rudrateswarar

rudrateswarar

Saturday, July 27, 2013

கூற்றுவ நாயனார் புராணம்

                                                       ஓம் நமசிவாய


கூற்றுவ நாயனார் புராணம்

 "ஆர்கொண்ட வேல் கூற்றன் களந்தைக்கோன் அடியேன் "  

அவதார தலம்  - களந்தை 
முக்தி தலம்      -சேரநாடு
குருபூசை திருநட்சத்திரம் -ஆடி திருவாதிரை
04-08-2013   ஞாயிறு 



வீரமிக்க குறுநில மன்னர்கள் பலர், சீரோடும், சிறப்போடும் செங்கோலோச்சி வந்த தலம் திருக்களந்தை! இத்தலத்தில் களப்பாளர் மரபில் தோன்றியவர்  கூற்றுவ நாயனார்  வாளெடுத்து, வில்தொடுத்து, வீரம் வளர்த்து, வெற்றிகள் பல பெற்ற கூற்றுவ நாயனார், பகைவர்களுக்கு கூற்றுவன் போல் இருந்தார் என்ற காரணம் பற்றியே இத்திருப்பெயர் பெற்றார். அதுவே இவரது இயற்பெயர் மறைவதற்குக் காரணமாகவும் இருந்தது. 

வாள் சுழற்றும் வீரத்தோடு, பரமனின் தாள் போற்றும் பக்தியையும் பெற்றிருந்தார்  களந்தை நாட்டை,அரனார் அருளோடு பெரும் வெற்றிகள்  பெற்று அறம் பிறழாது புகழ்பட  ஆட்சியும் புரிந்து வந்தார். சிவனடியார்களின் திருவடிகளைப் பணிந்து அவர்கட்கு உயர்ந்த திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தார். இவர் ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதி வரும் பக்தி படைத்தவர். 

இக்குறுநில மன்னர், தம்மிடமுள்ள தேர்,புரவி ஆட் படை கொண்டு நாடு பல வென்று தமது கொடியின் கீழ் கொண்டு வந்தார். மன்னர் தும்பை மாலை சூடிப் போர் செய்து பெற்ற வெற்றிகளால் குறுநிலம் விரிநிலமானது. முடியுடை மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையும் வென்று திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டிய காவலனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தில்லைவாழ் அந்தணர்களின் பாதுகாப்பிலுள்ள சோழ மன்னர்களுக்கே உரிய மணி மகுடத்தைத் தாம் அணிய வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். 

சோழ மன்னர்கள் தில்லை, திருவாரூர், உறையூர், பூம்புகார் என்னும்இடங்களில்தான் முடி சூட்டிக் கொள்வது வழக்கம்.

மணிமகுடம் ஆதிகாலம் தொட்டே சோழர் மன்னர்களுக்குரிய சிறப்புப் பொருளாகவே இருந்து வந்தது. இம் மணி மகுடத்தைப் பாதுகாத்து வரும் தில்லைவாழ் அந்தணர்கள் இம்மணி மகுடத்தைத் தக்க காலத்தில் சோழ மன்னர்களுக்கு மட்டுமே சூட்டும் நியதியைக் கொண்டிருந்தனர்.இவற்றை எல்லாம் நன்கு அறிந்திருந்த கூற்றுவ நாயனார் தில்லை வாழ்அந்தணர்களிடம் தமது எண்ணத்தைச் சொல்ல எண்ணி ஒருநாள் தில்லைக்குப் புறப்பட்டார். தில்லை வந்தடைந்து நடராஜப் பெருமானை வணங்கி வழிபட்டு, தில்லை வாழ்அந்தணர்களைச் சந்தித்தார். தமக்கு முடி சூட்ட வேண்டும்  என்று வேண்டினார். அம்மொழி கேட்டு தில்லைவாழ்அந்தணர்கள் அஞ்சி நடுங்கினர். அவர்கள் மன்னர்க்கு முடி சூட்ட மறுத்தனர். மன்னா நாங்கள் பரம்பரை பரம்பரையாகச் சோழ குலத்திலே பிறந்த மன்னர்களுக்குத்தான் முடிசூட்டி வருவது வழக்கம் வேறு மன்னர்களுக்கு இத்திருமுடி யைச் சூட்டுவதற்கில்லை என்று பகர்ந்தனர். துணிச்சலோடு விடையளித்து மன்னருடைய கோரிக்கையை நிராகரித்தனர். 

அந்தணர்கள் கூற்றுவ நாயனாரைக் கண்டு சற்று பயந்தனர்.அவரால் தங்களுக்கு தீங்கு ஏதும் வந்து விடுமோ என்று தங்களுக்குள் தவறான எண்ணங் கொண்டு  தில்லையின் எல்லையை நீங்கி சேரமன்னர் பால் சென்று வாழ எண்ணினர். மணிமகுடத்தை தங்கள் மரபில் வந்த ஒரு குடும்பத்தாரிடம் அளித்து பாதுகாக்கும்படி செய்யத்தக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.இவர்கள் அச்சமின்றி மொழிந்த வார்த்தை கேட்டு கூற்றுவநாயனார் செய்வதறியாது திகைத்தார். 

முடியரசு ஆவதற்கு குடியொரு தடையா? என தமக்குள் எண்ணி வருந்தினாரே தவிர தில்லைவாழ்அந்தணர்களை வற்புறுத்தியோ, தொல்லைப் படுத்தியோ, அம்மகுடத்தைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை. கூற்றுவ நாயனார், திருமுடி சூட்டிக்கொள்ளும் பேறு தமக்குக்கிட்டவில்லையே என்ற வேதனை கொண்டு திருக்கோயிலுக்குச் சென்றார்.
இறைவனைப் பணிந்து, அருட்புனலே !ஆடும் ஐயனே உமது திருவருளால் மண்ணெல்லாம் என் வெற்றித் திருவடி பட்டும் தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு மகுடம் சூட்ட மறுத்து விட்டார்களே ஐயன் இந்த எளியனுக்கு முடியாக உமது திருவடியினைச் சூட்டி அருள் புரிதல் வேண்டும் என்று தொழுது தமது இருப்பிடம் அடைந்து துயில் எய்தினார் அன்றிரவு கண்ணுதற் பெருமான் மன்னன் கனவில் எழுந்தருளி தமது திருவடியை நாயனாரின் சென்னியின் மீது திருமுடியாகச் சூட்டி தமது அன்பு அடியாரின் ஆசையை நிறைவேற்றி அருள்புரிந்தார். 


அற்றை நாளில் இரவின்கண் அடியேன் தனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர்ப்பாதம் பெறவே வேண்டும் எனப்பரவும் 
பற்று விடாது துயில்வோர்க்குக் கனவில் பாதமலரளிக்க 
உற்ற அருளால் அவைதாங்கி உலகமெல்லாம் தனிபுரந்தார்
  

கூற்றுவ நாயனார் கண்விழித்தெழுந்தார். அவரது மகிழ்ச்சி போர்க்களத்திலே அவர் பெற்ற பெரும் வெற்றியைக் காட்டிலும் பேருவகை அடைந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் தமக்குச் செய்ய வேண்டிய கடமையை மறந்த போதும் தில்லைப்பெருமானே தம் பொருட்டு கனவிலே எழுந்தருளி திருமுடி சூட்டினார் என்பதை எண்ணி பேரானந்தம் அடைந்தார் சென்னி மீது கைகூப்பி, நிலத்தில் வீழ்ந்து வீழ்ந்து பரமனைப் பணிந்து எழுந்தார் எம்பெருமானுடைய திருவடியையே மணி மகுடமாகக் கொண்டு, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் கொண்டு வந்து அரசு புரிந்தார் கூற்றுவ நாயனார். 

அறநெறி வழுவாத நாயனார், இறைவன் எழுந்தருளியுள்ள கோயில்களுக்கெல்லாம் பொன்னும் மணியும் வாரிக் கொடுத்தார். தன்னந்தனியே ஒவ்வொரு கோயில்களிலும் நித்திய நைமித்திய பூசைகள் தடையின்றி நடைபெற ஆவன செய்தார். திருத்தலங்கள்  பல சென்று சிவவழிபாடு நடத்தினார். 

விரிசடைப்  பெருமானின் திருவடி சூடி திக்கெட்டும் வெற்றிக்கொடி நாட்டியகூற்றுவ நாயனார், முடிவில் சஞ்சிதவினை தீர்க்கும் குஞ்சித பாதத்தில் கலந்து இன்பமெய்தினார்.

அம்பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுதத் திருனடஞ்செய்
தம்பிரானார் புவியில் மகிழ் கோயில் எல்லாம் தனித்தனியே 
இம்பர் ஞாலம் களிகூர எய்தும் பெரும்பூ சனையியற்றி 
உம்பர் மகிழ அரசளித்தே உமையாள் கணவன் அடிசேர்ந்தார் 
 



                        போற்றி ஓம் நமசிவாய 


                             திருச்சிற்றம்பலம் 

1 comment: