rudrateswarar

rudrateswarar

Sunday, October 20, 2013

தீக்ஷை முறைகள்

                                                      ஓம் நமசிவாய


தீக்ஷை முறைகள் 

தீக்ஷை எனப்படுவது உயிரைப் பற்றியுள்ள அறியாமை எனும் மலங்களை நீக்கி ஞானத்தை உண்டாக்குவது .தீ என்றால் கெடுத்தல் எதை ? மலத்தை க்ஷை என்றால் கொடுத்தல் எதை ? ஞானத்தை 

இந்த தீக்ஷை தக்க உபதேச பாரம்பரியம் உள்ள குரு மூலம் மட்டுமே நாம் பெற முடியும் . எந்த உயிருக்கு இந்த ஞானத்தை பெற பக்குவம் உள்ளதோ அந்த உயிருக்கு தீக்ஷை வழங்க சிவபெருமானே குரு உருவில் வருவார் . முற்பிறவிகளில் உயிர்கள் தாம் செய்த தவத்தால் மட்டுமே இந்த வாய்ப்பு அருளப்படும் . அதாவது சரியை கிரியை யோக மார்க்கத்தில் செய்த தவத்தின் பலன் ஞான வழியை காட்டுமே தவிர முக்தி எனும் வீடுபேற்றை வழங்காது . ஞானம் பெரும் வழியை உணர்த்தும். அந்த ஞானம் குரு மூலம் தீக்ஷையால் வழங்கப்படும் . அவர் உயிர்களின் மலங்களை நீக்கி ஞானத்தை வழங்குவார் 

இதன் மூலம் உயிர்களின் சஞ்சிதம் அழியும் . குரு உபதேசித்த ஞானநெறி மூலம் இப்பிறவியில் ஆகாமியம் என்னும் வினைகள் ஏறாது .அந்த ஞான நெறி நன்கு கைகூடும் போது முக்தி வாய்க்கும் .

தீக்ஷை என்பது வெறும் மந்திர உபதேசம் மட்டுமல்ல . குரு உயிரின் மாசுக்களை அதாவது சஞ்சித வினைகளை நீக்கி புனிதமாக்குவார் .சிவஞானத்தை வழங்குவார் . தீக்ஷை வழங்கும் முறைகள் ஆறு வகைப்படும் 

1.நயனதீக்ஷை  

நயனம் என்பது கண் பார்வையால் வழங்குவது , மீன் தனது முட்டையை தன் கண்பார்வையினாலே குஞ்சு பொரித்தலைப்போல ஞானகுரு தன் கண்களை சிவனது கண்ணாக பாவித்து நோக்க சீடன் சிவானந்தம் பெறுவான்

2.பரிச தீக்ஷை

 பரிசம் என்பது தீண்டுவது தொடுவது ,கோழி முதலிய பறவைகள் தனது முட்டையின்மேல் பொருந்தி குஞ்சு பொரிக்கும் அதுபோல ஞானகுரு தம்மை சிவமாக பாவித்து சீடன் தலையைத் தொடுவதால் சீடன் சிவானந்தம் பெறுவான் 
 

3.வாசக தீக்ஷை

வாசகம் என்பது சொல் உரை ,ஞானகுரு சித்தாந்த வாக்கியங்களையும் சிவமூல மந்திரத்தையும் சீடனுக்கு பொருளுடன் உபதேசிப்பது வாசக தீக்ஷை


4.மானச தீக்ஷை

ஞான குரு தன் உடம்பிலிருந்து யோக முறையில் சீடனின் இருதயத்தில் புகுந்து அவனது ஆன்மாவை தூய்மை செய்து அதை சிவ ஒளியுடன் கலக்கச்செய்து அந்த ஆன்மாவை சிவமாக பாவித்து மீண்டும் அந்த சக்தியை சீடனது இருதயத்தில் யோக முறையில் சேர்ப்பித்தல் மானச தீக்ஷை எனப்படும்

5.சாத்திர தீக்ஷை

ஞான சாத்திரங்களை கற்பித்தலும் சிந்தித்தலுமே சாத்திர தீக்ஷை ஆகும் 


6. யோக தீக்ஷை 

ஆதார யோகம் ,நிராதார யோகம் என்பவற்றை  பயில்வித்தல் யோக தீக்ஷை ஆகும்




                          போற்றி ஓம் நமசிவாய




                                திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment