rudrateswarar

rudrateswarar

Sunday, July 28, 2013

அப்பருக்கு கயிலைக்காட்சி

                                 ஓம் நமசிவாய 


அப்பருக்கு கயிலைக்காட்சி

திருநாவுக்கரசு நாயனார் திருக்காளத்தியில் ஞானப்பூங்கோதையம்மை உடனாய குடுமித் தேவரையும் பலகாலம் பணிந்து பரவசமுற்று திருக்கயிலாய மலையில் வீற்றிருந்தருளும் திருகோலம் காண காதல் கொண்டார் வடதிசை நோக்கி புறப்பட்டார் 

திருப்பருப்பதம் எனும் ஸ்ரீசைலம் அடைந்து மல்லிகார்ச்சுனரை கண்குளிரக் கண்டு தமிழ் பாமாலை சூட்டினார் .அங்கிருந்து தெலுங்கு கன்னட தேசங்கடந்து காசிப்பதியடைந்தார் கங்கையில் மூழ்கி பாலாம்பிகையையும் விசுவநாதரையும் வணங்கி உடன் வந்த அடியார்களை அங்கு விடுத்து வடதிசை நோக்கி நடந்து மலைக்கானகம் அடைந்தார் 

மனிதர்கள் செல்லமுடியாத அடர்ந்த உயர்ந்த காட்டு வழியில் தனிப்பெருங்காதலுடன் தனியே சென்றார் காய் கனி கிழங்கு அருந்துவதும் தவிர்த்துச் செல்ல கொடிய விலங்குகள் இவரைக்கண்டு ஒதுங்கின 

இரவு பகல் பாராது நடந்து பாதங்கள் தசைகள் தேய்ந்து குருதி வழிந்தது .கரங்களினால் தவழ்ந்து செல்ல மணிக்கட்டுவரை தசை தேய்ந்து விட மார்பினால் தவழ்ந்து சென்றார் மார்பும் தேய்ந்து சதைப்பற்று அற்று எலும்புகள் முறிந்தன அப்பொழுதும் உருண்டு புரண்டு சென்றார் .

பரம்பொருள் பரமேசர் அவருக்கு உலகில் இன்னும் பல இனிய செந்தமிழ் பாடல் பாடும் பொருட்டு கயிலை காண அருளாதவராகி அருகில்  தடாகம் உருவாக்கி முனிவர் வடிவில் தோன்றியருளினார் .அப்பரை நோக்கி அய்யா உடல் உறுப்புகள் அழியும்படி இக்கொடிய வனத்தில் எதற்கு வந்தீர்?என்று வினவினார்.அப்பர்சுவாமிகள் அம்முனிவரை
நோக்கி வடகயிலையில் என்தாய் மலைவளர்மங்கையுடன் எம்பெருமான் வீற்றிருக்கும் திருகோலம் காணுங் காதலுடன்  செல்கின்றேன் என்றார்.முனிவர் அன்பரே மானுடர்கள் சென்று கயிலையை காண்பது இயலாது .அமரர்கட்கும் அது அரிது எனவே நீர் திரும்பி செல்வதே சரியாகும் என்றருளினார் .நாவுக்கரசர் கயிலை நாயகனை காணாமல் இவ்வுடல் கொண்டு திரும்பி செல்லேன் என்றார் அவரது உறுதி கண்ட உமைபங்கர் விண்ணில் மறைந்து நின்று ஓங்கும் நாவுக்கரசனே எழுந்திரு என்று அருளினார் தேய்ந்த உடலெல்லாம் செழிப்புற்று திருவருள் ஒளியுடன் கயிலைக் காட்சியை காண அருளவேண்டும் என்று பணிந்தார் 

அண்ணலேயெனை யாண்டு கொண்டருளிய அமுதே 
விண்ணிலே மறைந்தருள் புரி வேதநாயகனே 
கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் கோலம் 
நண்ணி நான் தொழ நயந்தருள் புரியெனப்பணிந்தார்

இத் தடாகத்தில் முழுகி திருக்கைலாயக் காட்சியை திருவையாற்றில் காண்பாய் என்று அண்ணல் விண்ணில் மறைந்து அருள் புரிந்தார்

வாக்கின் வேந்தர் இறைவர் திருவருளை சிரமேற்கொண்டு செந்தமிழ் பதிகம் பாடி துதித்தார் ஐந்தெழுத்தை ஓதி புனிதவாவி யில் முழுகினார் திருவையாற்றில் ஒரு திருக்குளத்தில் வந்து எழுந்தார் உலகமே வியந்தது எம்பெருமானின் திருக்கருணையை எண்ணி கண்ணீர் சொறிந்தார் திருக்கோயிலை அடைந்தார் அங்கு சரம் அசரம் என்ற எல்லாம் தத்தம் துணையுடன் விளங்கும் தோற்றம் கண்டார் கயிலையில் சத்தியும் சிவமும் விளங்குவது போல எல்லாம் சிவசத்தி சொரூபமாகக் கண்டார்.திருக்கோயில் கயிலாயமலை யாகவும் மாலயன் உள்ளிட்ட வானவர் வாழ்த்தும் ஒலி பொங்கவும் சிவகணங்கள் போற்றவும் பூதவேதாளங்கள் வணங்கவும் இடபதேவர் எதிர் நிற்கவும் வெள்ளிமாமலை மேல் மரகதகொடி போல் பார்வதிதேவி அருகிருப்ப பவளமலை போல் பரமர் வீற்றிருக்கும் அரிய காட்சியை அப்பர் மூர்த்திகள் தரிசித்தார் .அந்த ஆனந்தக் கடலைக் கண்களெனும் கரங்களால் மொண்டு மொண்டு பருகினார் ,ஆடினார் , பாடினார்,விழுந்தார் ,எழுந்தார் ,அழுதார் , தொழுதார் .அவர் அடைந்த மகிழ்ச்சியையும் வியப்பையும் அளவிட்டு சொல்லமுடியுமா ? போற்றி திருத்தாண்டகங்கள் பாடினார் .பின் கயிலைக்காட்சி மறைய திருவையாறு தெரிந்தது தந்தையருள் இதுவோ? என்று தெளிந்து பல பதிகங்கள் பாடியருளினார் .

அப்பர் சுவாமிகளுக்கு திருக்கயிலைக்காட்சி அருளிய தினம் ஆடி அமாவாசை தினமாகும் 
அன்று அன்பர்கள் கட்டாயம் சிவாலயம் சென்று அப்பர் பெருமானை வணங்கி குருவருளையும் சிவபெருமானை வழிபட்டு திருவருளையும் பெற்று வளம் பல பெற்று
வாழ்வாங்கு வாழுமாறு கேட்டுக் கொள்கிறோம் .தமிழ்நாட்டில் இருப்பவர்கள் முடிந்தால் திருவையாறு சென்று இந்த அரிய காட்சியை கண்ணுற கேட்டுக்கொள்கிறோம்.


                       போற்றி ஓம் நமசிவாய 


                          திருச்சிற்றம்பலம்            

1 comment: