம் ஆடியது. அரனாரது கோபம் கண்டு அஞ்சிய நாயனார் அய்யனே  சினங்கொள்ளாதீர் அறியாது நடந்த பிழை பொறுத்தருளல் வேண்டும். திருவோடு மறைந்த மாயத்தை சிறிதும் நான் அறியேன். மன்னித்து விடுங்கள்! மண் ஓட்டிற்குப் பதில் பொன் ஓடு வேண்டுமாயின் தருகிறேன் என்று பணிவோடு இறைஞ்சினார்.

சிவனடியாருக்கு மேலும் கோபம் வந்தது . என்ன ? வேறு ஒரு ஓடு தருகிறாயா ? நன்று நீலகண்டா ! நன்று ஓட்டின் அருமைபெருமை பற்றி நாம் கூறியதனால் அந்த ஓட்டைத் திருடியிருக்கிறாய் என்ற சீறினார் செஞ்சடை வண்ணர் . அபச்சாரம் ! ஐயனே ! அபச்சாரம் ! உண்மையாகவே கூறுகிறேன் அடியேன் தங்களது திருவோட்டை திருடவில்லை என்று நீலகண்டர் கூறினார் . அப்படித் திருட வில்லை என்பது உண்மையானால் திருவோட்டை நான் திருடவில்லை என்று உன் மகன் கரம் பற்றி பொற்றாமரைக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்யும் என்றார் எனக்கு மகன் இல்லையே சுவாமி ! என்க  மகன் இல்லாவிட்டால் என்ன ? மனைவியின் கையைப் பற்றி நீரிடை மூழ்கி உண்மையை நிலை நாட்டினால் அது போதும் என்றார் சிவயோகியாரின் ஆணை, நீலகண்டரின் மனத்தை மேலும் புண்படுத்தியது. அவர் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளானார். தமக்கும்  மனைவிக்கும் உள்ள பிணக்கை வெளியிட இயலாத நிலையில், சுவாமி மன்னிக்க வேண்டும், நானும் என் மனைவியும் ஒரு சபதம் செய்து கொண்டிருக்கிறோம். எனவே என் மனைவி கரம் பற்றி சத்தியம் இயலாது என்று முடிவாகக் கூறிவிட்டார் நீலகண்டர். இனியும் உன்னோடு பேசிப் பயனில்லை வா  வழக்குமன்றம் செல்வோம் என்று முடிவாகச் சொன்னார் எம்பெருமான். திருநீலகண்டர் அதற்கு சம்மதிக்க எம்பெருமான் முன்செல்ல நீலகண்டரும் அவரைப் பின் தொடர்ந்தார். 


இருவரும் தில்லைவாழ் அந்தணர்களின் அரிய அவையை அடைந்து அவர்களிடம் வழக்கை எடுத்துரைத்தார் அம்பலத்தரசர். நீலகண்டரோ, ஓட்டைத் திருடவில்லை என ஒரே முடிவாக மொழிந்தார். அவையோரும்  அங்ஙனமாயில் சிவயோகியார் விருப்பப்படி நீரில் மூழ்கி சத்தியம் செய்வது தானே என்றனர். நீலகண்டர் மனைவியின் கரம்பற்றி , நீரில் மூழ்க மட்டும் சம்மதிக்கவே இல்லை. ஆனால் அவையினரோ, நீரில் மூழ்கிச் சத்தியம் செய்வது தான் முறை என்று தங்கள் முடிவான தீர்ப்பைக் கூறினர்.சித்தம் கலங்கிப் போன சிவனருட்செல்வர், மனைவியைத் தான் உடலால் தீண்டுவதில்லை என்ற விவகாரத்தை கூறாமல் பொருந்திடும் உரிய வகையில் மூழ்கித் தருவேன் என்று கூற அவையோரும் அதற்கு சம்மதித்தனர்.

அடியார் இல்லம் சென்று, தம் மனைவியாரை அழைத்து கொண்டு திருப்புலீச்சுரத்திலுள்ள   பொற்றாமரைக்குளத்தில் மூழ்கி  எழ விரைந்தார். அனைவரும் திருக்குளம் வந்தனர். நேர்மையின் நிறைவான நாயனார், மூங்கில் கழி ஒன்றினை கொண்டு வந்து அக்கழியின் ஒரு பக்கத்தைத் தாமும், மறு பக்கத்தைத் தம் மனைவியையும் பற்றிக் கொள்ளச் செய்தார். அதுகண்ட அரனார் இல்லாளின் கரம் பற்றியே நீரில் மூழ்கிச் சத்தியம் செய்ய வேண்டும் என கடுமையாக கூறினார். வேறு வழியின்றி நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் அவை அறிய எடுத்துக் கூறி கழியைப் பிடித்துக்கொண்டார். மனைவி கழியினை மறுபுறம் பற்றிக் கொண்டாள். அவையோரின் சம்மதத்தைக்கூட பாராமல் இருவரும் குளத்தில் மூழ்கினார்கள். திருக்குளத்தில் மூழ்கி எழுந்த நீலகண்டரும், அவரது மனைவியாரும் இறைவன் அருளால் முதுமை நீங்கி, இளமையுடன் எழுந்தனர். இதுவரை அங்கிருந்து வழக்காடிய சிவனடியார் திடீரென்று மறைந்து விட்டார். விண்ணில் மலர்மாரி பொழிந்தது . அனைவரும் வியப்பில் மூழ்க ஆலயத்து மணிகள் ஒலித்தன ! சங்கு முழங்கியது ! எங்கும் இசை வெள்ளம் பெருகியது! வானத்திலே பேரொளிப் பிரகாசம் பிறந்தது. ஒளி நடுவே மறை முதல்வோன் உமாதேவி  யுடன் விடை மேல் காட்சி அளித்தார். எங்கும், ஹர ஹர சங்கர  என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை முட்டியது. திருநீலகண்டரும் அவரது மனைவியாரும் அவையோரும் மற்றோரும் நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். ஐம்புலன்களையும் வென்ற அடியவர்களே என்றும் குன்றா இளமையுடன் நலமுடன் இருப்பீர்களாக ! அருளினார் எம்பெருமான். திருநீலகண்ட நாயனாரும் அவரது மனைவியாரும் இறைவனின் திருவருளினால் இளமை மாறாமல், இன்பமுடன் புவனியில் நெடுநாள் வாழ்ந்து அரனாரையும் அவர் தம் அடியார்க ளையும் போற்றி வழிபட்டு நீடுபுகழ் பெற்றனர்










                       போற்றி ஓம் நமசிவாய 




                            திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment