rudrateswarar

rudrateswarar

Sunday, October 20, 2013

இடங்கழி நாயனார் புராணம்


                                                           ஓம் நமசிவாய

இடங்கழி நாயனார் புராணம் 


               "மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் அடியேன் " 

அவதார தலம் - கொடும்பாளூர்

முக்தி தலம்     - கொடும்பாளூர்

குருபூசை திருநட்சத்திரம்- ஐப்பசி,கார்த்திகை 
21-10-2013 ,திங்கள்கிழமை



இயற்கை வளமும்,  தெய்வ வளமும் மிகுந்த கோனாட்டின் தலைநகரம் கொடும்பாளூர்.  கனகசபையின் திருச்சடை மகுடத்தை பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்த சோழர் குடியிலே அவதரித்தவர் இடங்கழி நாயனார். இக் குறுநில மன்னன் விரிசடை அண்ணலின் திருத்தாளினைப் போற்றி வணங்கி வந்ததோடு, அவர் எழுந்தருளியிருக்கும் கோயில்களில் நடக்கும் சிவ வழிபாட்டிற்குத் தேவையான நெல்லையும், பொன்னையும் வாரி வாரி வழங்கினார். ஆகமத்திலுள்ள சைவ நெறியையும் வேதத்திலுள்ள தர்ம நெறியையும் பாதுகாத்து வந்த இவர் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. 


இடங்கழியார் எனவுலகில்
            ஏறுபெரு நாமத்தார்
அடங்கலர்முப் புரமெரித்தார்
           அடித்தொண்டின் நெறியன்றி
முடங்குநெறி கனவினிலும்
           உன்னாதார் எந்நாளும்
தொடர்ந்தபெருங் காதலினால்
           தொண்டர்வேண் டியசெய்வார்



சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் புரியும் தொண்டர்களுக்குப் பல வழிகளில் கணக்கற்ற உதவிகளைச் செய்து கொண்டாடினார் நாயனார். இடங்கழி நாயனாரின் வெண்கொற்றக் குடை நிழலில் எண்ணற்ற சிவனடியார்கள் சிவத்தொண்டு புரிந்து வந்தனர். சைவம் வளர்த்த அடியார்கள் பலருள் இவரும் சிவனடியார்களுக்கு திருவமுது செய்து மகிழும் அருந்தவப் பணியை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். அப்படி இருந்த ஒரு சிவனடியார் புரியும் திருப்பணிக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. அடியார்களுக்கு அமுது அளிப்பதற்குப் போதிய நெல் கிட்டாமல் அவதிப்பட்டார். நெல் தட்டுப் பாட்டால் அவரது விருந்தோம்பல் அறத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட சிவத்தொண்டர் செய்வதறியாது சித்தம் கலங்கினார். மனம் தளர்ந்தார். முடிவில் அவர் அரண்மனைக் களஞ்சியத்தில் நெல்லைச் சேமித்து வைத்திருப்பதை உணர்ந்தார். நள்ளிரவு வேளையில் நாயனார் அரண்மனைக்குள் நுழைந்து நெல் கட்டு நிறைகளுள்ளிருந்து நெல்லை கவர்ந்து எடுத்தார். திருட்டு தொழிலில் அனுபவம் இல்லாததால் இவ்வடியார் அரண்மனைக் காவலர்களிடம் சுலபமாக மாட்டிக் கொண்டார். அடியாரைக் கைது செய்து, இடங்கழியார் முன் நிறுத்தினார்கள். காவலர் வாயிலாக விவரத்தைக் கேள்வியுற்ற அரசர் அடியாரின் சிவப்பொலிவைக் கண்டு திகைத்தார். ஐயனே  சிவக்கோலம் தாங்கியுள்ள தேவரீர் இத்தகைய இழிவான தொழிலைச் செய்யக் காரணம் யாது? என்று கேட்டார் வேந்தர் . சோழப் பெருந்தகையே! அடியேன் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்து ஒழுகும் திருப்பணியைத் தவறாமல் நடத்தி வந்தேன். எமது சிறந்த சிவப்பணிக்கு இடர் ஏற்பட்டது. அதனால் அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள நெல்லைக் கவர்ந்து செல்வது என்ற முடிவிற்கு வந்தேன். சிவனடியார் செப்பியது கேட்டு சிந்தை நெகிழ்ந்த சோழர் பெருமான் அடியவரைக் காவலினின்று விடுவித்து பணிந்து தொழுதார்.  அடியேனுக்கு இவ்வடியார் அல்லவா களஞ்சியம் போன்றவர் என்று பெருமிதத்தோடு கூறினான் வேந்தன். அவ்வடியார்க்குத் தேவையான பொன் , பொருளையும் கொடுத்தனுப்பினார். அத்தோடு அரசர் மன நிறைவு பெறவில்லை. களஞ்சியத்திலுள்ள நெற்குவியல்களையும், பொன் மணிகளையும் தமது நாட்டிலுள்ள சிவனடியார்கள், அவரவர்களுக்குத் தேவையான அளவிற்கு  எடுத்துச் செல்லட்டும். எவ்வித தடையும் கிடையாது என்று நகரமெங்கும் பறைசாற்றுங்கள் என்று மன்னன் கட்டளை இட்டான். இவ்வாறு இடங்கழி நாயனார் சிவனடியார்களுக்குப் பொன்னும், பொருளும் எடுத்துச் செல்ல, உள்ள உவகையோடு உத்தரவிட்டு சிவனடியார்களை மேன்மேலும் கவுரவப்படுத்தினான். திருவெண்ணீற்றின் பெருமைக்குத் தலைவணங்கிய குறுநிலக் கொன்றவன் கொன்றை மலர் அணிந்த சங்கரனின் சேவடிகளைப்பற்றி நீடிய இன்பம் பெற்றார்.


எண்ணில்பெரும் பண்டாரம்
            ஈசனடி யார்கொள்ள
உண்ணிறைந்த அன்பினால்
            உறுகொள்ளை மிகவூட்டித்
தண்ணளியால் நெடுங்காலந்
            திருநீற்றின் நெறிதழைப்ப
மண்ணில்அருள் புரிந்திறைவர்
            மலரடியின் நிழல்சேர்ந்தார்




                       போற்றி ஓம் நமசிவாய



                          திருச்சிற்றம்பலம்  

No comments:

Post a Comment