rudrateswarar

rudrateswarar

Friday, June 21, 2013

அண்ணாமலையார் அற்புதங்கள் - 2

                                                        ஓம் நமசிவாய


குகை நமச்சிவாயர்




மல்லிகார்ச்சுனத்திலிருந்து இவருடன் வந்து பூவிருந்தவல்லியில் குருவின் கட்டளைப்படி அருஞ்செயல் புரிந்த விரூபாட்சித்தேவர் தம் குருவின் குகைக்கு மேலே குகை அமைத்து ஆசிரியர்க்குப் பல பணிகளையும் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அன்பர்கள்  பலருடன் தம் குகையில் அமர்ந்திருந்தபோது அவருடைய திருமேனி மறைந்து அங்கு, விபூதிலிங்கம் தோன்றியது. அந்த லிங்கம் இன்றுவரை இருந்து வருகிறது.

ஒருநாள் இடையன் ஒருவன் இறந்த சினையாடு ஒன்றை தாங்கி நின்று இந்த ஆட்டின் வயிற்றில் இரண்டு குட்டிகள் உள்ளன விருப்பமுடையவர் விலைகொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்று உரைத்தான்  அங்கு வந்த ஒரு தீயவன் இடையனை நோக்கி இம்மலைக்  குகையிலே ஊன் அருந்தும் இச்சை 
மிகுந்த ஒருவன் இருக்கிறான் அவன் நல்ல விலைக்கு வாங்குவான் அங்கு போ என்றான்.

அவன் உரைத்தவற்றை மெய் என்று கருதிய இடையன் குகை நமச்சிவாய மூர்த்தியிடம் சென்று நிகழ்ந்தவற்றைக் கூறினான்.குகை நமச்சிவாய சுவாமிகள் சினங்கொள்ளாமல், ஆட்டின் விலை எவ்வளவு? என்று கேட்டறிந்து விலைப் பொருளை நாளைத் தருகிறோம் என்று அனுப்பி விட்டார்.கருணைக் கடலாகிய அண்ணாமலையாரை நினைந்து பெருமானே இன்று ஏன் இறந்த ஆட்டினை என்னிடம் அனுப்பினீர்? என்று ஒரு இனிய பாடலை பாடி, திருநீற்றினை எடுத்து ஆட்டின் மேலிட்ட உடனே ஆடு உயிர் பெற்றெழுந்து இரண்டு குட்டிகளை ஈன்றது.இறைவன் திருவருளை நினைத்து உருகி நின்ற குகைநமச்சிவாயர் புதர்களில் இருந்த தழைகளைக் கொய்து ஆட்டிற்கு கொடுத்து மகிழ்ந்தார். மறு நாள் அங்கு வந்த இடையன் ஆடு குட்டியுடன்
மேய்ந்து கொண்டிருக்க கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு குகைநமச்சிவாய சுவாமிகளிடம் சென்றான்.அவருடைய கட்டளைப்படி இடையன் ஆட்டினையும் குட்டிகளையும் கொண்டு சென்றான். 


அந்த காட்சியை கண்ட ,முன் நாள் அந்த இடையனைக் குகைநமச்சிவாயரிடம் அனுப்பிய வீணர்கள் இந்த அற்புதத்தைக்கண்டு சுவாமிகளை இழிவுபடுத்தும் நோக்கில் உயிருள்ள ஒரு இளைஞனைப் பாடையில் வைத்துக் கட்டி யார் எழுப்பினாலும் எழாதே என்று அவனிடம் சொல்லி வைத்து அவனைத் தூக்கிக்கொண்டு குகைநமசிவாயரிடம் சென்று சுவாமி இளைஞன் ஒருவன் இறந்து போனான் அவனை எழுப்பித்தந்தருளும் என்று வேண்ட வீணர்களுடைய பொய்ச்செயல்களைக் கண்ட குகைநமச்சிவாயர் ''போனவன் போனவனே இனி அவன் எழ மாட்டான்'' என்று சொன்னார். உடனே பொய்யாகப் பிணம் போல் பாடையில் படுத்திருந்த இளைஞனை எழுப்ப அவன் உயிர் பிரிந்தது.அதுகண்ட வீணர்கள் மனம் உடைந்து பெருந்துன்பத்திற்குள்ளாயினர். இச்செயல் அவரை மிகவும் பாதிக்க அதனால் வெகுண்டு 

இந்தஊரானது குறும்பர்கள் வாழும் ஊர் கொன்றாலும் ஏன் என்று கேளாத ஊர்?
மிகக் கொடிய காளைகள் கதறும் ஊர்
பழியைச் சுமக்கும் ஊர் தேளுக்கு ஒப்பான பாதகர்கள் வாழும் ஊர்  என்று சொல்லிப் பின் ''என் சொல்லால் அழியப் போகிற ஊர்" என்று சொல்ல எண்ண அவர் சொல்லும் முன்னே  அண்ணாமலைப்பெருமான் ''அடேய்  நான் ஒருவன் இங்கே இருக்கின்றேனடா''  என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே குகை நமச்சிவாயமூர்த்தி சினந்தணிந்து ''அழியாவூர் அண்ணாமலை" என்று வெண்பாவை முடித்தார்

கோளர் இருக்குமூர்,கொன்றாலும் கேளாவூர்
காளையரே நின்று கதறுமூர் - நாளும்
பழியே சுமக்குமூர், பாதகரே வாழுமூர்
அழியாவூ ரண்ணா மலை''
என்பது அவ்வெண்பா.

குகை நமச்சிவாயருக்குத் துன்பம்விளைத்தவர் மற்றும் அவர் சார்ந்தவர் என பலர் பல்வேறு இன்னல்களுக்கும் நோய்களுக்கும் உள்ளாகிப் பல்வேறிடங்களுக்கும் குடியேறிச் சென்றனர். சிலர் மட்டும், வாழ்ந்த ஊர் என்ற பாசத்தினால் அருணையிலேயே தங்கினார்கள்.ஒரு நாள் ஒரு இடையன் நூறு பசுக்களோடு மலைச்சாரலையடைந்தபோது, ஒரு பசுவை வேங்கை பற்றிக் கொண்டு ஓடிற்று. இடையன் விரைந்தோடிச்சென்று குகை நமச்சிவாயரிடம் சொன்னான்.சுவாமிகள் அண்ணாமலையாரை  நோக்கி ஒரு வெண்பாவைப் பாடினார்.உடனே  அந்த வேங்கை தான் கவர்ந்து சென்ற பசுவைக் கொணர்ந்து வைத்துச்சென்றது.இந்த அற்புதம் கண்ட இடையன் வியந்து எல்லோரிடமும் இதனை எடுத்துரைத்தான். கேட்டவர்கள்  அண்ணாமலையாரின்  அடியவர்களால் ஆகாத செயல் ஏதுமில்லை என்று பேசிக்கொண்டனர். 


பின் ஒருநாள் ஒரு வைணவகுரு காஞ்சியி லிருந்து புறப்பட்டு வடதிசை நோக்கிசென்று கொண்டிருந்தார். அப்போது கண்ணப்பன் சிவபிரான் அருள் பெற்ற திருக்காளத்திமலை தெரிந்தது.அதை கண்ட வைணவகுரு உடனிருந்தவரை நோக்கி, இம்மலையை  நான் காணாவண்ணம் மறைப்பீராக! என்றார். அவரும் திரையிட்டு மறைக்க இந்நிகழ்ச்சி பல காத தூரத்தில் நடைபெற்றாலும் அண்ணாமலையிலிருந்த குகைநமச்சிவாயர் ஞானநோக்கால் அறிந்து திடீரென நகைத்துக் கனல் பிழம்பு போன்ற கவி பாடினார் உடனே வைணவ குருவின் கண்கள் ஒளியிழந்தன். அந்த வைணவகுரு அல்லலுற்று பின்னர் அண்ணாமலையில் அமர்ந்திருக்கும் பெரும் தவஞானியாகிய குகைநமச்சிவாயர் மூலம் தனக்குக் கிடைத்த தண்டனை இது என்று அறிந்து அண்ணாமலைக்கு வந்து குகை நமச்சிவாயரிடம் அடைக்கலம் புகுந்தார்.அந்த வைணவ குருவை நோக்கி, நீர் எந்த மலையை கண்ணாலும் காணக் கூடாதென்று திரையிட்டு மறைத்தீரோ அந்த மலைக்கே சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் திருக்காளத்தியப்பரை  வணங்குவீரானால் கண் ஒளியைப் பெறுவீர் என்றார்.அவ்வாறே சென்று வணங்கி கண் ஒளியைப் பெற்றார்.
 

அண்ணாமலையார்  தம்மிடம் ஈடுபாடுடைய மன்னனைக் கொண்டு குகை நமச்சிவாயர்க்கு பொன்னும் மணியும் அணியும் பல்லக்கும் அளித்துத் தனக்கு முன்னே செல்லுமாறு பணித்தருளினார்.

இந்நிலையில் குகை நமச்சிவாயருக்கு வயது நூறு ஆயிற்று. விதிப்படி ஆயுள் முடிந்த பின் இங்கிருந்தல் பிழை என்று முறைப்படி முன்பே அமைக்கப் பெற்றிருந்த சமாதிக்குழியில் தாமே இறங்கினார்.பரம்பொருளாகிய சிவபெருமான்  அசரீரியாக அங்கு வந்திருந்த பலரும் கேட்குமாறு '' அன்பனே! நீ இவ்வுலகில் மேற்கொண்டு நூறாண்டுகள் வாழ்வாயாக'' என்றுரைத்தருளினார். இறைவன் திருவுளப் பாங்கினையுணர்ந்த குகை நமச்சிவாயர், அப்பெருமானைப் பாடி மகிழ்ந்தார்.வேற்று மதத்தினரால் சைவத்திற்கு வந்த இன்னல்களை நீக்கி சைவத்தின் சிறப்பினை நிலைநாட்டினார்.

ஒருநாள் குகை நமச்சிவாயர்  அண்ணாமலையாரை வழிபட்டு தம் குகை நோக்கித் திரும்புகையில் பெண் ஒருத்தி தன் கணவனை இறக்க கதறி அழுதுகொண்டு நமச்சிவாயசுவாமிகள் முன் விழுந்து வணங்கி தன் கணவனை மீட்டுத் தர மன்றாடினாள். அந்தப் பெண்ணின் துயரைக்கண்ட சுவாமிகள் உள்ளமுருகி அண்ணாமலையாரின்  திருவடிகளை நினைந்து உருகி பாடினார். பின் அந்தப் பெண்ணை நோக்கிக் ''குழந்தாய்! அண்ணாமலையார் எனக்கு கொடுத்த நூறு ஆண்டுகளுள் எழுபத்தைந்து ஆண்டுகளை உனக்கும் உன் கணவனுக்கும் தந்தேன், உன் கணவன் உயிர்ப் பெற்று எழுவான் என்றார். அந்தப்பெண் நம்பிக்கையுடன் வீட்டிற்குச் செல்ல அவள் கணவன் உயிர் பெற்று எழுந்ததை கண்டு பெருமகிழ்ச்சி கொண்டாள். கணவனுடன் சென்று குகை நமச்சிவாய சுவாமிகளுடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். 


இப்படி குகை நமச்சிவாயர் அண்ணாமலையில் வாழ்ந்து வருங்காலத்தில் நகித் எனப்பெயர் கொண்ட மிலேச்ச மன்னன் ஒருவன் அங்கு  வந்தான். அவன் மதங்கொண்ட யானையை போன்று காணப்பட்டான். அவன் அழகுமிக்க பல பெண்களை கவர்ந்து காவலில் வைத்து அறநெறிக்கு மாறாக நடந்து வந்தான்.அவன் அழிவதற்குரிய காலம் வந்து விட்டபடியால், அண்ணமலையார் திருக்கோயிலுனுட்புகுந்து சில வருந்தத்தக்க செயல்களைச் செய்யதான் 

இவற்றை கண்ணுற்ற குகை நமச்சிவாயர்  மூன்று சுடர்களையும் மூன்று கண்களாகக் கொண்ட சிவபிரானுடைய நெற்றிக்கண்ணும் ஆழ்ந்த உறக்கம் கொண்டுவிட்டதோ'' என்று  பாடினார். அன்றிரவில் அண்ணாமலையார்  மிலேச்சன் கனவில் தவசியாகத் தோன்றி ஒரு படையினால் முதுகில் குத்தினார். மிலேச்சன் விழித்து எழ முதுகில் ஏதோ ஊறல் போல் அவனுக்குத் தோன்றியது. பிறகு அவ்விடத்தில் வேர்க்குரு தோன்றியது.பின் அவ்வேர்க்குரு முதுகுப் பிளவையாக உருக்கொள்ள வருந்தி
உடன் வந்த சில பெரியவர்களிடம் அதனைக் கூறினான்.அவர்கள் '' நீ இவ்வாலயத்திற்குள் இருத்தல் கூடாது'' என்றவுடன் கோயிலை விட்டு வெளியேறினான். பிறகு அருச்சகர்கள் கோயிலைத் தூய்மை செய்து முறையாக வழிபாடு நடைபெறச் செய்தனர். பிறகு, அந்த மிலேச்சன் பிளவை நோயினால் துன்பமுற்றுப் புழுக்கள் பெருகிடத் தாங்கொணாதவனாகி, ஓரிரவில் துடிதுடித்து இறந்தான். இதனைக் கேள்வியுற்ற மக்கள் பெருமகிழ்ச்சியுற்றனர். அவன் இறந்த தினத்தன்று மக்கள் இராவணன் இரணியன் போன்றவர்கள் அழிந்த நாளில் உலகம் எவ்வாறு மகிழ்ந்ததோ அவ்வாறு மகிழ்ந்தனர்.

கருவுற்ற காலத்தில் விதிக்கப்பெற்ற நூறு வயது போலவே பிறகு சிவபிரான் அளித்த நூறு வயதும் கழிந்து போனதை அறிந்து, தமக்கு எல்லாமுமாக விளங்கும் திருமலையில் இயற்றப் பெற்ற குழியில் புகுந்து  அங்கிருந்த அன்பர்களை நோக்கி, ''அடியேனை இவ்வுடல் என்று நினையாதீர். இவ்வுடல் நான் அல்லேன்'' என்று சொல்லிக்கொண்டே அருவம் ஆனார். பிறகு அங்கிருந்தவர்கள், அவ்விடத்தே இலிங்கம் அமைத்து வழிபாடாற்றினர்.


                                                                        அற்புதங்கள் தொடரும்


                             போற்றி ஓம் நமசிவாய 


                                   திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment