rudrateswarar

rudrateswarar

Thursday, June 20, 2013

சிவபெருமானே குழந்தையாக

                                                        ஓம் நமசிவாய

சிவபெருமானே குழந்தையாக




காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் ஞானகலை தம்பதியர்க்கு மகனாக அவதரித்தார். திருவெண்காட்டு பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிட்டனர்  பெற்றோர் திருவெண்காடர் என அழைத்தனர் . திருவெண்காடர் வளர்ந்து சிறந்து வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி சிவபக்தியில் சிறந்தவராய், சிவனடியார்களுக்கு வேண்டுவன அளிக்கும் பண்பினராய் விளங்கினார்.அதனால் மக்கள் பட்டினத்தார் என்றே அழைத்தனர் . சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார் நிறைந்த செல்வம் உடையவராய் வாழ்ந்து வந்த இவருக்கு மக்கட் செல்வம் வாய்க்கவில்லை திருவிடைமருதூர் சென்று மகாலிங்க பெருமானிடம் வேண்டினார்

திருவிடைமருதூரில் சிவனடித் தொண்டு பூண்டொழுகிய சிவசருமர் சுசீலை என்னும் அந்தணர் குடும்பம் வறுமையால் வாடுவதைக் கண்டு மனம் பொறாத மகாலிங்கப்பெருமான் அவர் கனவில் தோன்றி யாமே நாளை குழந்தையாக தீர்த்தக் கரையில் வருவோம் அக்குழந்தையை காவிரிப்பூம்பட்டினத்தில் மகப்பேறின்றி வருந்தும் திருவெண்காடரிடம் தன்னை விற்றுப் பொருள் பெற்று வறுமை நீங்குமாறு கூறியருளினார். அடுத்த நாள் விடிந்தவுடன் குளக்கரைக்கு சிவசருமர் சுசீலை தம்பதியர் சென்று பார்க்க மிக்க ஒளி பொருந்திய குழந்தையை கண்டார்கள் அது சாட்சாத் சிவபெருமானே தான் அந்த குழந்தையை எடுத்து அணைத்து அதனைக் கொடுக்க மனமின்றி இறைவன் கட்டளைப்படி குழந்தையுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று திருவெண்காடரிடம் அளித்து எடைக்கு எடை பொன் பெற்றுத் திருவிடைமருதூர் மீண்டு வறுமை நீங்கி இன்புற்றார். 

பட்டினத்தார் அக்குழந்தைக்கு மருதவாணர் என பெயரிட்டு வளர்த்தார் .இறைவனே அங்கு குழந்தையாக அவரிடம் வளர்வதை அறியாமல் வளர்த்தனர்  மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும்பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும் சிவனடியார்கட்கும் அளித்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து தவிடும் வரட்டிகளையும் வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார்.

உடன் வந்த வணிகர்களில் சிலர் திருவெண்காடரிடம் மருதவாணர் பித்தராய் வீணே பொருளைச் செலவிட்டு தவிடும் வரட்டியுமே வாங்கி வந்துள்ளார் என்று குறை கூறினர். திருவெண்காடர் மருதவாணர் வாங்கி வந்த வரட்டியைச் சோதித்துப் பார்த்தபோது அவற்றுள் மாணிக்கக்கற்கள் இருத்தலையும் தவிட்டைச் சோதித்தபோது அதனுள் தங்கப் பொடி மறைத்து வைக்கப்பட்டிருத்ததையும் கண்டு மகன் கடல்கொள்ளையரிடமிருந்து தப்பிக்க இவ்வாறு செய்துள்ளான் என வியந்து வணிகர்களிடம் கூறிப்பெருமையுற்றார்.

சில நாட்களுக்கு பின் வரட்டிகளையும் தவிட்டையும் சோதித்த போது அவற்றுள் ஒன்றும் இல்லாதிருத்தலைக் கண்டு தன் மகன் மீது சினம் கொண்டு அவரைத் தண்டிக்கும் கருத்துடன் தனி அறையில் பூட்டி வைக்கச் செய்து வாணிபத்தைத் தான் கவனித்து வரலானார். மருதவாணரின் தாயார் அவரைக் காண அறைக்குச் சென்றபோது சிவபிரான் மருகனோடும் உமையோடும் அங்கிருக்கும் திருக்காட்சியை  கண்டு தன் கணவர்க்கு அறிவிக்க அவரும் சென்று அவ்வருட்காட்சி கண்டு அறையைத் திறக்குமாறு கூறினார்  மருதவாணரிடம் தன் செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். மருதவாணர் மெய் நூற்பொருளை அவருக்கு உபதேசம் செய்தார். எனினும் அவருக்கு உலகப் பற்று ஒழியாமை கண்டு காதற்ற ஊசி ஒன்றையும் நூலையும் கொடுத்து காதற்ற ஊசியும் வாராது காணும்  கடைவழிக்கே என்றெழுதிய ஒலை நறுக்கினையும் ஒரு பெட்டியில் வைத்து மூடி வளர்ப்புத்தாயிடம் அளித்துத் திருவெண் காடரிடம் அதனைச் சேர்ப்பிக்குமாறு கூறி இல்லத்தை விட்டு மறைந்து சென்றார்.

திருவெண்காடர் மருதவாணர் அளித்ததாக மனைவி அளித்த பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தபோது காதற்ற ஊசி, நூல் ஆகியனவும் அறவுரை அடங்கிய ஓலை நறுக்கும் இருக்க கண்டு அவை உணர்த்தும் குறிப்பை உணர்ந்து இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டுத் துறவறமாகிய தூய நெறியை மேற்கொண்டு ஊர் அம்பலத்தை அடைந்து அங்கேயே வாழ்ந்து வரலானார். 


திருவெண்காடர் தூறவு பூண்டதை அறிந்த அரசன் அவரை அணுகி நீர் துறவறம் பூண்டதனால் அடைந்த பயன் யாது என வினவிய போது நீ நிற்கவும் யான் இருக்கவும் பெற்ற தன்மையே அது என மறுமொழி புகன்றார். எல்லோரும் திருவெண்காடரைத் திருவெண்காட்டு அடிகள் என அழைத்தனர்.ஏன் அரசன் அவரிடம் சென்று கேட்டான் என்றால் மன்னனை விட உயர்ந்த செல்வந்தராய்
அவர் இருந்தார் சோழப்பேரரசுக்கு நிதி அளிக்கும் வல்லமையுடன் அவர் இருந்தார்

இவ்வாறு இறைவனே குழந்தையாக ஒரு குடும்பத்தில் வளர்ந்தது பட்டினத்து அடிகள் வீட்டில் தான் ,வேறு எங்கும் அவ்வாறு இருந்ததாக எந்தப்புராணத்திலும் காணப்படவில்லை .



செல்வத்திற்கு அதிபதியான குபேரனுக்கு ஞானம் கிட்டவும் பூவுலகில் சென்று இன்பம் அனுபவிக்கவும் ஆசை கொண்டு தம் நண்பர்  சிவபெருமானிடம் கேட்க மண்ணுலகில் பிறக்க அருளுகிறார் குபேரன் அல்லவா ? அதனால் மிகப்பெரிய செல்வந்தருக்கு மகனாக பிறக்கிறார்  அவரே பட்டினத்து அடிகளாவார்   அவர் வீட்டில் சிவபெருமானே அவரிடம் குழந்தையாக வளர ஆசை கொண்டார்




                              போற்றி ஓம் நமசிவாய 



                                  திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment