rudrateswarar

rudrateswarar

Wednesday, June 26, 2013

மாணிக்கவாசகர் குருபூசை

                                                      ஓம் நமசிவாய


மாணிக்கவாசகர் குருபூசை
  
             ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி


அவதார தலம்- திருவாதவூர் 
முக்தி தலம்    - தில்லை
குருபூசை திருநட்சத்திரம் - ஆனி மகம்
12-07-2013 வெள்ளிகிழமை  


மாணிக்கவாசகர்  பாண்டிய நாட்டில் அமாத்தியர் மரபில் வாதவூரில் சம்புபாதசரிதர்  சிவஞானவதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் திருவாதவூரர் என்று பெயரிட்டனர் இவர் 16 வயதிலேயே கல்வி கேள்வி ஒழுக்கம் ஆற்றல் அறிவு இவற்றில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சரானார்  அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டு வந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரம ராயன்" எனும் பட்டம் பெற்றார்.

உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த வாதவூரர் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவவழிபாடு கொண்டு ஐந்தெழுத்து ஓதி வரலானார்.

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப் பட்டு, அமைச்சர் வாதவூரரிடம் பொன்னை  கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வரப்  பணித்தான்.வாதவூரர் திருப்பெருந்துறை சென்றடைந்தார். அங்கே இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்த வாதவூரர் அங்கேயே தங்க தன் படையினருக்கு உத்தரவிட்டார். இங்குள்ள ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார். இந்தக் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால், இங்கு மூலஸ்தானத்தில் லிங்கம் கிடையாது. ஆண்டவன் உருவமின்றி இருக்கிறான் என்பது இங்கு தத்துவம். ஆவுடையார் மட்டும் உண்டு மேலே லிங்கம் இருக்காது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில், அடையாளத்திற்காக ஒரு குவளையை வைத்திருப்பார்கள். அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழமாக  காட்சியளித்த வாதவூரர், கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுள் உருவமாக்கி உருகி வணங்கினார்.பின்னர் பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில்
குருவடிவு எடுத்து அமர்ந்திருந்த இறைவன் முன் சென்று வாதவூரர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரர் கேட்க, சிவஞான போதம் என்றார். சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் பக்குவமடைந்திருந்த வாதவூரர். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குரு வடிவத்தில் வந்த சிவபிரான். திருவடி தீட்சை பெற்றதும் உள்ளம் உருகி பாடலானார் அவருடைய பாடல் கேட்ட இறைவன் உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மணியானவை நீ மாணிக்கவாசகன் என்று அருளி ஆசி வழங்கி மறைந்தார் .தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு,சிவன் தம்மை ஆட்கொண்ட இங்கு சிவகைங்கரியம் செய்ய எண்ணி குதிரை வாங்க கொண்டுவந்த பொருள் கொண்டு ஆத்மநாதருக்கு ஆலயம் அமைத்து கும்பாபிசேகம் செய்தார் வாதவூரரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்து விட்டார் வாதவூரர்.பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் கொடுத்து கையோடு வாதவூரரை அழைத்துவரக்கட்டளையிட்டான்.

குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி வாதவூரர் அதனைக் குருவிடமே கொடுத்து விட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திரத்தன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.சொன்ன நாளும் அருகில் வந்தது. ஆனால்குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்து மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்பட வில்லை  என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன் என்று கூறிப் பாண்டியன் வாதவூரரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்த அதற்கும் வாதவூரர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். வாதவூரர் சிவனை தஞ்சம் அடைந்தார்.உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே இறைவனுக்கு பரிமேலழகர் எனும் காரணப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்ல அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.

குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் சிறப்பைக் கூறி, இவை இனி உன்னுடையவை என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். குதிரை வாங்க கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூரரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.
சிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார்.கரையை உடைத்துக் கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது.உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்தி எனும் பிட்டு விற்கும் ஒருவள் மட்டும் வீட்டில்  யாருமில்லாமலும், ஏவலர் ஒருவரும் இல்லாமல் வருந்திக் கொன்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட பெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார்.

அன்றைக்கு பார்த்து வந்திக்கு எல்லாப்பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி அடைபடாமல் உடைந்தே கிடக்கிறது.கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட உடைப்பு சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். அவன் மீது பட்ட பிரம்படி உலகத்திலுள்ள அனைத்துயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும் பட பாண்டியன் கலங்கிப் போனான்.அப்போது வானில் ஓர் அசரீரி கேட்டது அது இறைவர்  சிவபெருமானே மன்னா  வாதவூரரின் பொருட்டு யாமே இத்திருவிளையாடல் புரிந்தோம் என்று சொல்லியது . மன்னன் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், பல சிவத்தலங்களை தரிசித்து பாடித் துதித்துப் பின் தில்லை திருச்சிற்றம்பலம் வந்தார். 

அங்கு சிவபிரான் அவர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரர் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும் என்று கூறினார் திருவாதவூரர்.அதற்கு ஒப்புக் கொண்ட அந்தணர் செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் பாவை பாடிய நீர் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவை பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் மாணிக்கவாசகன் சொற்படி அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையொப்பமிட்டு, கோவிலின் கனக சபையில் வைத்து மறைந்தார். அப்பொழுது தான் மாணிக்கவாசகருக்கு வந்தது இறைவன் என்று உணர்ந்தார் .தில்லை அந்தணர் ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் இந்த நூல்களின் பொருள் என்ன? என்று வாதவூரரை பார்த்து கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரர் கூத்தனின் தில்லையம்பலத்தைக் காட்டி பொருள் இதுவே என்று கூறி உள்ளே சென்று மறைந்தார்.இறைவனோடு இரண்டறக் கலந்து பேரின்பப் பேற்றினை பெற்றார் மாணிக்கவாசகர் என்பது இறைவனால் சூட்டப்பெற்ற பெயராகும் .
இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

தேவார முதலிகள் மூவரும் இறைவனை தொழுது போற்றி பாடினார்கள் .ஆனால் மாணிக்கவாசகர் ஒருவர் மட்டும் அழுது அழுது பாடினார் 

அற்புதங்கள்
1.சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடி படும் படியும் நடந்து கொண்டது.
2.பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணை பேசவைத்து புத்தர்களின் கேள்விகளுக்கு அப்பெண்ணையே விடையளிக்க வைத்தது .
3.தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றது.
4.எல்லாரும் காண கனகசபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது. 
5.திருப்பெருந்துறையில் சிவத்தோடு கலந்த தன்மை பெற்றதனால் பூசைபேறு பெற்றது
6.புத்தர்களை தருக்கத்தில் வென்று அவர்களை ஊமையாக்கி பின் பேசவைத்து சைவராக்கியது                                                                                                                                                                                                                                                                                                                                           போற்றி ஓம் நமசிவாய



                                   திருச்சிற்றம்பலம்  

No comments:

Post a Comment