rudrateswarar

rudrateswarar

Friday, June 21, 2013

அண்ணாமலையார் அற்புதங்கள் -1

                                      ஓம் நமசிவாய

குகை நமசிவாயர்   

தேவார பாடல் பெற்ற தலமான திருப்பருப்பதம் அதாவது இன்றைய ஸ்ரீசைலம் என்ற ஊரில் சிவனது திருவருளைப் பெற்ற நமசிவாயர் என்ற அன்பர் ஒருவர் இருந்தார்.அவர் சதா நமசிவாய என்று சொல்லிக்கொண்டிருந்ததால் அவர் பெயர் நமசிவாயர் என்றே ஆனது இவரது தாய்மொழி கன்னடம் இவர் லிங்காயத்து என்ற இனத்தை சார்ந்தவர் அந்த இனத்தில் ஆண் பெண் இருபாலரும் கழுத்தில் சிவலிங்கத்தை அணிந்திருப்பார்கள் .அந்த லிங்கத்திற்கே முதல் வழிபாடு செய்வார்கள் நமசிவாயர் இளம் வயதிலேயே சிவபக்தியில் திளைத்தார்  நமசிவாயரிடம் அண்ணாமலையார் தோன்றி திருவண்ணாமலைக்கு வருமாறு அருளினார்  உடனே நமச்சிவாயர் தென்திசை நோக்கி தனது சீடர்களுடன் புறப்பட்டார் அவர்களில் தலைமை சீடராக விரூபாட்சித்தேவர் என்பவர் இருந்தார் வரும் வழியிலேஅண்ணாமலை அண்ணல் தன் திருவிளையாடலை துவங்கினார் 

உடன் வந்த அடியாருடன் ஓரூரை அடைந்தார். அங்கு ஒரு திருமணம் நடப்பதை கண்டார் அங்கு வந்த நமசிவாயரை திருமண வீட்டார் ஆசி வழங்க வருமாறு மாலை அணிவித்து வரவேற்று அழைத்துச் சென்றனர் . அங்கு அனைவருக்கும் திருநீறு வழங்கினார் அவர்கள் திருநீறு பூசியதும் வீடு தீப்பற்றிக் கொண்டது. இவர் கொடுத்த திருநீற்றினால் தான் வீடு எரிந்து போயிற்று என்றனர்.

அது கேட்ட அடியவர் சிவபிரானை நினைந்து எரிந்தவற்றை எல்லாம் படைத்தருளினார். வெந்து போனவெல்லாம் மீண்டும் உண்டான அருஞ்செயலைக் கண்டவர்கள், இவர் அந்த சிவனே என்று போற்றினர். நான் இனி ஒருவர் மனையிடத்தும் செல்லேன் என்னும்  விரதம் கொண்டு அவ்விடம் விட்டு பூவிருந்தவல்லி வந்து சேர்ந்தார். அவர்கள் அனைவரும் சிவபூசை செய்யும் பண்பினராதலால் ஊரில்  உள்ள தோட்டங்களில் மலர் பறித்தனர். அம்மலர்கள் கோயில் வழிபாட்டிற்குரிய மலர்கள். செய்தி அரசுக்கு எட்டவே அவ்வூர் அரசு அலுவலர்கள் நமச்சிவாயரை அழைத்து, அனுமதியின்றி தோட்டங்களில் கோயில் பூசைக்கு மலரில்லாமல் பூக்களைப் பறித்தது குற்றம் இதற்கு என்ன சொல்கிறீர்? ' என்றனர்.

அப்போது நமச்சிவாயர் நாங்கள் பறித்த பூக்கள் எல்லாம் கோயிலில் உறையும் இறைவனுக்கே சார்த்தப் பெற்றன அம்மலர்கள் வீணாக்கப்பட வில்லை என்றார். அதற்கு அவர்கள் உங்கள் வழிபடு தெய்வத்திற்கு அணியப்பெற்ற பூக்களை இவ்வூர்க் கோயிலில் உறையும் இறைவன் ஏற்றுக்கொண்டான் என்று  நீங்கள் சொல்வது உண்மையானால், இவ்வூர்க் கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு அணியப்பெற்றுள்ள மாலை அனைவரும் காண உம் கழுத்தில் வந்து விழ வேண்டும் என்றனர்.அதற்கு நமச்சிவாயர் உடன்பட்டு சிவபிரானுடைய திருவடிகளைச் சிந்தித்தார். இந்த நிலையில் கோயிலிலுள்ள அர்ச்சகர்கள் இறைவனுக்குச் சார்த்தியுள்ள மாலையின் பின்புறத்தில் ஒரு கயிற்றினைக் கட்டி ஒரு சிறுவனைச் சிவலிங்கத்தின் பின் புறமாக அமரச்செய்து அக்கயிற்றைப் பிடித்துக்கொள்ள  செய்தனர். நமச்சிவாயர் நற்றுணையாவது நமச்சிவாயவே என்று பஞ்சாட்சரத்தை ஓதிக் கொண்டு இறைவன் முன்பாக நின்றார்

அப்போது அனைவரும் காணச் சிறுவன் பிடித்திருந்த கயிறு அறுந்து மாலையானது நமச்சிவாயரின் கழுத்தில் விழுந்தது. கண்டவர் வியப்புற்று நமச்சிவாயரைப்  பாராட்டினர். இந்நிலையில் அந்தப்பகுதியில் ஆட்சி செய்த புறசமய அரசன் இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டு நமச்சிவாயாரை ஆழமாகச் சோதனை செய்து பார்க்க விரும்பினான். நமச்சிவாயரைப் பார்த்து உங்கள் சைவ சமயம் எல்லா வகையிலும் உயர்ந்த சமயம் என்று பேசப்படுவது உண்மையானால் நான் சொல் கின்றவாறு மெய்ப்பித்துக் காட்ட இயலுமா? என்று கேட்டான்.இறைவன் திருவருளைத் துணையாகக் கொண்டு உம் விருப்பம் போல் மெய்பிக்காட்ட இயலும் என்றார். அரசன் நமச்சிவாயரை பழுக்கக்காய்ச்சிய இரும்பினை கையில் பற்றிக்கொண்டு சைவ சமயமே மெய்சமயம் அச்சமயத்திற்குரிய தெய்வம் சிவபிரானே என்று சொல்ல வேண்டும்
உம்மால் இயலுமா?'' என்று கேட்டான். அதற்கு நமச்சிவாயர் சிவபிரான் திருவருள்  துணை கொண்டு அவ்வாறு செய்யக்கூடும் என்று சொல்லித் தம் மாணவராகிய விரூபாட்சித் தேவரை நோக்க அவர் புரிந்து கொண்டார். இரும்பு துண்டு சூடேறியதை விரூபாட்சித் தேவரிடம் தெரிவித்தனர்.மேலும் பக்குவம் அடைய வேண்டும் என்றார். கொவ்வைக்கனி போல் சிவந்தவுடன் விரூபாட்சித்தேவரிடம் தெரிவித்தார்கள். தீவண்ணராகிய அண்ணாமலையாரை  உள்ளத்தே கொண்டு, ''கையில் அனலேந்தி விளையாடும் ஐயா போற்றி," செந்தழல் மேனிச் சிவனே போற்றி'' பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் பார்த்து 

'சைவ சமயமே மெய்சமயம் அச்சமயம் சார்ந்த சிவனே பரம்பொருள்'' என்று சொல்லி விழுங்கி விட்டார். இந்நிகழ்ச்சியை கண்ட வேற்று மத மன்னன் நமச்சிவாயருக்கும் விரூபாட்சித் தேவர்க்கும் அடியவர்க்கும் வேண்டிய சிறப்பு செய்து சிவபக்தன் ஆனான்
 

அங்கிருந்து புறப்பட்டு அடியவர்கள் சூழ திருவண்ணாமலை சென்று சேர்ந்தார் திருக் கோயிலுக்குச் சென்ற போது அண்ணா மலையாரைக் கைகூப்பி வணங்காமல் நலமா? என்று கையால் சைகை செய்து வந்தார். நமச்சிவாயர்  செருக்கினால் அவ்வாறு செய்ய வில்லை அவர்கள் பின்பற்றும் வீராகமம் அடியவர் சூழ குருமூர்த்தியாக வந்த சிவபிரான் கோலத்தை அன்றிப் பிறரைக் கைகூப்பி வணங்குதல் கூடாது எனக் கூறுவதனால் அவர் அப்படி செய்தார் குரு லிங்க சங்கமம் எனும் முப்பொருளையன்றிப் பிறரை வணங்குதல் கூடாது என்னும் மரபினை ஒட்டி அவ்வாறு நடந்தார்.
 

இலிங்கம் என்பது தம் மார்பில் உள்ள சிவபெருமானே என்பது அவர் தம் கோட்பாடு அண்ணாமலையார் கட்டளைப்படியே தாம் அங்கு வந்திருப்பதனை உணர்ந்தாரில்லை என்றாலும் தமிழ் மொழியில் அவர்க்குண்டான தெளிவினால் அண்ணாமலையாரைச்  சிறப்பித்து வெண்பாவினைப் பாடினார். கன்னட மொழியன்றி வேறு மொழியினை அறியாத நமசிவாயர் மேலான தமிழ்ப்புலவர்களும் பாராட்டும் வகையில் வெண்பாக்களைப்பாட அருள் செய்தார் அண்ணாமலையார்
 

நமச்சிவாயர் சிவனிடம் அன்பில்லாதவர் என்றும் மற்றவர்கள் கருதக்கூடிய வகையில் கைக்காட்டி வந்ததனை அறிந்த சிவாக்கிர யோகி என்பார், உடல் பெரிதும் வருந்துமாறு நமச்சிவாயரை பிரம்பால்அடித்தார் என்னை  சற்குருவாக வந்து இறைவன் அடித்தது கொல்வதற்காக அன்று தீக்குணங்களைப் போக்கவே என்ற கருத்தமைய ஒரு வெண்பா இயற்றினார் நமச்சிவாயர்.அவருடைய உயர்ந்த மனநிலையை உணர்ந்த சிவாக்கிர யோகியார் தாம் பிரம்பாலடித்தது பற்றி வருந்தினார்.

நமச்சிவாயர் அவ்விடத்தை விட்டு அகன்று கோயிலுள் சென்று இறைவனை வணங்குதல் சிறந்தது என்று எண்ணினார்.அப்போது அவர்க்கருகிலே, முன்னொரு நாளில் தமக்கு மெய்ப்பொருள் உணர்த்திய சற்குருவானவர் கல்லாடையுடுத்த தொண்டர்கள் சூழ முன்னே தோன்றினார் தோன்றியவர் உரிமையுடன் இவரோடு சில பேசி அடியார் குழாத்துடன் கோயிலுக்குள் சென்றார்.அதனைக் கண்ணுற்ற நமச்சிவாயர் குருமூர்த்திஎழுந்தருளியிருக்கும் இடம் இதுதான் போலும் என்று கருதி மாணவர்களோடு அண்ணாமலையார் அடிக்கமலங்களில் வீழ்ந்து பணிந்து எழுந்தார். அப்போது குருமூர்த்தியையும் உடன் வந்த அடியவரையும் கண்டிலர் நமச்சிவாயர். உடனே நமச்சிவாயர் ''இச்செயல் சிவனுடைய அருட்செயலே'' வம்பான சொற்களைக் கூறி வலக்கை தூக்கிச் சைகை செய்து வந்த நாம், இனி சிவபிரானை உளமாரக் கைகூப்பி வணங்கவேண்டும் எனபதற்காகவே சற்குரு நம்மை அடித்தார் என்று உணர்ந்து கொண்டார். நமச்சிவாயரைப் பிரம்பால் அடித்த யோகியும் நமச்சிவாயரும் சிவஞானம் கைகூடப் பெற்றமையால் ஒருவரை ஒருவர் காணும் இடங்களில் எல்லாம் அன்புற வணங்கி அளவளாவினர். உண்மை அடியாருடைய பண்பு இதுவென்று பிறர்க்கும் உணர்த்தினர்.

பழைய வழக்கத்தினை மாற்றிக்கொண்டு ஆலயத்துட்புகுந்து அண்ணாமலையாரை கைகூப்பி வணங்கும் வழக்கத்தினை மேற் கொண்ட நமச்சிவாயரும், சிவாகமங்ககளை தெளிவாகக் கற்றுணர்ந்த சிவாக்கிரம யோகியும்  அடியார்க்குரிய பண்புகள்  நிறைய பெற்று முன்பிருந்த குறைகள் நீங்கப் பெற்று வழிபாடாற்றி வந்தனர்.பின்பு அந்தச் சிவாக்கிர யோகி சென்ற இடம் தெரியவில்லை. நமச்சிவாயர் அண்ணாமலையிலேயே தங்கினார். அண்ணாமலையாரும் திருவுளம் மகிழ்ந்து நமச்சிவாயர் தம் மெய்யடியார் என்பதனை உலகிற்கு உணர்த்தியருளினார்.

ஊரினிடத்தும் நாட்டின் கண்ணும் உலாவிக் கொண்டிருந்த நமச்சிவாயரை மலையில்  குகையில் வசிக்குமாறு இறைவன் அருள் புரிந்தமையால் குகைநமச்சிவாயர்என்ற பெயர் எங்கும் பரவிற்று. குகை நமச்சிவாயருக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் யார்  வாயிலாகவாவது  கிடைக்கும்படி அண்ணாமலையார் அருள் புரிந்தார்.


                                                  அற்புதங்கள் தொடரும்

                           போற்றி ஓம் நமசிவாய


                              திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment