rudrateswarar

rudrateswarar

Monday, March 24, 2014

திரு நந்திதேவர் திருக்கல்யாணம்

                                                ஓம் நமசிவாய


திரு நந்திதேவர் திருக்கல்யாணம்  



பங்குனி 24 ஆம் நாள்  07-04-14  திங்கள்கிழமை 
 

நந்தியெம்பெருமான் சைவ குரு பரம்பரைக்கு முதல் குருநாதன் ஆவார் திருக்கயிலை வாயில் காப்பாளராகவும் இருப்பவர். இவர் பூலோகத்தில் அவதரித்துத் திருமணம் செய்து கொண்டது பற்றிப் புராணம் கூறுகிறது.

பூலோகத்தில் வாழ்ந்த சிலாத முனிவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் திருவையாற்றில் அருள்புரியும் ஐயாறப்பரைப் பூஜித்துத் தவம் செய்தார். அப்போது ஓர் அசரீரி, "முனிவரே, நீர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, யாகம் முடிந்ததும் பூமியை உழ வேண்டும். அப்போது ஒரு பெட்டகம் தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப் படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறுதான்' என்று கூறியது.

அசரீரி வாக்குப்படி முனிவர் யாகம் செய்தார். யாகம் முடிந்ததும் பூமியை உழுதார். அப்போது ஒரு பெட்டகம் கிடைத்தது. அதில் ஓர் ஆண் குழந்தை இருந்தது.  அவர்தான் செப்பேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்ட நந்தி. 

செப்பேஸ்வரர் பதினாறு ஆண்டு காலம்தான் பூலோகத்தில் இருப்பார் என்று சிவபெருமான் அசரீரியாகச் சொன்ன தகவல் முனிவரை வாட்டியது.

இதனை அறிந்த செப்பேஸ்வரர், திருவையாற்று ஈசனை நோக்கி அங்குள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தத்தில் கழுத்தளவு நீரில் நின்று கடும் தவம் புரிந்தார். காலம் கடந்தது. செப்பேஸ்வரரின் தவத்தைப் போற்றிய சிவபெருமான், "என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாக வாழ்வாய்' என்று அருளியதுடன், செப்பேஸ்வரருக்கு அதிகார நந்தி என்ற பட்டத்தையும் கொடுத்தார்.

இறைவனிடம் வரம் பெற்று நீண்ட ஆயுளுடன் திரும்பிய செப்பேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் சிலாத முனிவர் .
வசிஷ்ட முனிவரின் பேத்தியும்  வியாக்ர பாத முனிவருடைய மகளும்  உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயசாம்பிகையை   தன் மகனாகிய செப்பேஸ்வரருக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்வித்தார் சிலாத முனிவர்.

பிறகு, செப்பேஸ்வரர் ஐயாறப்பனிடம் உபதேசம் பெற்று, கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவர் ஆனார். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் திருவையாற்றிலும் திருமழபாடியிலும் சிறப்பாகத் திருவிழா நடைபெறுகிறது. சிலாத முனிவர் பூமியை உழும்போது நந்திதேவர் கிடைத்த இடம் "அந்தணர்புரம்' ஆகும். அங்கு வெள்ளிக் கலப்பையால் பூமியை உழும் நிகழ்ச்சி நடைபெறும். அங்கு நந்திதேவர் கிடைத்த இடத்தில் கலப்பை செல்லும்போது ஓர் பெட்டியை எடுப்பார்கள். அந்தப் பெட்டியிலிருந்து நந்தியை வெளியே எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.

அன்று மாலை திருவையாற்றில் நந்திக்கு பட்டாபி ஷேகம் நடைபெறும். மறுநாள், திருமழபாடியில் நந்தியெம்பெருமானுக்கும் வசிஷ்ட முனிவரின் புதல்வியான சுயசாம்பிகை தேவிக்கும் திருமண வைபவம் நடைபெறும். அப்போது அந்த ஊரே வாழைமரம், தோரணங்கள்  கட்டி விழாக்கோலம் பூண்டிருக்கும்.சப்த தானங்களில் இருந்து பூக்களும் பழங்களும் பட்சணங்களும் உணவு வகைகளும்  சீர் வரிசைகளும் கொண்டு செல்லப்பட்டது . 

திருமணத்திற்கு திருவையாற்றிலிருந்து இறைவனும் இறைவியும் பல்லக்கில் வருவார்கள். நந்திதேவர் குதிரை வாகனத்தில் வெள்ளித் தலைப்பாகை அணிந்து, செங்கோலைக் கையில் எடுத்துக் கொண்டு செல்வார்.

இறைவன் திருவையாற்றிலிருந்து திருமழபாடிக்கு செல்லும்போது, வைத்தியநாதன் பேட்டை என்ற ஊரின் வழியாகச் செல்வார். திருமணம் முடிந்து வரும்போது புனல்வாயில் என்ற ஊரின் வழியாக வருவார். இதனை, "வருவது வைத்தியநாதன் பேட்டை, போவது புனல்வாயில்' என்ற பழமொழியாகச் சொல்வர்.

திருவையாற்றைச் சுற்றியுள்ள ஆறு ஊர்களில் இருந்து திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் திருமழபாடியில் குவிந்தன. ஒரு பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரத்தில் நந்தி தேவருக்கும், சுயசாம்பிகைக்கும் திருமணம் நடைபெற்றது. இதன் பின் திருமணத்திற்கு உதவி செய்த ஆறு ஊர் இறைவர்களுக்கும் நன்றி செலுத்தவும், திருநந்தி தேவரை மற்ற ஊர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் ஏற்பாடானது.இந்த விழாவின் தொடர்ச்சி தான் திருவையாறு சப்த ஸ்தான விழா. திருவையாற்று ஐயாறப்பர், நந்தி சகிதமாக திருப்பழனம், திருச்சோற்றுத்துறை,திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களுக்குச் செல்வார்.

திருமணத்தடை உள்ளவர்கள் நந்தி கல்யாணத்தை தரிசித்தால், தடைகள் உடைக்கப்பட்டு உடனே நல்ல இடத்தில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. 


வந்திறை யடியிற் றாழும் வானவர் மகுட கோடி 
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையாற் றாக்கி 
அந்தியும் பகலும் தொண்ட ரலகிடுங் குப்பை யாக்கும் 
நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்



                                          போற்றி ஓம் நமசிவாய 



                               திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment