rudrateswarar

rudrateswarar

Thursday, July 25, 2013

மூர்த்தி நாயனார் புராணம்

                                                       ஓம் நமசிவாய 

  
மூர்த்தி நாயனார் புராணம்
            
               
            "மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்" 


அவதார தலம் - மதுரை
முக்தி தலம்     - மதுரை 
குருபூசை திருநட்சத்திரம் -ஆடி கார்த்திகை 
31-07-2013,புதன்கிழமை





மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிகர் குலத்திலே அவதரித்தார். அவர் அகப்பற்று புறப்பற்று விடுத்து பற்றற்ற சிவபெருமான் திருவடி களையே மெய்யடியாக பற்றினவர். அத்திருவடிகளே தமக்குத் துணையும், தாம் அடையும் பொருளும் என வாழ்ந்தவர். அவர் திருவாலவாயில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்கு சந்தனக்காப்பு நித்தமும் அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்து வந்தார்.

அந்நாளில் வடுகக் கருநாடக அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான்.அவன் நன்னெறியாகிய திருநீற்றுச்சார்புடைய சைவநெறியில் செல்லாது தீநெறியாகிய சமணர் திறத்தில் ஆழ்ந்து சிவனடியார்களையும் அவர்களது திருத்தொண்டிற்கு  தீங்கு செய்வாயினான். அவ்வாறு சமணத்திற்கு உட்படுத்த எண்ணி, மூர்த்தியாருக்கும் பல கொடுமைகள் செய்தான். அவர் அவற்றால் ஒன்றும் தடைப் படாது தமது நியதியான சந்தனக்காப்பு திருப்பணியைச் செய்து வருவாராயினார். சிவனடியார் அன்பின் வெள்ளத்தை அணை போட்டுத் தடுக்கவல்லார் உண்டோ? அது கண்டு பொறாத அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான். அவர் சிந்தை நொந்து ‘இக்கொடும் பாதகன் மாய்ந்திடவும்  திருநீற்று நன்னெறியைப் பெறுவதுவும் என்றோ? என எண்ணி வருந்தினர். அன்று பகல் முழுவதும் சந்தனக் கட்டை தேடியும் பெறாது வருந்தி மனம் தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார். இன்று இறைவரது மெய்ப்பூச்சுக்குச் சந்தனம் முட்டுப்படினும் அதனை தேய்க்கும் இந்தக் கையினுக்கு முட்டில்லை என்று துணிந்து, சந்தனம் அரைக்கும் வட்டப்பாறை யில் தமது முழங்கையைத் தேய்த்தார்.தோல்  நரம்பு எலும்பு முதலியன கரைந்து தேய்ந்தன 


நட்டம் புரிவாரணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
முட்டும் பரிசாயினும் தேய்க்குங்கை முட்டாதென்று 
வட்டந் திகழ் பாறை யின் வைத்து முழங்கை தேய்த்தார் 
கட்டும் புறந்தோல் நரம்பென்பு கரைந்து தேய 
 
கையெலும்புக்குள்  மூளை சொரிந்தது.அது கண்டு கருணைக்கடவுளாகிய இறைவர் பொறுக்கவில்லை .உடனே ஐயனே! அன்பின் துணிவினால் இச்செயல் செய்யாதே! உன்னை வருத்திய தீயவன் ஆண்ட நாடு முற்றும் நீயே ஆண்டு, முன்பு வந்த துன்பம் எல்லாம் போக்கி நீதியை நிலைநிறுத்தி உலகத்தை காத்து நியதியாய்  திருப்பணி செய்து முடிவில் சிவலோகம் வந்து சேர்வாயாக! என்று இறைவரது அசரீரியாக திருவாக்கு எழுந்தது. கையை கல்லில் தேய்ப்பதை நிறுத்தினார் புண்ணாகிய தன்மை நீங்கி கை செழுமையுற்று விளங்கியது சிவகணங்கமழும் ஒளிபெற்ற திருமேனியுடன் மூர்த்தியார் விளங்கினார்.

அன்று இரவே அடியாரை அழித்த அந்தக் கொடிய மன்னன் இறந்து எரிவாய் நரகில் வீழ்ந்தான். அவன் மனைவியாரும் சுற்றத்தாரும் ஏங்கினர் அமைச்சர்கள்  கூடி அவனுக்குரிய முறைப்படி ஈமக்கடன்களைக் காலையே செய்து முடித்தனர். அவனுக்கு மக்களில்லை. கூழும் குடியும் பிற எல்லா வளனும் உடையதாயினும் அரசனது காவலில்லா விடின் நாடு நல்வாழ்வில்  வாழமுடியாதென்று அமைச்சர் கவலை அடைந்தனர் 


சொக்கேசப்பெருமானை அருச்சனை செய்து வழிபட்டு சிறந்த பட்டமணிந்த நெற்றியை உடைய யானையைக் கண்ணை கட்டி விடுத்து அதனால் ஏந்திவரப்பட்டவரை அரசராகக் கொள்ளத் தக்கதென்று துணிந்து அவ்வண்ணமே செய்தனர்.

அன்றிரவில் நிகழ்ந்தவற்றை கண்ட நாயனார் எம்பெருமான் அருள் அதுவாகில் உலகாளும் செயல் பூண்பேன் என்று கொண்டு உள்ளத் தளர்ச்சி நீங்கிக் திருவாலவாய் இறைவர் திருக்கோயிலின் முன் வந்து நின்றனர். யானை அங்கு சென்று மூர்த்தியாரை தாழ்ந்து எடுத்து பிடரிமேல் வைத்துக்கொண்டது. அது கண்ட நகர மாந்தர்கள் வாழ்த்தி மங்கல வாத்தியங்கள் முழங்கினர். மூர்த்தியாரை யானையிலிருந்து இறக்கி முடிசூட்டு மண்டபத்திற்குக் கொண்டு சென்று முடிசூட்டு வதற்குரிய சடங்குகள் செய்யலாயினர். சமண இருள் போய்ச் சைவஒளி  ஓங்குமாகில் நான் இந்த அரசாட்சியினை ஏற்று ஆள்வேன் அவ்வாறு அரசாட்சி செய்வேனாயின் முடி சூட்டுவதற்குரிய சடங்குக்கு திருநீறே அபிடேகமாகவும் உருத்திராக்கமணியே அணிகலனாகவும், சடைமுடியே மணிமுடியாகவும் இருத்தல் வேண்டும்   என மூர்த்தியார் அருளினார். 


அது கேட்ட அறிவின் சிகரங்களாக விளங்கும் அமைச்சரும் உண்மை நூலறிவோரும் நன்று என்று பணிந்து, அவ்வாறே உரிய சடங்குகள் எல்லாம் செய்தனர். மூர்த்தியாரும் மங்கல ஓசைகளும் வாழ்த்தொலியும் முழங்க  நாட்டின் அரசராக முடி சூடினார்.
 

மூர்த்தியார் முதலில் திருவாலவாய்த் திருக்கோயிலுக்குச் சென்று தாழ்ந்து வணங்கினர்.அங்கு நின்ற யானை மீதேறி நகர வீதியில் பவனி வந்து அரண்மனை வாயிலை அடைந்தனர். யானையின்றும் இறங்கிச் சென்று அரச மண்டபத்தில் சிங்காசனத்தில் அமர்ந்து  வீற்றிருந்தனர். அவரது குறிப்பின்படி அமைச்சர்கள் ஒழுகினர். சமண் கட்டு நீங்கித் திருநீறு உருத்திராக்கமணி, சடாமுடி என்ற மும்மை யினால் உலகாண்டனர் மூர்த்தியார்.மாதரை மனத்தாலும் தீண்டாது துறவொழுக்கம் பூண்ட மூர்த்தியார் ஐம்புலப்பகையாகிய உட்பகையையும், சமணர், வேற்றரசர் முதலிய புறப்பகையையும் நீக்கி உலகத்தை நெடுங்காலம் அருளாட்சி புரிந்தார் தமது திருத்தொண்டினை இடையறாது புரிந்து நெடுநாள் அரசாட்சி செய்து வேதமுதலாம் நாதன் திருவடி நீழலில் பெருவாழ்வு பெற்று இன்புற்றார் .



                         போற்றி ஓம் நமசிவாய 


                              திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment