rudrateswarar

rudrateswarar

Thursday, April 11, 2013

ஐந்தெழுத்தின் மேன்மை- 5

                                       ஓம் நமசிவாய


ஐந்தெழுத்தின் மேன்மை- 5


திருமுறை.10 தந்திரம் 4 பதிகம் 2 


திருவம்பலச் சக்கரம் பாடல் 6



ஆலய மாக அமர்ந்த பஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தஅத் தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே.



இறைவன் தனக்கு இடமாக விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற திருவைந்தெழுத்து முதற்கண் அவன் அங்ஙனம் எழுந்தருளி இருந்த தூல நிலை போகப் பின்பு அவனுக்கு மிக உவப்பான இடமாக அறியப்படுகின்ற சூக்கும நிலையைத் தனக்கு இடமாகும்படி கொண்டு அதன்கண் மிக விரும்பி எழுந்தருளியிருக்கின்றான்


திருவம்பலச் சக்கரம் பாடல் 21


அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்துநின் றானே.




ஐந்தெழுத்து வழியாகவே சிவபிரான் வந்து அமர் கின்றான். அந்த ஐந்தெழுத்தினாலே அவனது பஞ்சாக்கர மந்திர எழுத்துக்களும் அமைகின்றன. ஆகவே, அ ,ச அவ்விரு திற எழுத்துக்களாலும் அமைகின்ற சக்கரங்களிலே அவன் தங்கி நிற்கின்றான்.


திருவம்பலச் சக்கரம் பாடல் 27



மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத்துள் நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத்தாம்அவர் தாமே.




ஆன்மாக்கள்  சிவமாக வேண்டியே சிவபிரானால் கொடுக்கப்பட்டது இந்த மனிதப்பிறவி. ஆகவே அதில் நிற்கும் ஆன்மா  மந்திர ஆன்மாவாய் விளங்குதலை அறிந்து அப்பெருமான் மகிழ்வதைக் காணக்கூடியவர்கள், எல்லா மந்திர வடிவானவன் ஆனாலும்  சிறப்பாகத் திருவைந்தெழுத்துள் மறைந்து நிற்கும் அப்பெருமானது திருவைந்தெழுத்தே தாமாய் நிற்பவர் , பிறரல்லர்.


திருவம்பலச் சக்கரம் பாடல் 33


பரமாய அஞ்செழுத் துள் நடு வாகப்
பரமா யநவசிம பார்க்கில் மவயநசி
பரமா யசியநம வாபரத் தோதில்
பரமாய வாசி மயநவாய் நின்றதே.
                    


திருவைந்தெழுத்து  ஐம்பத்தோர் எழுத்துக்களின் இடையில்  நிற்கும் போது  நெடுக்காயினும் குறுக்காயினும் நடுவரிசை யுள்ளே நிற்கும். ஆகவே, அதன்பொருட்டு ஏனைய இடங்களில் எழுத்துக்கள் நடுவரிசைக்கு மேல் வரிசையில் (2) `ய ந வா சி ம`` என்றும், அதற்கு மேல் வரிசையில் (3) `ம வா ய ந சி` என்றும், அடி வரிசையில் (4) `சி ய ந ம வா` என்றும் அதற்கு மேல் வரிசையில் (5) `வா சி ம ய ந` என்றும், மாறி நிற்பனவாம்.

அது என்ன ஐம்பத்தோரெழுத்து? வடமொழி எழுத்துக்கள் அ முதல் க்ஷ வரை  ஐம்பத்தியோர் எழுத்துக்கள் அவை அனைத்தும் ஒவ்வொரு எழுத்தும் மந்திரம் என்று சொல்லி தமிழில் அக்ஷ -ரம்  என்று  சொல்வார்கள் .மந்திர தகடுகளை  அக்ஷ -ரம் (அட்சரம்) என கூறும் வழக்கம் இதில் இருந்து தோன்றியதே 



திருவம்பலச் சக்கரம் பாடல் 53


அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின் றானே.



சிவபெருமான் பஞ்சபூதங்களைப் படைத்தும், எண்பத்து நான்கு நூறாயிர வகைப்பிறவி களான உடம்புகளையும் உயிர்கட்குத்தந்தும்   அவைகளைக்   காத்தும், அவ்வுயிர்கள் தன்னை மனம் வாக்கு காயங்களால் வழிபட்டு நலம் பெறும் பொருட்டுத்  திருமேனி  கொண்டு எழுந்தருளியிருப்பதும் ஆகிய எல்லாமே திருவைந்தெழுத்தாலேயாகும்                    



திருவம்பலச் சக்கரம் பாடல் 67


அஞ்சுக அஞ்செழுத்துண்மை அறிந்தபின்
நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுஎன்று சாற்றுகின் றேனே.
                    


ஐந்து மலங்களும் நீங்கிப் போகும்படி அஞ்செழுத்தின் பொருளை எவரேனும் அறிந்தபின், இறைவன் அவர்களது நெஞ்சத்தில் நிரம்பி விளங்குவான். அவர்களது உறைவிடத்திற்கும் `அழிவு` என்பது உண்டாகாது. ஆகையால், இந்த மந்திரமே யாவர்க்கும் புகலிடமாகும். நான் உண்மையாகவே சொல்லுகின்றேன் இதில் சிறிதும் பொய்யில்லை என்று திருமூலர் அருளியுள்ளார் 
                                                               
                          திருச்சிற்றம்பலம் 
                      போற்றி ஓம் நமசிவாய


சிவனடிமைவேலுசாமி 
                   

No comments:

Post a Comment