rudrateswarar

rudrateswarar

Friday, April 12, 2013

ஐந்தெழுத்தின் மேன்மை- 6

                                   ஓம் நமசிவாய


ஐந்தெழுத்தின் மேன்மை- 6


திருநாவுக்கரசு சுவாமிகளைக் கொல்வதற்கு பலரையும் கொன்று நகரம் கலக்கிய மத யானையை  சமணர்கள் அனுப்பினார்கள் . அது  ஆண்ட அரசை வணங்கி அஞ்சி மீண்டு   ஏவியவரையே கொன்று சென்றது . அது கண்ட அமணர்கள் ஆராய்ந்து அப்பரைக் கல்லொடு கட்டிக் கடலிற் பாய்ச்ச முடிவு செய்து   அரசன் இசைவு பெற்று கடலருகில் சென்றனர் . நாவுக்கரசரும் திருநின்ற செம்மையுள்ளம் சிறப்பச் சென்றார் . மன்னன் சொன்னபடி முடித்து அப்பாதகர் மீண்டனர் மெய்த்தொண்டரான அப்பர் சுவாமிகள் இறைவரை சிவனஞ்செழுத்தும் துதித்துப் பாடியது இத்திருப்பதிகம். பதிகம் பாடியதும் கல்லே தெப்பமாக கரை 
ஏகினார் இதைவிட எளியநடையில்  பதிகம்  பாடி மக்களை நெறிப்படுத்த  நாவுக்கரசு  பெருமானை தவிர யாரால் முடியும் . எம்பெருமான் மிக சரியாக பெயர் 
சூட்டியுள்ளார் .ஐந்தெழுத்தின் மேன்மையை 
இனியும் புரிந்து கொள்ளாதவர்கள்  கனியிருப்பக் காய் கவர்ந்தவர்களே                    


திருமுறை. 4 பதிகம் 11

பதிகப்பலன் 

எதிரிகளை உதிரிகளாக்கும் விலங்குகளால் நேரும் துன்பம் விலகும்  சகல துன்பங்களும் விலகும்

 

                                                   திருச்சிற்றம்பலம் 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கை தொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.


பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.


இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.


வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.


சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.


வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.


இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.


முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து
ஏத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
                                       
                             திருச்சிற்றம்பலம்
                        போற்றி ஓம் நமசிவாய 

சிவனடிமைவேலுசாமி 

No comments:

Post a Comment