rudrateswarar

rudrateswarar

Friday, June 28, 2013

அமர்நீதி நாயனார் புராணம்

                                                  ஓம் நமசிவாய


அமர்நீதி நாயனார் புராணம்
 
 
        "அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன்"


அவதார தலம்  - பழையாறை
முக்தி தலம்      -திருநல்லூர் 
குருபூசை திருநட்சத்திரம்  -ஆனி பூரம்
 13-07-2013 சனிக்கிழமை



சோழநாட்டிலே பழையாறை என்னும் மிகப்  பழமையான சிவமணம்கமழும் திருப்பதியிலே அமர்நீதியார் பிறந்தார்.இத்தலம் மாதரசி மங்கையர்க்கரசியார் அவதரித்த புண்ணிய பூமியாகும் 

வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார் களுக்கு பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். 

சிந்தை செய்வது சிவன்கழல் அல்லதொன் றில்லார்
அந்தி வண்ணர்தம் அடியவர்க் கமுதுசெய் வித்துக்
கந்தை கீளுடை கோவணங் கருத்தறிந் துதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும்பயன் கொள் வார்.



சிவனடியார்க்கு திருவமுது , ஆடை, கீழாடை , கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டு களைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு வந்து அங்கு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.

அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்கு அருள் புரிய சிவபெருமான் திருவுளங்கொண்டார். ஒரு நாள் இறைவர் மறையவர் குலத்துப்  பிரம்மச்சாரி கோலங்கொண்டு கையில் இரு கோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்து உணவுண்ண அழைத்தார் .பிரம்மச்சாரியார் அதற்கிசைந்து  காவிரியில் நீராடி வருவதாக கூறிச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக் கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார்.மறையவராக வந்த மணிகண்டர் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் திரும்பி வந்தார். 

தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர். 



ஈரத்தை மாற்றும்பொருட்டு முன்னர் நாம் உம்பால் தந்த கோவணத்தை கொண்டு வாரும் என்று கூறினார். கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் அதைக் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணம் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காண வில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல,நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.இதனைக் கேட்ட இறைவர் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே  நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது இத்தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட நாயனார் தராசின் ஒரு தட்டில் அடியார் தந்த கோவணத்தை வைத்து,அதற்கு ஈடாகத்தம்மிட முள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோது அது நிறை போதாமல் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட இறைவரது  கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய எல்லாப்பொருள் களையும் வைத்தார் அப்பொழுதும் தராசு தட்டு மேலே சென்றது

தவநி றைந்தநான் மறைப்பொருள் நூல்களாற் சமைந்த
சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையும் நேர்நிலா என்பது புகழோ. 


பின்பு தம் மனைவி, புதல்வன் ஆகியோரையும் தட்டில் அமர்த்த அப்பொழுதும்  கூட தட்டு நேர் நிற்கவில்லை. நாயனார் 'நாங்கள் செய்த அன்பினில் இறைவரது திருநீற்று நெறியிலே அடிமைத்திறம் சிறிதும் தவறாது இருந்தது உண்மையெனில்  இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக’ என்று திருவைந்தெழுத்து ஓதித் தராசுத்தட்டின் மேல் தாமும் மனைவி மைந்தருடன் ஏறி அமர்ந்தார். அந்நிலையில் அத்தாராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நேர் நின்றன.

இழைத்த அன்பினில் இறைதிரு நீற்றுமெய் யடிமை
பிழைத்தி லோமெனிற் பெருந்துலை நேர்நிற்க வென்று
மழைத்த டம்பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத் தோதினார் ஏறினார் தட்டில்.


அடியாராக வந்த இறைவர், திருநல்லூரில்  பொருந்திய அம்மையப்பராக விடைமேல் வந்து திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவானந்தப் பெரு வாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.

நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
கோதி லன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த
ஆதி மூர்த்தியா ருடன்சிவ புரியினை யணைந்தார்.


இறைவனும் இறையடியாரும் ஒரே நிறை. அம்மையப்பரான இறைவனே நம் தலைவர். அவரைப் பூசித்தல் ஒன்றே தலையாய கருமம். அரன் நாமத்தை மந்திரமாக்கிக் கொள்ளுதலும் நன்று. ஆயின் இறையடியாரையும் தலைவராகக் கொள்ளுதல் வேண்டுமோ? அவர் தம் உடைமையே அனைத்துமென்றும்  அவர் வேண்டுவதெல்லம் இல்லையெனாது கொடுப்பதும் மகேசுவரராகப் பூசித்தலும் அவர்தம் வேடத்தையே மெய்ப்பொருளாகக் கொள்வதும் இறைவனைத் தொழு முன் அவர்களைக் கும்பிடுவதும் ஆகிய இவை எதற்கு என்பதர்க்குரிய விடையாக அமர்நீதி நாயனார் புராணம் அமைந்திருக்கின்றது. 

நாயனாரது குருபூசை நாளில் நாமும் அத்தகைய தொண்டு செய்து பெருவாழ்வு பெறுவோமாக .அமர்நீதியாரும் மாதரசி மங்கையர்க்கரசியாரும் பிறந்த மண்ணாகிய பழையாறை அரன் ஆலயம் திருப்பணி செய்ய திருவருள் கூட்டுவிக்க பிரார்த்திப்போமாக 



                                போற்றி ஓம் நமசிவாய 


                                  திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment