rudrateswarar

rudrateswarar

Saturday, June 1, 2013

நமிநந்தியடிகள் நாயனார் புராணம்

                                   ஓம் நமசிவாய 

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் 

                         “அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” 


அவதார தலம்- ஏமப்பேறூர் 
முக்தி தலம்    -திருவாரூர்

குருபூசை திருநட்சத்திரம்- வைகாசி பூசம்
12-06-2013 புதன்கிழமை 

சோழ நாட்டு ஏமப் பேறூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் நமிநந்தியடிகள். அவர் இரவும் பகலும் பிரியாது சிவபெருமானைப் பூசித்து மகிழும் ஒழுக்கமுடையவர். நாள்தோறும் திருவாரூர்க்குப் சென்று புற்றிடங்கொண்ட பெருமானை போற்றி வருவார். ஒரு நாள் திருவாரூர்த் திருக்கோயிலை வழிபடச் சென்றார். வழிபட்டபின் திருமதிலுக்கு அருகில் அரனெறி என்று ஒரு தனிகோயில் உண்டு. அதனையும் வணங்க விரும்பினார் அத்திருக்கோயில் புகுந்து   மகிழ்ச்சியில் எழுந்த அன்பினாலே கண்ணீர் சொரிந்து தொழுதார். கோயிலில் பல திருத்தொண்டுகள் பலவும் செய்து கொண்டிருந்தார். அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற விருப்பம் அவருடைய  உள்ளத்தெழுந்தது. அப்பொழுது மாலைக்காலம் ஆனமையால் தம் ஊருக்குச் சென்று நெய்  கொணர காலமின்மையால் கோயிலுக்கு வெளியே ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கிற்கு நெய் வேண்டினார். அவர் சென்ற வீடுநன்னெறி சாராத சமணர் வீடு. அறிவு அறவே இல்லாத சமணர்கள் நமிநந்தியடிகளை நோக்கி, ‘கையிலே ஒளி விட்டு விளங்கும் தீயினை ஏந்திய உங்கள் இறைவனுக்கு விளக்கு வேண்டாமே . நெய் இங்கு இல்லை. விளக்கு எரிக்க விருப்பம் இருந்தால் தண்ணீரை விட்டு எரியும் என்று பரிகசித்தனர் 

அதுகேட்டுப் பொறாத நமிநந்தியடிகள் அறநெறிப்பெருமான் திருமுன் சென்று வருந்தி அழுது வீழ்ந்து வணங்கினார். அப்பொழுது ‘நமிநந்தியே! உனது கவலை ஒழிக. இதன் அயலேயுள்ள குளத்தில் நீரை முகந்து வந்து வார்த்து விளக்கேற்றுக’ என்றதொரு அருள்வாக்கு  ஆகாயத்தில் தோன்றியது. அதுகேட்டு மகிழ்ந்த நமிநந்தியடிகள், இறைவனருளே இது என்றெண்ணிக் குளத்தின் நடுவே சென்று நாதர் நாமமாகிய திருவைந்தெழுத்தை ஓதி நீரை அள்ளிக்கொண்டு கரையேறிக் கோயிலையடைந்தார். உலகத்தார் அதிசயிக்கும் வண்ணம் அகலில் திரியிட்டு நீர் வார்த்து விளக்கேற்றினார். அந்த விளக்கு சுடர்விட்டொளிர்வது கண்டு கோயில் முழுவதும் திருவிளக்கேற்றினார். திருவிளக்குகள் பல விடியுமளவும் எரிவதற்கு நீரால் நிறைத்தார்.

இவ்வாறு ஆரூர் அரனெறியப்பருக்கு நாளும் இரவில் நீரால் திருவிளக்கிட்டுத் தம்முடைய ஊராகிய ஏமப்பேறூருக்குச் சென்று சிவபூசை முடித்து திருவமுது செய்து துயில் கொள்ளும் வழக்கமுடையவராய் இருந்தார். அப்பொழுது நமிநந்தியடிகள் நாயனாரால்  சமணர்கள் கலக்கம் ஏற்பட்டு அவ்வூரைவிட்டு அகன்றனர். திருவாரூர் திருநீற்றின் பெருமை பெற்று விளங்கியது. சோழ மன்னன் ஆரூர் பெருமானுக்கு அறக்கொடைகள் பல அளித்து அவற்றை சைவ ஆகம விதிப்படி நடத்த நமிநந்தி அடிகளையே தலைவராக நியமித்தான். நமிநந்தியடிகள் நாள் பூசைகளுடன் பங்குனி உத்தரப் பெருவிழாவை சிறப்புறச் செய்வதற்கு உறுதுணையாக விளங்கினார். 

திருவாரூர்ப்பெருமான் பங்குனி உத்தரப் பெருவிழா நாட்களில் ஒரு நாள் மணலி என்ற ஊருக்குத் திருவுலா எழுந்தருளினார். எல்லாக் குலத்து மக்களும் இறைவன் உடன் தரிசித்துச் சென்றனர். நமிநந்தியடிகளும் அவர்கள் எல்லாருடனும் உடன் சென்று திருவோலக்கக் காட்சி கண்டு மகிழ்ந்தார். இறைவர் திரும்பித் திருக்கோயிலுக்குச் செல்ல மாலைப் பொழுதாயிற்று. நமிநந்தியடிகள் நள்ளிரவில் தமது ஊரையடைந்து வீட்டினுள்ளே புகாமல் புறத் திண்ணையிலே படுத்துத் துயின்றார். அப்பொழுது அவர் மனைவியார் வந்து அவரைத் துயிலுணர்த்தி வீட்டினுள்ளே எழுந்தருளிச் சிவபூசையையும் ஓமத்தீ வளர்த்து உணவு உண்டு  பள்ளிகொள்ளலாம் என்றார். அதுகேட்ட நமிநந்தியடிகள், ‘இன்றைய தினம் ஆரூர்ப்பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது யானும் உடன் சேவித்து சென்றேன். அக்கூட்டத்தில் எல்லாச் சாதியரும் கலந்திருந்தமையால் தீட்டுண்டாயிற்று. ஆதலால் நீராடிய பின்னரே மனைக்குள் வருதல் வேண்டும். குளித்தற்கு தண்ணீர் கொண்டுவா’ என்று சொல்ல மனைவியாரும் விரைந்து சென்றார். 

அதற்கிடையில் நமிநந்தியடிகளுக்கு சிறிது உறக்கம் வந்தது. அப்பொழுது வீதிவிடங்கற் பெருமான் கனவில் தோன்றி, ‘அன்பனே! திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய கணங்கள். அதை நீ காண்பாய்’ என்று சொல்லி மறைந்தருளினார்.

மேன்மை விளங்கு திருவாரூர் வீதி விடங்கப் பெருமாள் தாம் 
மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்தருளி 
ஞான மறையோர் ஆரூரிற் பிறந்தார் எல்லாம் நங்கணங்கள்
ஆன பரிசு காண்பாயென் றருளிச் செய்தங் கெதிரகன்றார்

உறக்கம் நீங்கி விழிந்தெழுந்த நமிநந்தியடிகள், தாம் அடியார்களிடையே சாதிவேறுபாடு நினைந்தது தவறென்றுணர்ந்து எழுந்தபடியே வீட்டினுள்ளே சென்று சிவபூசையை முடித்து மனைவியாருக்கு நிகழ்ந்ததைச் சொன்னார். பொழுது விடிந்தபின் திருவாரூருக்குச் சென்றார். அப்பொழுது திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவசொரூபம் பெற்றவர்களாகத் தோன்றக் கண்டார். ‘அடியேன் செய்த பிழை பொறுத்தருள வேண்டும்’ என்று ஆரூர்ப்பெருமானை இறைஞ்சிப் போற்றினார். நமிநந்தியடிகள் பின்பு திருவாரூரிலியே குடிபுகுந்து தம்முடைய திருத்தொண்டுகளைச் செய்துகொண்டிருந்தார். இவ்வாறு சிவனடியார்களுக்கு வேண்டுவன எல்லாம் நியதியாக நெடுங்காலம் செய்து வந்தார்.அதனால் வாக்கின் வேந்தர் திருநாவுக்கரசரால் ‘தொண்டர்க்கு ஆணி’ எனச் சிறப்பிக்கப்பட்டார் இவ்வாறு பலகாலம் எல்லா உலகங்களும் தொழ திருப்பணிகள் செய்து திருவாரூர்ப் பெருமான் திருவடி நிழலையடைந்தார்.

விளக்கிட்டார் பெருமை அளவிடமுடியாது நமிநந்தியடிகள் குருபூசை தினத்தில் உறுதிமொழி கொண்டு ஆலயம் தோறும் விளக்கேற்றும் திருப்பணி செய்து அரனடி பெறும் பாக்கியம் பெறுவோமாக 



                            போற்றி ஓம் நமசிவாய 


                                  திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment