rudrateswarar

rudrateswarar

Friday, September 20, 2013

உருத்திரபசுபதி நாயனார் புராணம்


                               ஓம் நமசிவாய 


 உருத்திரபசுபதி நாயனார் புராணம்


                            "உருத்திர பசுபதிக்கும் அடியேன்"


அவதார தலம் - திருத்தலையூர்
முக்தி தலம் - திருத்தலையூர்
குருபூசை திருநட்சத்திரம் -புரட்டாசி ,அசுபதி

22-10-2013 ஞாயிற்றுக்கிழமை



சோழவள நாட்டிலே பூம்பொழில்கள் மிகுந்துள்ள ஊர் திருத்தலையூர் . இவ்வூரில் அந்தணர்களின்  வேதபாராயணம்  ஒலித்த வண்ணமாகவே இருக்கும். இவர்கள் வளர்க்கும் வேள்வித்தீயின் பயனாய் மாதம் மும்மாரி பெய்யும் அளவிற்கு அருளுடைமை யும், பொருளுடைமையும் ஓங்கிட அன்பும் அறனும் ‌குன்‌றாது குறையாது நிலை‌ பெற்று விளங்கின. இத்தகைய சீரும், சிறப்புமிக்க திருத்தலையூரில் பசுபதியார் என்னும் ஓர் அந்தணர் இருந்தார். இவர் தமது மரபிற்கு ஏற்ப வேத சாஸ்திர, இதிகாச புராணங்களில் சிறந்த புலமை பெற்றிருந்தார். பசுபதியார் அருமறைப் பயனாகிய திருஉருத்திரம் என்னும் திருமந்திரத்தை இடையறாமல் பக்தியுடனும், அன்புடனும் சொல்லிக் கொண்டேயிருப்பார். 



அருமறைப் பய னாகிய உருத்திர மதனை
வருமுறைப் பெரும்பகலும்எல் லியும்வழுவாமே
திருமலர்ப் பொகுட்டிருந்தவன் அனையவர் சிலநாள்
ஒருமை உய்த்திட உமையிடம் மகிழ்ந்தவர் உவந்தார்.




ருத்திரன் என்றால் துன்பங்களினின்றும் விடுப்பவன் என்று பொருள் சிவபெருமானுக்கு உருத்திரம் கண்ணாகவும், பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்கின. எம்பெருமானுடைய பெருமையை சொல்லும் இம்மந்திரமே வேதத்தின் மெய்ப் பொருளாகும். அருமறைப் பயனாகிய உருத்திரம் என்று சேக்கிழார் சுவாமிகளால் பாராட்டப்பெற்றுள்ள இத்திருமந்திரத்தையே  தமது மூச்சாகக் கொண்டு ஒழுகி வந்தார் பசுபதியார். இவர் மனத்தாலும் வாக்காலும் மெய்யாலும் சிவத்தொண்டு புரிந்து வந்தார். இவர் தினந்தோறும் தாமரைப் பொய்கையில் நீராடி கழுத்தளவு நீரில் நின்று கொண்டு தலைக்கு மேல் கை குவித்து உருத்திர மந்திரத்தை ஓதுவார். இரவு பகல் பாராமல் எந்நேரமும் உருத்திரத்தைப் பாராயணம் செய்வதிலே தம் பொழுதெல்லாம் கழித்தார். இது பற்றியே இவருக்கு உருத்திர பசுபதியார் என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது. 


நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தன ரவர்க்குப்
பாடு பெற்றசீர் உருத்திர பசுபதி யாராங்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.



உருத்திர பசுபதியாரின் சிவபக்தி பற்றி அனைவரும் புகழ்ந்து பேசிய வண்ணமே இருப்பர். உருத்திரபசுபதியாரின் பக்தியின் பெருமை எம்பெருமானின் திருவுள்ளத்தை மகிழச் செய்ய எம்பெருமான் திருவுள்ளம் கனிந்து, பசுபதியாருக்குப் பேரருள் புரிந்தார். உருத்திர பசுபதி நாயனார் இறைவனுடைய திருவடி அருகில் அரும்பேற்றைப் பெற்றார்.


                       போற்றி ஓம் நமசிவாய


 


                            திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment