rudrateswarar

rudrateswarar

Saturday, April 12, 2014

பிரதோஷத் திருமுறை பாடல்கள்


                                 ஓம் நமசிவாய


பிரதோஷத் திருமுறை பாடல்கள்

திருமுறை -1

ஆலக் கோலத்தின்  நஞ்சுண்டு அமுதத்தைச்
சாலத் தேவர்க்கு ஈந்தளித்தான் தன்மையால்

பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால்

காலல் காய்ந்தானூர் காழிந் நகர்தானே


திருமுறை-2

உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா  என்றுள்கித்
தொண்டாய்த் திரியும்  அடியார் தங்கள் துயரங்கள்
அண்டாவண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும்
வெண்டாமரை மேல் கருவண்டு யாழ்செய் வெண்காடே 


திருமுறை -3    


ஆலநீழலுகந்த திருக்கையே ஆன
          பாடலுகந்த திருக்கையே
பாலின் நேர்மொழியாள் ஒரு பங்கனே 

          பாத மோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு பூதனே கோதிலார் 

          மன மேவிய பூதனே
ஆலநஞ்சுஅமுதுண்டகளத்தனே 

         ஆலவாயுறை அண்டர்கள் அத்தனே

திருமுறை -4

ஆலலால் இருக்கையில்லை அருந்தவ முனிவர்க்கு அன்று
நூலலால் நொடிவதில்லை நுண்பொருள்  ஆய்ந்து கொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலரடி வணங்க வேலை
ஆலலால் அமுதமில்லை ஐயன் ஐயாற னார்க்கே 


திருமுறை -5

ஆலமுண்டடு அழகாயதொர் ஆனையார்
நீலமேனி நெடும் பளிங்கு ஆனையார்
கோலமாய கொழுஞ் சுடர் ஆனையார்
காலவானை கண் டீர் கடவூரரே 


திருமுறை -6

ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை
ஆலதன்கீழ்அறம்நால்வர்க்கருள்செய்தானைப்
பாலாகித் தேனாகிப் பழமுமாகிப்

பைங்கரும்பாய்அங்கருந்தும் சுவையானானை
மேலாய வேதியர்க்கு வேள்வியாகி
வேள்வியினின் பயனாய விமலன் தன்னை
நாலாய மறைக்கு இறைவன் ஆயினானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே



திருமுறை -7

ஆலந்தான் உகந்தமுது செய்தானை
        ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடை யானைச்
         சிந்திப்பார்  அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
         என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
         காணக் கண் அடியேன் பெற்றவாறே 


திருமுறை -8

கோலாலமாகிக் குரைகடல்வாய்   அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான்  என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன் மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ 


திருமுறை -9 (திருவிசைப்பா)

கோலமே மேலை வானவர் கோவே
           குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
           காலகாலா காமநாசா
ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொற்
           கோயில் கொண்டாட வல்லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
           தொண்டனேன் நணுகுமா நணுகே. 


திருமுறை -9 (திருப்பல்லாண்டு )

சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
           தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண்டில் சிதையும் சில தேவர்
           சிறுநெறி சேராமே
வில்லாண்ட கனகத்திரள் மேரு
           விடங்கன் விடைப்பாகன்
பல்லாண்டென்னும் பதம் கடந்தானுக்கே
            பல்லாண்டு கூறுதுமே 


திருமுறை -10 

அண்டமொடு எண்திசை தாங்கும் அதோமுகம்
கண்டம் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே


திருமுறை -11

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு 


திருமுறை -12

விண்ணாள்வார் அமுது உண்ண
            மிக்கபெரு விடம் உண்ட
கண்ணாளா கச்சி ஏகம்பனே  

           கடையானேன்
எண்ணாத பிழை பொறுத்திங்கு
           யான்காண எழில் பவள
வண்ணா கண்ணளித்து அருளாய்
           என வீழ்ந்து வணங்கினார் 




                      போற்றி ஓம் நமசிவாய 


                            திருச்சிற்றம்பலம்  

No comments:

Post a Comment