rudrateswarar

rudrateswarar

Wednesday, October 25, 2017

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 09



                    போற்றி ஓம் நமசிவாய

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 09

                    திருச்சிற்றம்பலம்



முத்திநெறி அறியாத பத்திநெறி அறிவிக்காத பழவினைகள் பாறாத சித்தமலம் அறுபடாத சிவமாக தன்னைப் பாவித்து தீட்சை கொடுக்கத் தெரியாதவரிடம் தீட்சை என்று ஏமாந்தவர்களுக்கு அருள் புரிவாய் எம்பெருமானே .

நீங்கள் நினைக்கலாம் திரும்பத் திரும்ப ஒரே விடயத்தை உரைக்கிறோம் என்று. பயிருக்கும் களைக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ளவே .பயிரும் அந்த களையும் ஒரே மாதிரி இருக்கும் வளரும் ஏன் பயிரை விட களை மிகச்செழிப்பாக நன்றாகவே வளரும் . ஆனால் அறுவடை செய்யும்போது தான் உண்மை விளைச்சல் என்ன ? எது கொடுத்தது ?என்று தெரியும் .பயிர் மட்டுமே பயனுள்ள உணவுப் பொருளைத் தரும் இந்த களை பதர் கூட தராது . அது போல உண்மையான ஆச்சார்யாரிடம் தீட்சை பெற்றால் அது முத்திக்கு இப்பிறவியில் இல்லாவிட்டாலும் மறு பிறவியிலாவது வழி காட்டும் .அது தான் வள்ளுவர் சொன்ன ஒருமைக்கண் தான் கற்ற கல்வி என்பது அது தான் எழுமைக்கும் துணையாக வரும்

அடுத்து இவர்கள் மொழியறிவையும் மொழிபெயர்ப்பு அறிவையும் பார்ப்போம்

வழிபாட்டிடத்தில் அஸ்த்ராய பட் என்று சிறிது ஜலம் தெளிக்க என்பதை ஆய்தம்பட் என்று தெளிக்க என்று சொல்கிறீர்களே . அஸ்த்ரம் என்பதை ஆய்தம் என்று மொழிபெயர்த்து விட்டார்கள் .இதற்கும் ஒரு படி மேலே போய் இவர் சீடர்கள் அய்தம்பட் எனவும் ஆயத்தம்பட் எனவும் சொல்கிறார்கள். ஏன் என்றால் வழிபாட்டுக்கு ஆயத்தம் என்று அர்த்தமாம் சிவசிவ . பஞ்சபாத்திரத்தில் ஹ்ருதயாய நம என்று நீர் நிரப்ப வேண்டியதை இதயம் போற்றி என்று நிரப்பிக் கொள்ளவாம் .என்னா புலமை . ஏன் நகலெடுக்கிற வேலை . இது எங்கிருந்து காபி செய்யப்பட்டது பெரியோர்களே வடமொழியிலிருந்தா ? அல்லது தமிழ் வேதத்திலிருந்தா ? அங்குச முத்திரை தேனு முத்திரை நந்தி முத்திரை (ம்ருகீ ) இதெல்லாம் எங்கிருந்து வந்தது ?

ஆசமனம் செய்யும் மந்திரங்கள்

1.போற்றி நாலாறுண்மை (4*6= 24 ஆன்ம தத்துவமாம்)

2.போற்றி ஏழ் மெய்யறிவு (வித்யா தத்துவமாம் )

3.போற்றி ஐந்தாம் உணர்வு போற்றி (சிவ தத்துவமாம் )

ஸ்வதா எனும் மந்திரம் சேர வேண்டிய இடத்தில் போற்றியா .நம என்பதற்கு போற்றி பொருந்தி வரும் .ஸ்வதா வுக்கு ? .அந்த நாலாறும் உண்மையா ? வித்யா என்பதன் மொழியாக்கம் மெய்யறிவு ? சிவதத்துவங்கள் ஐந்து .ஐந்தாம் உணர்வு என்பதனால் ஐந்தாவதாக உள்ளது மட்டுமே என்று தானே பொருள் .அப்போ மற்ற நான்கும் அடங்குமா ? தமிழ் கற்றவர்கள் யாராவது விளக்கலாம். சொல்லும் பொருளுமே தூத்திரியும் என்று பாடிய காரைக் காலம்மை தான் விளக்கவேண்டும்



திருநீறு அபிமந்திரிக்கும் போது சொல்லும் மந்திரமாவது குருநாதர் அருளிய மூலமந்திரத்தால் ஐந்து முறை தொட்டு இறைவன் திருவருளையும் அவன் அருட்கலைகளாகிய நீக்கல், நிறுவல் ,ஞானம் ,மோனம் ,மோனம் கடந்த இயல்புநிலை ஆகிய ஐந்தையும் சிந்தித்து நீர் விட்டுக்குழைக்கவும் . இந்த ஐந்தும் என்ன என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் .இதில் யாராவது சம்ஹிதா மந்திரம் இல்லையா என்று கேட்காதீர்கள் அதற்கு இன்னும் மொழிபெயர்ப்பு கிடைக்க வில்லை . அதே போல விபூதிஉருத்திரரைக் தியானிக்க வேண்டாமா ? என்று கேட்காதீர்கள். அவர் சைவரல்ல அல்லது அவர் தமிழரல்ல என்று கூறிவிடுவார்கள் திருநீறு அணியும் இடங்களைப் பற்றியோ அதன் அளவுகளைப் பற்றியோ திருமுறைகளில் எங்காவது சொல்லப் பட்டுள்ளதா ?

அகமர்ஷணம் செய்ய மந்திரம் ஒன்றுமில்லை நன்று நாள்தொறும் என்ற அப்பர் குறுந்தொகை பாடினால் போதும் . அடுத்து தர்ப்பணம் .தர்ப்பணம் என்பது இவர்களுக்குத் தெரிந்தவரையில் முன்னோர்களுக்கு செய்வது தான். அதனடிப்படையில் மறைந்த முன்னோர்களை நினைந்து மூவேழ் சுற்றம் முரணுற நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி என்ற மந்திரம் ? சொல்லி மூன்று முறை சங்குமுத்திரையால் நீர் விடுக என்பது தான். இந்த மூலமந்திரம் சொல்லி சிவகாயத்ரி சொல்லி சம்ஹிதா மந்திரம் சொல்லி பின்னும் மந்திரங்கள் .தேவர்கள் ரிஷிகள் மானுடர்கள் பூதங்கள் பிதுர்க்கள் ஞாதிக்கள் ஆச்சாரியார்கள் எண்கணங்கள் இவர்களுக்கு என்று நீங்கள் கேட்பது புரிகிறது .  இதற்கெல்லாம் திருமுறைகளில் பாடல் கிடைத்தால் போடமாட்டார்களா ?

சூர்யோபஸ்தானம் செய்ய மந்திரம் ? இன்றெனக்கருளி இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போற்றி சொன்னால் போதும் . அடுத்து மூச்சடக்கம், சிவம் (ஜபம்) பஞ்சபுராணம் அவ்வளவு தான் அனுஷ்டானம் முடிந்தது

ஏன் இப்படி தமிழ்வழிபாடு என்ற பெயரில் மொழிபெயர்ப்பு மந்திரமும் பொருந்தாத திருமுறைப்பாடலும் போட்டு மக்களை நன்னெறி சென்று உய்வு பெறுவதைத் தடுத்து சிவாபராதம் தேடுகிறீர்கள் .திருமுறைகள் நமக்கு கிடைத்து சற்றேறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகிறது என வைத்துக்கொள்வோம் இந்த காலகட்டங்களில் எத்தனை தமிழ் அறிஞர்கள் அருளாளர்கள் வந்து சென்று விட்டார்கள் அவர்களை விட இன்று தமிழ்வழிபாடு என்று சொல்பவர்கள் எந்த விதத்தில் தகுதி பெற்றவர்கள் என்று சிந்தியுங்கள்.

ஏற்கெனவே சாமி அருளிய வேத ஆகமம் இருக்கிறது அது அரிசி .இவர்கள் அதை மொழிபெயர்த்து அந்த கிரியைகளை காபி அடிப்பது உமி .ஏன் அரிசியே இருக்க இவர்களின் உமியுடன் கலந்து ஊதி தின்ன வேண்டும்

என்று நீ அன்று நான் என்பது தாயுமானார் வாக்கு அது போல என்று சிவமோ அன்று முதல் அவர் அருளிய வேதாகமங்கள் அவைகளே வழிபாட்டில் போற்றப்பட வேண்டியவை



                    திருச்சிற்றம்பலம்

Saturday, October 21, 2017

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 08



          போற்றி ஓம் நமசிவாய 
தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 08

            திருச்சிற்றம்பலம்

கு அஞ்ஞானம் , ரு நீக்குபவர் குரு- அஞ்ஞானத்தை நீக்குபவர் . அதாவது மல நீக்கமும் சிவஞானவிளக்கமும் அளிப்பவர்.

சென்ற பதிவில் தமிழ்வேள்வி வழிபாட்டின் முன்னோடிகளின் தகுதிகள் என்ன  எவ்வாறு எனப் பார்த்தோம் .சுந்தர மூர்த்தி சுவாமிகள் தமது ஆமாத்தூர் பதிகத்தில் முதல் பாடலில் மீண்டனன் மீண்டனன் வேத வித்து அல்லாதவர்க்கே என்று அருள்கிறார் . கச்சியப்ப சுவாமிகள் கந்தபுராணத்தில் 2038 ஆம் பாடலில் வந்தனைசெய் வேதநெறி மாற்றினர்கள் மாறாச் செந்தழல வாய நிரயத்தினிடை சேர்வார் என்று அருளியுள்ளார் . இப்படியிருக்க அவர் கோயில் கட்டினால் மட்டும் சுந்தரர் அருள் இவர்களுக்கு எவ்வண்ணம் கிட்டும் .
பொருள் பற்றும் புகழ்ப்பற்றும் தவிர இறை பக்தி இறைப்பொழுதும் இவர்களிடம் கிடையாது . தனது இனிசியலைக் கூட விடாத ஒருவர் எப்படி பந்த பாசமறுத்து நிர்வாண ஆச்சார்ய அபிஷேகம் பெற்று சிவத்தையடைவார் அல்லது தனது சீடர்களுக்கு வழிதான் காட்டுவார் . எல்லாமே போலி வேடம் சில ஆண்டுகள் முன் திருச்சிராப்பள்ளியில் ஒரு சைவப் பெரியார் ஒருவரின் படத்தை அவரது சீடர்கள் சிவபெருமானாக சித்தரித்து போட்டுவிட்டனர் அதற்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும் .அந்த பெரியார் அப்படி புகழ் விரும்பியல்லர் என்று சைவ உலகமே அறியும் .அவரை இந்த ஒளியரசுவின் சீடர்கள் எவ்வளவு சீரழித்தார்கள் தெரியுமா ? இன்று இவர் படம் இவருடைய பிரதம சீடர் படம் எல்லாம் பூசையறையை அலங்கரிக்கிறது சிவத்துக்கு நிகராக மலம் நீங்கப் பெறாதவர்கள் படம்

கோவையில் ஒரு முதுமுனைவர் விஷேட தீட்சை பெற்றுள்ளார் அவர் தீட்சை கொடுக்கிறார் ? யாரோ சிலரின் ஆதரவு இருக்கிறது என்பதனால் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்களா ? பிரதோஷ வழிபாடு பிறதேச வழிபாடு என்று ஒரு கட்டுரை இவர் வரைந்தது தான் எங்கேயாவது அதை பிறதேசவழிபாடு தான் என்று நிறுவியுள்ளாரா ? இல்லை. இப்படியே தான் இவர்கள் செயல்கள் இருக்கும் பிரதோசத்தை வைத்து மக்கள் ஆலயவழிபாடு மேற்கொள்வதில் இவர்கள் என்ன கஷ்டம் கண்டார்கள். தமிழ் ஆர்வலர்கள் என்றால் அத்தோடு இருக்க வேண்டியது தானே ? தமிழாளர்கள் எல்லாம் அருளாளரா ? வழிபாட்டில் தமிழ் என்று கொண்டு பொருள் சம்பாதிக்கும் ஒரே நோக்கம் கொண்டுள்ளனர் . உண்மையான பக்தி இருந்தால் இறைவன் நம்மை நோக்கிக்கொண்டுள்ளார் என்ற பயம் இருந்தால் இல்லாத நெறியை உருவாக்கிக் காசு பார்ப்பீர்கள் .? முறையாக மந்திரம் கற்க கூடாது .முறையாக திருமுறை பண்ணோடு பாட கற்கக்கூடாது ஆனால் நாங்கள் வேள்வி செய்வோம் என்பது தமிழ்ப்பற்றுமல்ல திருமுறைப்பற்றுமல்ல சிவப்பற்றுமல்ல . பொருள்பற்றே . பேருந்து நிலையத்திலும் இரயிலிலும் திரைப்படப்பாடல் பாடி காசு பெறுவோர்க்கும் உமக்கும் என்ன வேறுபாடு .

சம்பந்தர் சுவாமிகள் தன்னை தமிழ்ஞானசம்பந்தர் என்று சொல்லிக் கொள்கிறாராம் . தமிழில் பாடும்போது தமிழ்ஞானசம்பந்தர் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்லமுடியும் ? தமிழ்நாட்டைக்கடந்து தமிழ்மொழி இல்லாததால் காளத்தியிலிருந்து வடதேய தலங்களைப்பாடினார் .ஏன் மறை ஞானசம்பந்தர் என்றும் தான் சொல்லியுள்ளார் .

மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்

தூய்மையான மறைகளைப் பண்டு அருளிச் செய்த சிவபெருமான், மேலும் நீ என்னுடன் வன்மையான சொற்களைச் சொல்லி வழக்கிட்டமையால், வன்தொண்டன் என்னும் பெயரைப் பெற்றாய். நமக்கும் அன்பினால் செய்யும் திருமுழுக்காட்டுதல் திருமாலை அணிவித்தல், திருவிளக்கிடுதல் முதலாய வழிபாடுகளினும் மேலான வழிபாடாவது போற்றியுரைக்கும் புகழுரைகளே யாகும். ஆதலின் இந்நிலவுலகில் நம்மைத் தமிழ்ச் சொற்களால் ஆகிய பாடல்களைப் பாடுக என்றருளிச் செய்தார் .
இப்பெரியபுராணப் பாடலைச் சொல்கிறார்கள் சுவாமியே தமிழில் பாடுவது தமக்கு விருப்பம் என்று . நாமும் அதையே சொல்கிறோம் பாடுங்கள் பாடி உய்வு பெறுங்கள் வேள்விசெய்யாதீர்கள் என்று .ஏனெனில் தூமறை பாடும் வாயான் என்றதனால் ஏற்கெனெவே மறை உள்ளது அது சிவபெருமானால் சொல்லப்பட்டது என்பது புலனாகிறது. இதையே எவ்வளவு நாட்களுக்கு தான் சொல்லிக்கொண்டு திரிவீர்கள் .

        திருச்சிற்றம்பலம்

Friday, October 20, 2017

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 07



         போற்றி ஓம் நமசிவாய 
தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 07

                          திருச்சிற்றம்பலம்

தமிழ்வேள்வி வழிபாட்டுக்கு முன்னோடி என்று ஒருவரைக் கூறுகிறார்கள்
வேதாசலம் பிள்ளையை .இவர் தனித் தமிழ் இயக்கம் காணட்டும் இன்னும் எதுவும் காணட்டும் இவர் தனது பெயரைத் தானே தமிழ்ப்படுத்தி மறைமலை என்று வைத்துக்கொண்டார் நமக்கு ஆட்சேபணை இல்லை. வாதவூரடிகள், நமிநந்திஅடிகள் , பெரியபெருமான் அடிகள் என்பது போல தனக்குத்தானே அடிகள் என்று தம்மைக் கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திக்கொண்ட அக்கால நீதிக்கட்சிக்காரர் .இவர் செய்த அநியாயத்துக்கு அளவேயில்லை நம் சமயக்குரவர்களின் பெயரை தமிழ் படுத்தினார் பாருங்கள்
திருஞான சம்பந்தர் -  அறிவுத்தொடர்பு , மாணிக்க வாசகர் - மணிமொழி, சுந்தரமூர்த்திஅழகுரு , 
அப்பர் தப்பினார் இதில் . இறைவனிடமும் அருளாளர்கள் மீதும் உண்மையான பயபக்தி இருந்தால் மலம் நீங்கப்பெறாத  தனது பெயரை அடிகள் என்றும் சமயக் குரவர்களின் பெயரையும் மாற்றுவார் .

இவர் யாரிடமும் தீட்சை பெறவில்லை சிவபூஜை செய்யவில்லை ஏன் சிவசின்னம் கூட தரிக்காத இவர் ஈரோடு ராமசாமியின் தோழர் என்றால் மிகையில்லை. இவர் எப்படி வழிபாட்டு முறையில் தலையிடலாம் ? தகுதி தான் என்ன ?   சண்டமாருதம் சூளை சோமசுந்தரம் நாயகர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் மட்டும் படித்தவர் .

அடுத்து இவரிடம் தமிழ் படிக்க வருகிறார் பாலசுந்தரம் அவர்கள் .இவருக்கு தனித் தமிழ் பெயராக இளவழகனார் என்று பெயர் மாற்றம் செய்கிறார் இவர் தனது ஆசிரியர் வழியில் தனது பெயரை ( தீட்சா நாமம்? ) அழகரடிகள் என்று வைத்துக் கொண்டார் . இவர் திருக்குறள் பீடம் நிறுவியவர் . இருக்கட்டும் இவர்களின் தமிழ் அறிவு கற்றதனால் ஆய பயனென் கொல் என்ற குறளுக்கு விளக்கமாக இல்லை. நாலு பேர் போன வழியும் போகவில்லை அவர்கள் காட்டிய வழியும் போகவில்லை .வேதம் ஆகமம் முதலியவை இறைவனால் அருளப்பட்டவை என்ற நால்வர் வாக்கை தூக்கியெறிந்தனர் . திருமுறைகளுக்கும் சைவ சித்தாந்தத்திற்கும் புதுமையாக இவர்கள் மனம் போன போக்கில் உரை சொன்னார்கள்.இன்னும் கூட சித்தாந்தத்திற்கு எல்லோரும் ஒரே மாதிரியான உரை சொல்வதில்லை அது நமக்கு வேண்டாம்
தீட்சா முறைகள் மற்றும் கிரியைகள் ஆகமத்தில் மட்டுமே விரிவாக கூறப் பட்டுள்ளது அதன் பின் திருமந்திரம் சித்தியார் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது தீட்சை என்பது பாசமாகிய மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுப்பது .இந்த தீட்சையின் தாற்பரியம் எதுவும் இல்லாமல் இவர்களாக ஒரு தீட்சை முறையை உருவாக்கி மக்களை ஏமாற்றத் தொடங்கினர் .மலம் நீங்கி குருநாதரால் ஞானநோக்கம் அருளப்பெறாத மந்திர உபதேசம் பெறாதவர் எப்படி அதை மற்றவர்களுக்கு செய்து வைக்கமுடியும் ?. அந்த பாவனை எப்படித்தெரியும் ?.மந்திரம் என்ன பீஜம் சேர்த்து சொல்லவேண்டும் என்பதெல்லாம் இவர்கள் சம்பந்தர் போல ஓதாமல் உணர்ந்தரோ ?
இவரிடம் நடராசன் என்பவர் வருகிறார் அவருக்கு ஆடலரசு என்று தனித்தமிழ்ப் பெயர் சூட்டப்படுகிறது .அது அவருக்கு தீட்சாநாமம் ? ஆனது. இந்த பெயர் மாற்றியதே சமய விஷேட நிர்வாண ஆச்சார்ய தீட்சை ஆனது. ஆடலரசு அவர்கள் தம்தமிழ் குருநாதரைப் போலல்லாமல் எதோ இரண்டு கிரியைகள் அதாவது சீடன் மேல் நூல் போடுவது கையால் தொடுவது கண்ணால் பார்ப்பது எல்லாம் செய்கிறார் .இதெல்லாம் ஏதோ நூல்களில் படித்து விட்டு அதன் படி செய்கிறார் .ஆனால் அப்படி செய்யும் பாவனைக்கு பலன் உண்டாக்கத்  தெரிய வேண்டுமே வெறுமனே செய்து என்ன பயன் ?.உண்மையில் சொல்லப்போனால் தீட்சையில் வர்த்தினி என்றால் யார் என்று கேட்பார்கள் ஆனால் என்ன செய்தாலும் கோளறுபதிகம் திருநீலகண்டப்பதிகம் , இடர்களையும் பதிகம் ,பஞ்சாக்கரப்பதிகம் , தவநெறிப் பதிகம் இவை தான் மந்திரம் . இன்று வரை எல்லா வேள்வியிலும் தீக்கை நிகழ்விலும் இவைதான் பாடப் படுகிறது. நால்வர் வாக்கை இவர்கள் மதியாமல் போனாலும் இப்பதிகங்கள் தான் சோறு போடுகிறது என்பது நிஜம்.
எப்படியோ ஆடலரசு சமய விஷேட தீட்சை மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தார் அவரிடம் நிர்வாண தீட்சை கேட்டவர்களுக்கு 12 ஆண்டுகள் ஆகவேண்டும் என்று கூறித் தப்பிவிட்டார் . அடுத்து இவர் தனது மகன்கள் அருளரசு மற்றும் ஒளியரசு அவர்களிருவருக்கும் நிர்வாண ஆச்சார்ய அபிஷேகம் செய்து வைத்ததாக சொல்லப்பட்டு அவர் காலத்திற்குப்பின் அவர்கள் தீட்சை வழங்கலாயினர் .ஏன் தமிழகம் முழுக்க சீடர்கள் இருக்க தம் இருமக்களுக்கு மட்டும் ஏன் நிர்வாண ஆச்சார்ய அபிஷேகம் செய்து வைக்கவேண்டும் . வேறு பக்குவமானவர் ஒருவரும் இல்லையா ? இங்கு தான் மிக முக்கிய காலகட்டம் நிர்வாண தீட்சைக்கான வழிமுறை தெரியாது . அவர்களும் திருமடங்கள் வெளியிலுள்ள ஆச்சார்யார்கள் பலரிடம் கேட்டும் யாரும் அதற்கான செயல்விளக்கம் அளிக்கத் தயாராய் இல்லை. இந்நிலை இப்படியிருக்க நாங்கள் விஷேட தீட்சை பெற்று 15 ஆண்டுகள் ஆகிறது எங்களுக்கு நிர்வாண தீட்சை வழங்க வேண்டும் என்று பலரும் கேட்க தமிழ் முதுமுனைவர் ஒருவரிடம் கலந்து பேசி இவர்களே ஒரு வழிமுறை தயாரித்து (ஆகமசீலரோ) அதற்கு மேலும் இரண்டு பதிகங்கள் சேர்த்துப்பாடி கொடுத்துவிட்டார்கள் . இருபிறப்பாளன் என்பதற்கு அடையாளமாக தீட்சா நாமம் கிடையாது நிர்வாண தீட்சை பெற்றவர் நித்தம் எரியோம்பல் செய்ய வேண்டிய தில்லை .ஏனெனில் ஆச்சார்யரே செய்வதில்லை .அதற்கெல்லாம் எங்கே வழிவகை தேடுவது ? தீட்சை செய்து வைப்பதே பெரிய வேலையாய்ப் போயிற்று சிவசிவ . ஒளியரசு அவர்களை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்த சீடன் ஒருவர் நிர்வாண தீட்சை கேட்க அவர் காலம் தாழ்த்த அந்த சீடன் இறைவரின் பெருங்கருணையினால் நல்ல ஆச்சார்யர் ஆகமசீலர் கிடைக்க பழைய குருவான ஒளியரசுவிடம் ஆசி கேட்கிறார் . அப்பொழுது அவர் சொல்கிறார் அந்த நிகழ்வை வீடியோ எடுத்து தரமுடியுமா ? என்று .ஏன் ஐயா அது எதற்கு ?என்று கேட்க நிர்வாண தீட்சை வழிமுறைகள் தெரியவில்லை என் தந்தை எமக்கு முறையாக செய்து வைக்கவில்லை கிடைத்தால் சவுகரியமாயிருக்கும் நிறையப்பேர் கேட்கிறார்கள் என்று சொல்ல அந்த சீடனின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ? நாம் இவ்வளவு காலம் முறையாக தீட்சை உபதேசம் பெறாத ஒருவரையா ஆன்மநலம் கிட்டும் என நம்பிக்காலம் கழித்தோம் என்று மிகவும் நொந்துவிட்டார் .எப்படி பிறப்பு இறப்பு இல்லாத ஒருவரால் மட்டுமே பிறவாமையைத் தரமுடியுமோ  அதுபோல மலம் நீங்கி வினைகள் நீங்கிய ஒருவராலேயே சீடனின் மலம் நீக்கி ஞானத்தை புகட்டிடமுடியும் இவர் ஆன்மாக்கள் உய்ய வழிகாட்டாமல் ஆன்ம துரோகம் செய்கிறாரே பொய்யாக ஏமாற்றுகிறாரே போலிசாமியாருக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு ? மனச்சாட்சியே இல்லையா இவர்களுக்கு ? இன்னம்பர் ஈசன் இவர்களின் கீழ்க்கணக்கைப் பார்க்கமாட்டாரா என்று பிரார்த்திக்கிறார் .இன்று சாதாரண ஆரம்பப்பள்ளி ஆசிரியராவதற்கே டெட் நெட் தேர்ச்சி தேவை என்கிறார்கள் . அப்பொழுது இந்த அருளியல் கல்விக்கு எவ்வளவு தகுதி தேவை என பாருங்கள் . இப்படிபட்ட தகுதியற்ற வழிகாட்டிகள் தான் தமிழ்வேள்வி வழிபாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனர் .புரிந்துகொள்ளுங்கள் என்று முதல் பதிவுக்கு வருகிறோம் . மருத்துவம் முறையாகக் கற்றுத் தகுதி பெற்று ஊசி போடுங்கள் நீங்கள் ஆரம்பக்கல்வியே முறையாகக் கற்காமல் ஆப்ரேசன் செய்வது எப்படி ?
இறைவா இன்னொரு சம்பந்தர் வேண்டும் பெருமானே

             திருச்சிற்றம்பலம்

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 06



                    போற்றி ஓம் நமசிவாய

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 06

                        திருச்சிற்றம்பலம்


பெரியபுராணம்-திருமூலதேவநாயனார் புராணம் பாடல்-23


தண்ணிலவார் சடையார்தாம் தந்த ஆகமப்பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்பக்
கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த ணர்வுடையார் ஈசர் அருள் னவுணர்ந்தார்

சிவபெருமான் தாம் அருளிய ஆகமப்பொருளை இந்நிலவுலகில் திருமூலர் வாக்கால் தமிழில் சொல்வதற்கு வாய்ப்பாக சிவயோகியார் உடலை மறைப்பித் தருளினார் என்று உணர்ந்தார். சடையார் என் உரைத்ததினால் தமது ஐந்து திருமுகங்களால் ஆகமம் அருளப்பட்டது என்பது முடிவான முடிவாகும்
இப்புராணம் வாயிலாகவும் ஆகமங்கள் சிவபெருமானால் அருளப்பட்டது என் தெளிவுபடுத்தப்படுகிறது .இனி திருமூலர் வாக்கால் அறிவோம்

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

மாதோர்பாகனாகிய சிவபெருமான் ஐந்தோடு இருபத்து மூன்று (5+23) அதாவது இருபத்தெட்டு ஆகமங்களை அருளினார் என்பது தெளிவு

ஐம்ப தெழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்ப தெழுத்தேயும் ஆவதறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே

இப்பாடல் மூலமும் வேதம் ஆகமம் இரண்டுமே வடமொழியில் தான் உள்ளது என அறியலாம். தமிழில் திருமந்திரத்தில்  திருவம்பலச்சக்கரம் அருச்சனை திரிபுரைச்சக்கரம் வயிரவிச்சக்கரம் சாம்பவி மண்டலச்சக்கரம் புவனாபதி சக்கரம் நவாக்கரி சக்கரம் ஆகியவற்றில் வடமொழி மந்திரங்களும் எழுத்துக்களும் உள்ளதால் அறியலாம் . ஆக வேதம் ஆகமம் இரண்டுமே வடமொழியில் தான் உள்ளது
இரண்டுமே சிவபெருமானால் அருளப்பட்டது . அவையே வேள்விக்கும் பூஜைக்கும் உரியன . சிவாலயங்கள் கட்ட துவங்குவதிலிருந்து பிரதிஷ்டை கும்பாபிஷேகம் அதன்பின் நித்திய நைமித்திகம் காமிக புண்ணியகால பூஜை முறைகள் என அனைத்துமே ஆகமங்களில் தான் சொல்லப்பட்டுள்ளது . ஸ்தபதிகள் யாராவது இவர்கள் தமிழ் வேள்வி வழிபாடு எனச்சொல்வது போல தமிழ் ஸ்தபதிகள் என்று கூறுகிறார்களா ? இல்லை அவர்கள் முற்றிலும் ஆகம முறைகளைக் கடைப்பிடிப்பவர்களே. திருமுறைகளில் அவை சொல்லப்பட வில்லை .அதே போல திருமுறைகளில் திருமுறைகளை வேள்வி செய்ய பயன்படுத்தவும் கூறவில்லை . நம என்பதை நாங்கள் போற்றி என்கிறோம் தவறா என்பார்கள். அது தவறில்லை. ஏழுகோடி மந்திரங்களில் மீதி ஸ்வாஹா , ஸ்வதா ,வஷட் ,வெளஷட் ,ஹூம் , பட் ,இவைகளை என்ன சொல் கொண்டு நிரப்புவீர்கள் .ஐநூறு ரூபாயை கடையில் கொடுத்தால் பொருள் கிடைக்கும். அந்த ஐநூறு ரூபாயை நகல் எடுத்துக் கொடுத்தால் என்ன கிடைக்கும் ? அது போல வடமொழி மந்திரங்களை மொழி பெயர்த்துக் கூறுவதில் பயன் உண்டா? மந்திர பீஜங்களுக்கு உள்ள வைப்ரேசனை அந்த மொழிபெயர்ப்பு மந்திரம் கொடுக்குமா ?
சைவத்தை அழிக்க வந்த கைக்கூலிகளால் தமிழ் தமிழ் என்று வெற்று வாய்வீச்சாளராக தமிழை முன் நிறுத்தி தன் குடும்பத்தை வளர்த்த சிலரால் தான் இந்நிலைமை. இந்த தமிழ் பற்றாளர்கள் சுயரூபம் தெரியுமா மக்களே 1.இவர்கள் ஒன்று நல்ல பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தமிழ்பற்று வரும் 2. வருமானம் பற்றி தமிழ் பற்று வரும்.ஆனால் இந்த தமிழ் பற்றாளர்களின் குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வியில் பொறியியலும் கணிணித்துறையிலும் வணிகவியலும் மருத்துவமும் சி பி எஸ் சி பள்ளிகளிலும் படிக்கிறார்கள். இவர்கள் தமிழ் வளர்க்க இவர்கள் வீட்டுக்குழந்தைகளை தமிழ் பள்ளியில் தமிழ் இலக்கியம் படிக்கவைக்க வேண்டியது தானே .அதைவிட்டு இறை நம்பிக்கையில் எழு பிறப்புக்கும் நம்மைத் தொடரும் புண்ணிய பாவ ஈட்டங்களில் வழிபாட்டில் உங்கள் தமிழார்வத்தைக் காட்டி சிவாபராதத்தை நீங்களும் தேடி உங்களுக்கு பொருளை வழங்குவோர்க்கும் தேடித்தராதீர்கள். உலகியல் எனும் இம்மை வாழ்க்கைக்கு அந்நிய மொழி ஆங்கிலம் கற்கும் சுயநல திராவிடக்கட்சியின் ஆன்மிகப்பிரிவினரே அம்மை நலம் அருளும் வடமொழி ஏன் கற்று முறையான வழிபாடு செய்யவேண்டியது தானே ?

இவர்களின் போலி வேள்வியில் செய்யும் முத்திரைகள் கிரியைகள் அனைத்தும் ஆகமத்தில் சொல்லப்பட்டதை அரைகுறையாக காபி அடித்து அரைகுறையாக செய்யப்படுபவையே. முழுமையில்லை மந்திரம் கிரியை பாவனை இவை மூன்றும் சேர்ந்து செய்யப்படுவதே வழிபாடு .முதலில் மந்திரமில்லை.ஏனெனில் திருமுறைகள் திருவிசைப்பா வரை எல்லாம் இசைப்பாக்கள் தோத்திரங்கள் புகழ் நூல்கள். அவை இசை பற்றி வந்தது என ஏற்கெனவே கூறியுள்ளோம் .இவர்களுக்கு கிரியை செய்யத் தெரியாது ஏனெனில் யாரும் இதற்கான முறையான பயிற்சி பெற்றவர் இல்லை. இது  பாரம்பரியமான ஒன்று அல்ல .சமீபகாலமாக வந்தது . சைவ அருளாளர்கள் சேக்கிழார் கச்சியப்பர் குமரகுருபரர் தாயுமானார் ஆதீன கர்த்தர்கள் சிவஞான சுவாமிகள் இந்நூற்றாண்டில் சமீபத்தில் வாழ்ந்த வாரியார் சுவாமிகள் என யாரும் இந்த வழிபாட்டை ஏற்கவில்லை . இறை வழிபாட்டில் இந்த போலிகளை இனம் கண்டு கொள்ளுங்கள். எட்டு ஆண்டுகள் குருகுல வாசமில்லை . நான்கு ஆண்டுகள் திருமுறை பண்ணோடு பாடக் கற்கவில்லை முறையான தீட்சா பாரம்பரியம் இல்லா ஒருவரிடம் போலி தீட்சை பெற்று சிவபூசை செய்யும் தகுதி கூட இல்லாமல் வேள்வி செய்யக் கிளம்பும் இந்த தகுதியற்ற பொக்கம் மிக்கவர்கள் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே.

                திருச்சிற்றம்பலம்