rudrateswarar

rudrateswarar

Thursday, July 25, 2013

புகழ்ச்சோழ நாயனார் புராணம்

                                    ஓம் நமசிவாய

புகழ்ச்சோழ நாயனார் புராணம் 

               
                      "பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ் சோழற்கடியேன்"


அவதார தலம் -உறையூர் 
முக்தி தலம்     -கருவூர்
குருபூசை திருநட்சத்திரம் -ஆடி கார்த்திகை 
31-07-2013,புதன்கிழமை




சோழநாட்டுத் தலைநகர் உறையூர்.உறந்தை கோழியூர் முதலிய பெயர்களை உடையது .ஒரு சமயம் கோழி யானையை துரத்தி வென்றதனால் கோழியூர் என பெயர் பெற்றது அத்தலைநகரில் இருந்து  அரசாண்ட மன்னர் புகழ்ச்சோழர்.இவர் தில்லையில் எல்லை யில்லாத திருப்பணிகள் செய்த அநபாய சோழ மன்னருடைய மூதாதையர். அவர் தமது தோள்வலியினால் உலக மன்னர்கள் தமது பணிகேட்டுத் தமது ஆணையின் கீழ் அடங்கி நடக்கச் செங்கோல் ஆட்சி புரிந்தனர். சிவாலயங்களில் எல்லாம் பூசனை விளங்கச் செய்வித்தும், அடியார்க்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தும், திருநீற்று நெறி விளங்கச் செய்தார். இவ்வாறு உறையூரில் இருந்து செங்கோல் செலுத்திய புகழ்ச்சோழர் கொங்கு நாட்டு வேந்தரும், குடபுலமன்னர் களும் ஆகிய சிற்றரசர்களிடம் திறை பெறும்  பொருட்டுத் தமது மரபின் தலைநகராகிய கருவூரை அடைந்தார். கருவூர் ஆனிலைக் கோயிலில் பசுபதீச்சரரை பலகாலும் வழிபட்டு பரவசமடைந்தார் . 
அத்தாணி மண்டபத்தில் அரியணையில் வீற்றிருந்து குறுநில மன்னர்கள் கொணர்ந்த யானைகள் குதிரைகள் பொன்மணிகள் முதலிய திறைப்பொருள்களை எல்லாம் கண்டிருந்தனர். திறை கொணர்ந்து பணிந்த மன்னர்களுக்குச் செயலுரிமைத் தொழில் தந்து உபசரித்தார் . அவ்வாறு திறை கொணரா மன்னர் உளராகில் தெரிந்துரைப்பீர் என்று அமைச்சருக்குக் கட்டளை இட்டார்.

சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித்தாமம் 
அன்று சிதறுங்களிற்றை அற எறிந்து பாகரையும் 
கொன்ற ஏறி பத்தரெதிர் என்னையுங் கொன்றருளுமென 
வென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டின் மிகச்சிறந்தார்



இவ்வாறு கருவூரில் தங்கிய நாட்களில், சிவகாமியாண்டார் என்னும் சிவனடியார் சிவனுக்குச் சாத்தக் கொணர்ந்த பூவைப் பறித்துச் சிந்தியதனால் பட்டத்து யானையை யும், பாகரையும் எறிந்து கொன்ற எறிபத்த நாயனாரிடம் யானையால் நேர்ந்த சிவாபராதத்திற்குத் தீர்வாகத் தம்மையே கொல்லவேண்டும் என்று தம் உடைவாளை  நீட்டித் திருத்தொண்டில் தலை நின்றவர். அவர் அவ்வாறு தன்னையே மாய்க்க முயன்ற போது திருவருள் வெளிப்பட்டு யானை உயிர் பெற்றெழுந்தது.அத்தகைய அருட்பெரும்செல்வராக புகழ்ச்சோழ நாயனார் பொலிவுடன் விளங்கினார்  


அமைச்சர் அரசரை வணங்கி திறை கொடாத அதிகன் என்னும் அரசன் அண்மையில் மலையரணுடையவனாக மதில் சூழ்ந்த காவல்மிக்க கடிநகரில் உறைகின்றான் என்று சொன்னார். படை எழுந்து அவ்வரணை  அழித்து வரும்படி அமைச்சர்க்கு அரசர் கட்டளை இட்டார். அமைச்சர்களும் அவ்வாறே சேனையுடன் சென்று அவ்வலிய அரணை முற்றுகை இட்டு அழித்து அதிகனது சேனையினை வென்றனர். அதிகன் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அமைச்சர்கள் வெற்றியுடனே அங்கு நின்று யானை, குதிரை முதலியவற்றையும் போர்ச்சின்னமாக கொல்லப்பட்ட தலைக்குவியல்களையும் அரசன் முன் கொண்டுவந்தனர். 

அவ்வாறு கொண்டு வந்த தலைக்குவியல் களுள்  அரசர், ஒரு தலையிற் சடைமுடியைக் கண்டார். அது கண்டு நடுங்கி தாம் திருநீற்று நெறி காத்து ஆண்ட அழகா இது என்று தம்மை இகழ்ந்து கொண்டார். ஒன்று செய்யத் துணிந்து தம் குமரனுக்கு முடிசூட்டும் படி அமைச்சருக்குக் கட்டளை இட்டார். தமக்குச் சேர்ந்த சிவாபராதமாகிய பழிக்குத் தீர்வு தாமே காரணமாகிச் செந்தீ வளர்ப்பித்தார். உடம்பு முழுதும் திருநீறு பூசிக்கொண்டார் சடையுடைய சிரத்தினை பொற்கலத்தில் தலைமேல் ஏந்திக்கொண்டு, எரியை வலம் வந்து திருவைந்தெழுத்தினை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியுடன் எரியினுட்புகுந்து இறைவரது கருணைத் திருவடி நிழலைச் சார்ந்து பேரின்பமுற்றார் .


                      போற்றி ஓம் நமசிவாய 


                            திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment